எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 08, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரனிடம் தன் உணர்ச்சிகளின் எதிரொலியை எதிர்பார்த்த வாசந்திகா ஏமாற்றமே அடைந்தாள். பின்னர் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள். குலசேகரனுக்கு அவள் மனம் புரிந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஊர்வலம் கிளம்ப ஆரம்பித்து விட்டது. ஆகவே அதில் போய் இணைந்து கொண்டான். இரண்டு நாட்கள் இடைவிடாப் பயணம் செய்து மூன்றாம் நாள் எங்கே தங்குவது என யோசிக்கையில் பிள்ளை உலகாரியரின் உடல்நிலை மோசமான செய்தி பரவியது. காட்டு மார்க்கத்தைக் கைவிட்டு விட்டு அருகில் உள்ள ஊரான ஜோதிஷ்குடியை நோக்கிப் பயணம் ஆனார்கள். இந்த ஜோதிஷ்குடி என்பது தற்போது காளையார் கோயில் என்னும் பெயரில் இருப்பதாகத் தெரிய வருகிறது. கிட்டத்தட்ட  மதுரை அருகில் உள்ளது. கொடிக்குளம் என்னும் பெயரிலும் வழங்கி வருகிறது.

இங்குள்ள கோயிலில் வேதநாராயணர் என்னும் பெயருடன் பெருமாள் அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலின் பின்னுள்ள குகையில் தான் நம்பெருமாள் என்று பிற்காலத்தில் பெயர் சூட்டப்படப் போகும் அழகிய மணவாளரை ஒளித்து வைக்கச் சொன்னார் பிள்ளை உலகாரியர். எனினும் இங்கும் அந்நியர்கள் பெருமாளைத் தேடி வந்ததாகச் சொல்கின்றனர். இங்குள்ள மலை உச்சிக்குப் பெருமாளைத் தன் கைகளால் தூக்கிக் கொண்டு பிள்ளை உலகாரியர் சென்று விட்டதாகவும் சொல்கின்றனர். பின்னர் எதிரிகள் அவ்விடம் விட்டுச் சென்றதும் திரும்பும் போது தவறிக் கீழே விழுந்து விட்டார் என்கின்றனர். அப்படி விழும்போது  அழகிய மணவாளருக்குச் சேதம் ஏற்படக் கூடாது என அவரை மார்போடு அணைத்தவண்ணம் மல்லாக்க விழுந்திருக்கிறார். ஆகையால் அவருக்கு முதுகில் பலத்த அடி பட்டிருக்கிறது. இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமாகி ஆனி மாதம் ஜேஷ்ட சுத்த துவாதசி வளர்பிறையில் திருநாடு எய்தினார் என்கிறார்கள். சீடர்களிடம் அழகிய மணவாளரை ஒப்படைத்துப் பாதுகாக்கும்படியும் உரிய சமயத்தில் ஶ்ரீரங்கத்தில் சேர்ப்பிக்கும்படியும் சொல்லி இருக்கிறார். இவருக்கு ஓர் தனிச் சந்நிதி பிற்காலத்தில் காளையார் கோயில் என்னும் ஜோதிஷ்குடி என்னும் கொடிக்குளத்தில் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

விதிமுறைப்படி அரங்கனின் பரிவட்டம், மாலைகள்  போன்றவற்றை உலகாரியருக்குச் சார்த்தி அவர் உடலுக்கு முறைப்படியான மரியாதைகள் செய்து அந்திமக் கிரியைகள் செய்து முடித்தார்கள். ஒரு மாதம் அங்கேயே தங்கி இருந்து உலகாரியருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் முறைப்படி செய்து முடித்தார்கள். கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டாலும் யாருக்கும் எங்கே போவது, எங்கே தங்குவது என்றே புரியவில்லை. இத்தனை நாட்களாக உலகாரியர் அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார். திருவரங்கத்துக்குச் சீக்கிரம் திரும்பி விடலாம் என நினைத்துக் கிளம்பிய இந்தப் பயணம் இத்தனை நாட்கள் ஆகியும் திருவரங்கம் செல்லும்படியான நிலையில் இல்லை. வழியெங்கும் தில்லி துருக்கர்கள் ஆங்காங்கே தங்கி நாடு, நகரங்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் எங்கே செல்வது?

மதுரை அருகே இருப்பதால் அங்கே செல்லலாம் எனச் சிலர் விருப்பமாக இருந்தது. இன்னும் சிலர் நெல்லைச் சீமைக்குப் போனால் பாதுகாப்பு என நினைக்கக் கடைசியில் ராமேஸ்வரத்திற்கும் மதுரைக்கும் இடையே தென் திசையில் பயணம் செய்ய முடிவானது. இரு நாட்கள் பயணம் செய்தார்கள். மூன்றாம் நாள் பயணத்தில் எதிரே ஓர் சிவிகையும் அதைச் சுற்றிப் பரிவாரங்களும் வருவது தெரிந்தது. பரிவாரங்கள் அனைவருமே பெண்களாகவும் இருந்தனர்.  அந்தப் பரிவாரங்களில் உள்ள சில பெண்கள் அரங்கன் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி அவர்கள் யார், எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்தனர். எங்கே போகிறார்கள் என்றும் விசாரித்தனர்.  அப்போது பேச்சுக்குரல் கேட்டுப் பல்லக்கில் இருந்து ஓர் பெண்மணி கீழே இறங்கினாள். நடுத்தர வயதுள்ள அவள் ராஜகுலத்தைச் சேர்ந்தவள் போல் காணப்பட்டாள்.

அந்தப் பெண்மணி தான் மதுரை அரசர் பராக்கிரம பாண்டியனின் பட்டத்து ராணி உலகமுழுதுடையாள் என்னும் பெயர் கொண்டவள் என்றும் மதுரையையும் தில்லித் துருக்கர் சூழ்ந்து கொண்டு போரிட்டதாகவும் தெரிவித்தாள். தீரத்துடன் போரிட்ட பாண்டிய நாட்டு மறவர்களுக்கும் அரசருக்கும் துர்க்கதி நேரிட்டு விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தாள்.  என்ன ஆயிற்று என விசாரித்த ஊர்வலத்தார் பாண்டிய மன்னர் இறந்துவிட்டாரா என்றும் வினவினார்கள். அதற்கு அவள் பாண்டியரை தில்லி வீரர்கள் சிறைப்பிடித்துச் சென்று விட்டதாகத் தெரிவித்தாள். மதுரை நகரில் உள்ள மக்கள் பெரும்பாலோர் ஊரை விட்டுச் சென்று விட்டதாகவும் தாங்களும் அதனால் தான் ஓடி வந்து விட்டதாகவும் கூறினாள்.

பின்னர் அவள் ஶ்ரீரங்கத்தின் நிலைமைக்கும் அரங்கனின் தற்போதைய நிலைமைக்கும் மனம் வருந்தி விட்டுத் தன் ஆபரணங்களை எல்லாம் கழற்றி அரங்கன் செலவுக்கும், சாப்பாட்டுக்கும் இருக்கட்டும் என்று கொடுத்தாள். கையில் இருந்த பொருளை எல்லாம் இழந்து விட்டு அரங்கனின் ஒரு வேளை நிவேதனத்துக்குக் கூடப் பொருளில்லாத நிலையிலும் அவர்கள் அந்த நகைகளை வாங்க மறுத்தனர். அரசகுலத்தாரின் உதவி தேவையில்லை என்றும் கூறினார்கள். அதற்கு ராணியோ அது தன் சொந்த நகைகள், பாரம்பரியச் சொத்து என்று கூறி வாங்கச் சொல்லி வற்புறுத்த வாங்கிக்  கொண்டார்கள். அதன் பின் ராணி புறப்பட்டுச் சென்று விட்டாள்.  அரங்கன் ஊர்வலம் தன் பாதையில் தொடர்ந்தது.

நான்காம் நாள் ஓர் சிற்றாற்றுப் படுகையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓர் சலசலப்புக் கேட்க சுற்றும் முற்றும் பார்த்தவர்களுக்கு ஆற்றின் கரையில் ஓர் உயரமான விளிம்பின் மேல் தில்லி வீரர்கள் குதிரையில் அணி வகுத்து நிற்பதைக் கண்டார்கள். திடுக்கிட்ட பரிசனங்கள் தாறுமாறாக ஓட ஆரம்பித்தனர். தில்லி வீரர்கள் உடனே ஆற்றில் இறங்கி அவர்களைத் தொடர முனைந்தார்கள். பரிசனங்கள் ஓட்டமாக ஓடினாலும் அரங்கன் பல்லக்கைத் தூக்கி வந்தவர்களால் அப்படி விரைவாகச் செல்ல முடியவில்லை. பின் தங்கி விட்டார்கள். அதற்குள் ஆற்றில் இறங்கி விட்ட தில்லி வீரர்கள் பின் தொடரத் தொடங்கி விட்டார்கள். அரங்கன் கதி என்னாகுமோ என அனைவரும் கலங்கும் சமயம் குலசேகரன் உருவிய வாளோடு அரங்கன் பல்லக்கை நெருங்கி அரங்கனைப் பீடத்தோடு சேர்த்துக் கட்டி இருக்கும் கயிற்றின் பிணைப்பைத் துண்டித்தான். இரு நாச்சியார்களின் பிணைப்பையும் துண்டித்தவன். நாச்சியார்களை ஶ்ரீபாதம் தாங்கிகள் இருவரிடம் கொடுத்து எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து செல்லும்படி கூறினான்.

பல்லக்கை அப்படியே விட்டுவிடச் சொல்லி விட்டு அரங்கனை அவன் தன் கைகளில் எடுத்துக் கொண்டான். மார்போடு அணைத்துக் கொண்டு அங்கிருந்த மச்சக்காரனின் குதிரையில் ஏறி குதிரையை விரட்டி அடித்தான். குதிரை வேகமாகப் பறந்தது! குலசேகரனும் பறந்தான்.

முதல் பாகம் முற்றியது!





3 comments:

ப.கந்தசாமி said...

அன்புள்ள சிவா அவர்களுக்கு, தங்களின் கைலாச யாத்திரையின் பதிவுச் சுட்டியை தயவு செய்து கொடுக்க முடியுமா?

Geetha Sambasivam said...

திரு கந்தசாமி அவர்களுக்கு, அது மின்னூலாக வெளி வந்துள்ளது. க்ரியேடிவ் காமன்ஸ் அல்லது கூகிள் புக் ஸ்டோரில் கிடைக்கலாம். எனினும் சுட்டியும் தருகிறேன்.

Geetha Sambasivam said...

https://aanmiga-payanam.blogspot.in/2006/09/30.html இதில் ஆரம்பம்!

https://aanmiga-payanam.blogspot.in/2007/02 இங்கே முடிவு!