எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, May 15, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் தெப்போத்சவம்! சில தகவல்கள்!

அரங்கனின் தெப்போற்சவம் குறித்துக் கிடைத்த சில தகவல்களை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.  பாண்டியர்களின் காலத்தில் இது ஆரம்பித்திருக்கிறது. திருப்பள்ளியோடத் திருநாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்தது. "பொன் வேய்ந்த பெருமாள்" என்னும் பட்டப்பெயர் கொண்ட சுந்தரபாண்டியன் காலத்தில் சித்திரை மாதம் தான் நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது காவிரியில் இப்போது போல் இல்லாமல் நீர் நிறைய ஓடிக் கொண்டிருந்த காலம். ஆகவே திருக்காவிரியில் பெரியதாக ஊருணி ஒன்று எடுப்பித்து அதிலே காவிரி நீரைப் பாய்ச்சி முத்துக்கள், பவளங்கள் பதித்த திருக்காவணம் (இங்கே காவணம் என்னும் சொல் பந்தலைக் குறிக்கும். முன்னாட்களில் பந்தல் என்னும் சொல் யாரேனும் இறந்தால் அந்த வீடுகளில் போடுவதை மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது.  திருமணம், விழாக்கள் போன்ற சுபகாரியங்களுக்குப் போடுவதைக் காவணம் என்றோ கொட்டகை என்றோ அழைத்து வந்திருக்கிறார்கள். இங்கே இறைவனுக்காகப் போடப் பட்டதால் திருக்காவணம் என்றாகி விட்டது.) கட்டி இருக்கின்றனர். பின்னர் திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணுவித்து அதிலே உபய நாச்சிமார்களுடன் அரங்கன் (அப்போதைய பெயர் அழகிய மணவாளர்) எழுந்தருளி தெப்போத்சவம் கண்டிருக்கிறான்.

பின்னர் மெல்ல மெல்ல ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று நடைபெற்று வந்திருக்கிறது. அப்படி ஒரு சமயம் திருப்பள்ளி ஓடத்திலே தெப்பத்திருநாள் கண்டருளும் சமயம் ஒரு சில மாந்திரீகர்களுடைய துர்மந்திரப் பிரயோகங்களால் தெப்பம் காவிரியின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த கூரநாராயண ஜீயர் சுவாமிகள் தம்முடைய வலக்கரத்தில் அணிந்திருந்த திருப்பவித்திரத்தை வலமாகத் திருப்பத் திருப்பள்ளி ஓடம் வெள்ளத்தை எதிர்த்து நிலை கொண்டது. சுதர்சன சதகம் இயற்றி ஶ்ரீசுதர்சனரையும் வேண்டினார். (இங்கே திருக்காவிரி என்று சொல்வது வட திருக்காவிரி அதாவது கொள்ளிடம் ஆகும்). அதன் பின்னர் அழகிய மணவாளப் பெருமாள் பிரச்னைகள் ஏதுமின்றி ஆஸ்தானம் கண்டருளினார்கள். இதன் பின்னர் அழகிய மணவாளரை அவ்வளவு தொலைவு அழைத்துச் சென்று தெப்போத்சவம் காண்பதில் உள்ள சிரமங்களை நினைத்துக் கூர நாராயண ஜீயர் அவர்கள் கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஓர் குளத்தை வெட்டச் செய்தார். அதிலே திருப்பள்ளி ஓடத்திருநாளை நடத்த ஆரம்பித்தனர். அதிலிருந்து தெப்பத்திருநாள் நடைபெறும்போதெல்லாம் விட்டவன் விழுக்காடு என்னும் பெயரில் பிரசாதம் ஶ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கூரநாராயண ஜீயருக்குப் பின்னர் கி.பி.1489 ஆம் ஆண்டில் கந்தாடை ராமாநுஜ முனி காலத்தில் அடையவளைந்தான் தெருவுக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டபமும் கட்டுவிக்கப் பட்டது. இந்தக் கந்தாடை ராமாநுஜ முனி என்பவர் விஜயநகர சாளுவர்கள் வீர நரசிம்மன் என்பவனுடைய தமையன் ஆவார். இவர் திருக்கோயிலின் கந்தாடை அண்ணனைத் தம் குருவாக ஏற்றதால் கந்தாடை ராமாநுஜ முனி என அழைக்கப்பட்டார். இவரும் இவருடைய சீடர்களும் திருவரங்கக் கோயில் வரலாற்றில் தனி இடம் பெற்றவர்கள். தற்காலத்தில் கந்தாடை மடத்தின் பட்டத்தை யாரும் அலங்கரிப்பதில்லை. முன்னர் கந்தாடை ராமாநுஜருக்கு மரியாதை செய்யும் பொருட்டு அவருக்கு அழகிய மணவாளர் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். தற்சமயம் இந்த மரியாதை நடைபெறுவதில்லை.

முதலில் சித்திரை மாதத்திலும் பின்னர் ஆடி மாதத்திலும் நடைபெற்று வந்த தெப்போற்சவம் விஜயநகரச் சக்கரவர்த்தியான கிருஷ்ணதேவராயர் காலத்தில் மாசி மாதம் நடைபெற்ற பிரம்மோத்ஸவத்தின் ஒரு வகை என்று சொல்கின்றனர். இத்திருநாள் இப்போது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.  பின்னர் கி.பி. 1535 ஆம் ஆண்டிலும், 1536 ஆம் ஆண்டிலும், 1539 ஆம் ஆண்டிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்வெட்டுக்களைப் பொறித்தது துளுவ வம்சத்து அரசன் ஆன அச்சுததேவ ராயர் காலத்தில் ஆகும். இதில் திருநாளின் இரண்டாம் நாளன்று விடாய் ஆற்றிக்கு அழகிய மணவாளப்  பெருமாள் அக்கச்சி அம்மன் தோப்புக்கு எழுந்தருளி இருந்திருக்கிறார். ஆறாம் திருநாளன்று தெப்போத்சவம் கண்டருளி இருக்கிறார். இந்தக் கல்வெட்டுக்கள் இப்போதும் ஶ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பக்கச் சுவரில் உள்ள நாயக்கர் சிலைகளுக்கு முன்பு உள்ளதாகத் தெரிய வருகிறது.

பிரம்மோத்சவம் போலவே இந்தத் தெப்போத்சவத் திருநாளும் நடைபெறுவதால் ஒன்பது நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள் திரு வீதி உலா வருகிறார். இப்போது எட்டாம் நாளன்று தெப்போத்சவமும் ஒன்பதாம் நாளன்று ஶ்ரீசடாரிக்குத் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்று அன்றிரவு பந்தக்காட்சியும் நடக்கும். தெப்போத்சவம் திதிகளின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இதற்குக் கொடியேற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் காலை வீதி உலாவில் பல்லக்கில் மட்டுமே எழுந்தருளுவார். வாகனங்கள் கிடையாது.  இதுவும் கிட்டத்தட்ட ஒரு வசந்தோத்சவம் போலவே கொண்டாடப் படுகிறது.  திருவிழாவின் நான்காம் நாள் மாலை வெள்ளி கருடனின் நம்பெருமாள் சேவை சாதிக்கிறார். மாசி மாத கருட சேவையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.

தகவல்கள் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம்

No comments: