எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 29, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

இங்கே

அரங்கனைக் கள்வர்கள் நடுவே விட்டு விட்டு வந்து மாதங்கள் மூன்று ஆகிவிட்டன. அரங்கன் என்ன ஆனான் என்பதைப் பார்ப்போமா?

சுற்றி வளைத்துக்கொண்ட கள்வர்களின் தலைவன் அவர்கள் சொல்வதை நம்பாமல் பெட்டகங்களைத் திறந்து காட்டச் சொன்னான். முதல் பெட்டகத்தில் அரங்கனின் நகைகள், அணிமணிகள், ஆபரணங்கள், வைரங்கள், பதக்கங்கள், ரத்தின ஹாரங்கள், முத்து நகைகள், பவள மாலைகள் வெள்ளியிலும், பொன்னாலும் செய்யப்பட்ட கங்கணங்கள் எனக் காணப்பட்டன. அவற்றைக் கண்ட கள்வர் தலைவன் கண்களில் வெறியே மிகுந்தது. மிகவும் ஆசையுடன் அவற்றைத் தன் கைகளால் துளாவிப் பார்த்தான். அப்போது அவன் பின்னே பிள்ளை உலகாசிரியர் வந்து அவனை "அப்பா!" என அழைத்தார்.  அவனையே பார்த்துக்கொண்டு வந்த அவர் மேல் சந்தேகம் கொண்ட கள்வர் தலைவன் தன் இடையிலிருந்து வாளை உருவினான். கைகளில் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டான்.

அதைக் கண்டு பயப்படாமல் பிள்ளை உலகாரியர், "அப்பா, உன் வாளைக் கண்டு நான் பயப்படவில்லை. எதிர்வாளைக் கொண்டு வரவும் மாட்டேன். வீரனான நீ வாயால் பேசாமல் வாளை உருவி வாளால் பேசப்பார்க்கிறாயே!" என்று சொன்னார். அவர் மேல் கோபம் வந்தாலும் கள்வர் தலைவனுக்கு ஒரு மரியாதையும் இருந்தது. அது அவர் கண்களில் தெரிந்த ஒளியாலா அல்லது முகத்தின் தேஜஸாலா என்று விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவரை விடக் கூடாது எனத் தீர்மானித்து, "யார் நீங்கள்? எந்த அரசனுக்கு இந்தக் கப்பம் கொண்டு செல்கிறீர்கள்?" என்று வினவினான்.  பிள்ளை உலகாரியர் அவனுக்கு பூலோக வைகுண்டமாம் ஶ்ரீரங்கத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அங்கே உறையும் ரங்கநாதனைக் குறித்து வர்ணித்தார். அத்தகைய ரங்கராஜனின் பக்தர்கள் தாங்கள் எனவும் இந்தச் சொத்தெல்லாம் அரங்கனின் சொத்துக்கள் என்றும் எடுத்துச் சொன்னார்.

நல்லவேளையாகக் கள்வர் தலைவன் அரங்கனைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அவருடைய சொத்துக்கள் ஏன் காட்டுக்கு வரவேண்டும் என அவனுக்குப் புரியவில்லை. அதோடு இவர்கள் அவனை ஏமாற்றுவதாகவும் நினைத்தான். அரங்கன் சொத்துக்களை இவர்கள் திருடிக் கொண்டு ஓடுவதால் தான் நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் இந்தக்காட்டுக்குள் வந்திருக்கின்றனர் என்றே நினைத்தான். அப்படியே அவர்களிடம் கேட்கவும் செய்தான். அதற்குப் பிள்ளை உலகாரியர் ஶ்ரீரங்கத்துக்குள் அந்நியர்கள் புகுந்ததை அவன் அறியவில்லை என்று புரிந்து கொண்டார்.

அந்நியப் படையெடுப்பையும் அரங்க நகரையே அவர்கள் பாழாக்கியதையும் எடுத்துச் சொன்னார். அரங்கனின் சொத்துக்களுக்காக அவர்கள் சுற்றி அலைவதையும் அரங்கனையே ஒரு முறை எடுத்துச் சென்றதையும் மறுமுறையும் எடுத்துச் செல்லாமல் இருக்கும்பொருட்டே அரங்கனையே அவர்கள் எடுத்துக் கொண்டு அவன் சொத்துக்களோடு தென்னாட்டை நோக்கிப் போவதையும் கூறினார். அரங்கன் இப்போது இந்தக் காட்டுக்குள் தான் இருக்கிறான் என்றும் கூறினார். அரங்கன் காட்டுக்குள்ளே இருப்பது தெரிந்ததும் கள்வர் தலைவன் ஆச்சரியம் அடைந்தான். பதட்டத்துடன், "எங்கே அரங்கன்? எங்கே அரங்கன்?" என்று கேட்டான். பரிசனங்களுக்குப் பிள்ளை உலகாரியர் சமிக்ஞை செய்ய அவர்களும் திருச்சின்னங்களை ஊதிக்கொண்டும், பிரபந்தங்களைப் பாடிக் கொண்டும் திருப்பல்லக்கில் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தனர்.

அரங்கனை நேரில் கண்ட கள்வர் தலைவன் திகைத்து நின்றான். அரங்கன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அனைவரும் செல்வார்கள். ஆனால் அவன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அந்த அரங்கனே வந்திருக்கிறானே!  இது நம் பூர்வ புண்ணியம் தான் என மகிழ்ச்சியுற்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் அரங்கனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார்.  அதி மோகனமாகப் புன்முறுவலுடன் காணப்பட்ட அழகிய மணவாளரைக் கண்டு வியந்தான் கள்வர் தலைவன்.  அவன் கண்களில் கண்ணீர்  சுரக்கத் தன் வாளைக் கீழே போட்டுவிட்டு சாஷ்டாங்கமாகக்  கீழே விழுந்து நமஸ்கரித்தான். ரங்கா, ரங்கா என்று கூவினான். பாபம் செய்ய இருந்தேனே! எனப் புலம்பினான். தங்கள் எல்லை வரை அரங்கனுக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் காப்பதாக வாக்களித்தான்.

3 comments:

ஸ்ரீராம். said...

என்ன ஒரு மனோமாற்றம்...

”தளிர் சுரேஷ்” said...

கள்வன் மனங்கவர்ந்த ரங்கனை சேவிப்போம்!

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீரங்கனை மீண்டும் காண மகிழ்ச்சி. நேற்று கோவிலில் தேரில் திருமலையானைப் பார்த்தாலும் அதே
முறுவல் தான். அடியார்கள் இருக்கையில் அரங்கணுக்கு ஏது வருத்தம். அரங்கன் இருக்கையில் அடியார்களுக்கு ஏது வருத்தம்.