எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, May 04, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

திருவரங்கத்திலிருந்து கிளம்பிய அரங்கன் ஊர்வலம் பின்னால் வருபவர்களுக்காகத் துளசிச் செடியின் இலைகளையும், சின்னச் சின்னக் கிளைகளையும் ஒடித்துப் போட்டுக் கொண்டே சென்றாலும் பலருக்கும் திசை மாறித்தான் போயிற்று. ஆகவே மேற்கே ஒரு குழுவும், கிழக்கே ஒரு குழுவுமாகச் சென்றனர். அரங்கனோடு சேர்ந்து போனவர்களோ திருச்சிராப்பள்ளி நகரைக் கடந்து தொண்டைமானின் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த இடத்தைத் தொண்டைமான் காடு என அந்நாட்களில் அழைத்தனர்.  வேதாந்ததேசிகர் இன்னமும் வந்து சேர்ந்து கொள்ளாதது குறித்து அனைவரும் கவலையிலும் ஆழ்ந்திருந்தனர்.

ஆனால் அந்தப் பகுதியில் வெகுநேரம் தங்க முடியாது. ஏனெனில் கள்வர் பயம் அதிகம். ஆனாலும் பிரதான சாலைகளின் வழி சென்றால் தாங்கள் கண்டுபிடிக்கப்படுவோம் என்னும் அச்சம் காரணமாகச் சுற்று வழியாகவே சென்றனர். வசதி படைத்தவர்கள் பல்லக்குகள், குதிரைகள் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள அதிகமான பயணிகள் கால்நடையாகவே சென்றனர். அவர்களில் சிலர் குழுக்குழுவாகப் பிரிந்து சென்றவர்கள் ஆங்காங்கே இடையில் தென்பட்ட தலங்களில் தங்கினார்கள். ஆனால் அரங்கனும், அவனுடன் சென்றவர்களும் மட்டும் எங்கும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர். இரு தினங்கள் சென்றும் ஶ்ரீரங்கத்திலிருந்து தகவல் ஏதும் இல்லை. ஆகவே சற்றுத் தங்கிச் செல்லலாம் என ஒரு இடத்தில் தங்கி விட்டார்கள்.

தங்கிய இடத்தில் இரவைக் கழித்த மறுநாள் ஶ்ரீரங்கத்திலிருந்து இரு ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டனர். ஶ்ரீரங்கத்தில் நடந்த கோர யுத்தம் பற்றியும் நகரமே பற்றி எரிந்ததையும், எல்லோரையும் கொன்று அழித்துவிட்டார்கள் என்பதையும் அவர்கள் விபரமாகச் சொல்லவே அனைவர் மனமும் துக்கத்தில் ஆழ்ந்து போயிற்று. திகைத்துப் போன உலகாரியரை அவர் சீடரான கூர குலோத்தமதாசர் தேற்றிச் சமாதானம் செய்து அனைவரும் விரைவில் அவ்விடத்திலிருந்து அகல வேண்டும் எனவும், இல்லை எனில் டில்லிப் படைகள் விரைவில் வந்து பிடித்துக் கொள்வதோடு அரங்கனையும் கைப்பற்றி விடுவார்கள் எனவும் சொல்ல உடனே அந்த இடத்திலிருந்து அந்த ஊர்வலம் அகன்றது.

மாலை மங்கும் நேரத்தில் தங்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கையில் ஈட்டிகளைத் தாங்கிய வண்ணம் வலுவான தேகத்துடனும் கொடிய மீசைகளுடனும் முப்பது கள்வர்கள் சூழ்ந்து கொண்டுவிட்டனர். தொண்டைமான் காட்டுப்பகுதியே கள்வர்களுக்குப் பிரசித்தம். வழிப்பறி செய்வதில் நிபுணர்கள் அவர்கள். ஊர்வலத்தில் வந்தவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர்.  கள்வர்கள் அனைவரும் அவர்களை நோட்டம் விட்டுப் பெட்டகங்கள் வைத்திருப்பதையும் கண்டுகொண்டனர். அந்தப் பெட்டகங்களில் என்ன இருக்கிறது என்று விசாரணையும் செய்ய ஆரம்பித்தனர்.

அரங்கனின் பொருட்கள், அவன் நகை நட்டுக்கள் என்று சொல்ல, என்ன அரங்கனா? அவன் எந்த ஊர்க்காரன்? எந்த நாட்டுக்கு ராஜா? என்றெல்லாம் கேலி பேசினார்கள். அரங்கம் என்ன, இந்த உலகுக்கே அவன் தான் ராஜா! திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான், ரங்கராஜன் எனப் பரிசனங்கள் சொல்ல, உலகையே காப்பவன் இங்கே இந்தக் காட்டுக்குள் நாங்கள் வசிக்கும் இடம் ஏன் வந்தான்? பெட்டகங்களைத் திறவுங்கள் எனக் கள்வர் தலைவன் கட்டளை இட்டான். பயந்து கொண்டே பெட்டகங்களைப் பரிசனங்கள் திறந்து காட்டினார்கள்.  பொன்னும், மணியும், முத்தும், பவளமும், வைர வைடூரியங்களும், தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட ஆபரணங்களும் கண்களைக் கவர்ந்தன அவற்றை ஆசையுடன் தன் கைகளால் எடுத்துப் பார்த்தான் கள்வர் தலைவன்.

No comments: