எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, February 28, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! தாண்டவ விளக்கங்கள்!

நடராஜத் தத்துவத்தை ஆழ்ந்து கவனிக்குங்கால் பேரொளியான ஈசன் ஒரு தீச்சக்கரம் சுழல்வது போலத் தன் கைகளை வீசிக்கொண்டு, நிலம் , நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்துக்கும் தானே ஒரு சாட்சியாய்த் தோன்றுவதை உணரலாம். வீசும் கைகளின் புயல்வேக அசைவு காற்றையும், (சிலர் சுவாசம் என்றும் சொல்வார்கள்) சூரிய, சந்திர, நெற்றிக் கண்கள் அக்னி ரூபமாகவும், உடலே நிலமாகவும், தலையில் இருக்கும் கங்கையே நீராகவும், செவிகள் ஆகாயமாகவும் குறிப்பிடப் படும். மேற்சொன்ன பஞ்ச பூதங்களில் நாட்டியம் இல்லாத எதுவுமே இல்லை. காற்று தென்றலாகவும், சுழற்காற்றாகவும் நடை போட்டால், தீச்சுடரோ பலவேறு விதங்களிலும், வண்ணங்களிலும் நெளிந்து நடனமாடும். பூமியோ எல்லாவற்றிற்கும் மேல் வெடிப்போசையின் மூலம் தன் நடனத்தை நிகழ்த்துகிறது. நீரோ கடல் அலைகளால் தன் நாட்டியத்தைக் காட்டினால் விண்ணோ, அதிரும் இடியோசையிலும், கொட்டும் மழையிலும், வீசும் காற்றிலும், சூரிய, சந்திர, நக்ஷத்திரங்கள் மூலமும் தன் அளப்பரிய சக்தியைக் காட்டுகிறது.

இவ்வாறு இறைத் தத்துவம் பல்வேறு விதங்களில் தன் இருப்பை நமக்குக் காட்டி வருகிறது. அனைத்துமே ஒழுங்கான ஒரு இயக்கமாக இருப்பது எங்கனம்? நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா? ஈசனின் பல்வேறு நாட்டியக் கோலங்களையே இதற்குக் காரணமாகச் சொல்லுவார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உள்ளர்த்தமும் உள்ளது. ஊர்த்துவ தாண்டவம் என்பது யோகநிலையில் மேல்படியைச் சுட்டிக் காட்டுவது என்பதைப் போல ஒவ்வொரு தாண்டவத்திற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது. இவற்றில் சிதம்பரத்தில் இருக்கும் ஆனந்த நடராஜரை ஆத்ம ஸ்வரூபி என்றால் மற்ற இடங்களில் காணப்படும் ஒவ்வொரு கோலத்துக்கும் ஒவ்வொரு தத்துவப் பொருள் உண்டு. இதில் ஏற்கெனவே திரிபுர சம்ஹாரத்தில் ஆணவம்,, கன்மம், மாயை என்னும் மும்மலத்தின் தாக்கத்தால் தன் நிலை மறந்த அரக்கர்களைக் குறித்துப் பார்த்தோம். திரிபுர தாண்டவம் என்னும் அந்தத் தாண்டவத்தில் திரிபுரத்தை ஈசன் எரித்தான் என்பதை உண்மையாகவே ஒரு நகரத்தை எரித்தான்; அசுரர்களைக் கொன்றான் என்ற நேரடிப் பொருள் கொண்டால் அது முழுத் தவறு. இங்கே கொல்லப்படுவது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும். எரிக்கப்படுவது இவை மூன்றுமே. இங்கே அக்னியாகச் சுட்டப்படுவது நம்முடைய தவமாகிய அக்னி. இந்த யோகநெறியுடன் கூடிய தவாக்னியில் மும்மலங்களும் சுட்டுப் பொசுக்கப் படுகின்றன என்பதே உள்ளார்ந்த பொருளாகும்.

அடுத்தது பிரம்மாவின் தலையைக் கொய்தல். இதற்கும் உள்ளார்ந்த அர்த்தம் உண்டு. மூலாதாரத்தில் தோன்றும் மூலாக்னியை மேலெழுப்பி சஹஸ்ராரத்துக்குக் கொண்டு போகவேண்டும். அதற்குத் தடையாக இருப்பதோ பிரம்மா அதிபதியான சக்கரமாக இருக்கும் சுவாதிஷ்டானச் சக்கரம். இங்கேயே சிருஷ்டித் தொழில் நடைபெறவேண்டி பிரம்மா துணை புரிகிறார். ஜீவனுக்கு இதிலேயே மனம் ஆழ்ந்து போகாமல் காத்துத் தடுக்க வேண்டும். மேலும் பிரம்மாவுக்குத் துணையாக இருப்பவரும் மாயன் எனப்படும் விஷ்ணு. அவரோ மணிபூரகத்தில் இருந்து உலக மாயைகளில் மனதைச் சிக்க வைப்பார். இவர்கள் இருவரிலிருந்தும் சீவனை விடுவித்து சஹஸ்ராரத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதே பிரம்மாவின் சிரச்சேதமாகச் சொல்வதுண்டு. இதற்கு மனம் மிகவும் பக்குவப் பட வேண்டும். அத்தகைய பக்குவப்பட்ட ஆன்மாக்களை இந்த சிருஷ்டி மோகத்திலிருந்து தடுத்து மேலே கொண்டு போவதே பிரம்ம சிரச்சேதம் ஆகும்.

நிஜமாகவே பிரம்மாவின் தலையை வெட்டிவிட்டார் என அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது.

No comments: