எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, January 30, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

கிளம்பி விட்டது ஹொய்சள ராணியின் ராமேஸ்வர யாத்திரை! எட்டு மூடு பல்லக்குகள். ஆண், பெண் பயணிகள், சேடிகள், பணிப்பெண்கள், சமையல் செய்பவர்கள், மற்ற வேலைகள் செய்வோர் என ஒரு பெரிய பரிவாரமே ராணியுடன் கிளம்பியது! குதிரை ஓட்டத் தெரிந்தோர் குதிரைகளிலும், மற்றவர் மாட்டு வண்டிகளிலும், சிலர் நடந்தும் தங்கள் பயணத்தைத் துவக்கினர். பொதி வண்டிகள் பிரயாணத்துக்குத் தேவையான பொருட்களைச் சுமந்து கொண்டு வந்தன. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டும் கவனித்துக்கொண்டும் குலசேகரனும் குறளனும் பரிவாரங்களுடன் சென்றார்கள். முதல் நாள் மாலையில் ஒரு மணற்பாங்கான சமவெளியில் பரிவாரங்களுடன் தண்டு இறங்கினார்கள். எல்லோரும் உற்சாகமான மனோநிலையில் இருந்ததால் ஆடல், பாடல், விளையாட்டுக்களில் ஈடுபட்டனர். குலசேகரனையும் குறளனையும் கூட அழைத்தனர். எல்லோருமாகச் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினார்கள். குலசேகரன் கண்களையும் கட்டினார்கள். அவன் இரு கைகளையும் விரித்துக் கொண்டு தேடிச் சென்றவன் அவ்வழியாக வந்த ராணியின் கைகளை இறுக்கமாகப் பிடித்து விட்டான்.

குலசேகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது! இதென்ன பெண் பிள்ளை போல் இருக்கிறதே என நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்த கட்டுக்களை அவிழ்த்தான். எதிரே ஹொய்சள ராணி! அவள் துளுவ நாட்டு இளவரசியாம். ஹொய்சள மன்னர் துளுவ நாட்டையும் தன் நாட்டோடு இணைக்க வேண்டி அவளைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். அவள் பெயர் கிருஷ்ணாயி தாயி என்பதாகும். திருமணம் நடந்து 2 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால் அவள் இப்போது ராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டிருந்தாள்.  இதெல்லாம் குலசேகரன் நினைவில் வந்தன. ஆனால் அந்த ராணியோ அவன் எதிரே கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள்.  குலசேகரனைப் பார்த்து எதிரே யார் வருவார்களோ என்னும் எண்ணத்தோடு விளையாட வேண்டாமா எனக் கடுமையாகக் கேட்டாள். பின்னர் அவன் பதிலை எதிர்பார்க்காமல் வெடுக்கென்று திரும்பிச் சென்று விட்டாள். குலசேகரன் மனம் வேதனையில் ஆழ்ந்தது. துயரத்தில் ஆழ்ந்த அவனைக் குறளன் சமாதானம் செய்தான்.

ஆனால் குலசேகரன் மனதுக்குள்ளாக ஒரு சந்தேகம். திருவண்ணாமலையில் சாலையில் பார்த்த பெண்ணின் விழிகளும், தான் கோட்டைக் கிடங்கில் பார்த்த பெண்ணின் விழிகளும் ஒன்றாக இருந்தன. அந்தப் பெண்ணோ குலசேகரனுக்கு நல் உபதேசம் தானே செய்தாள்! அப்போது அந்தப் பெண் இவள் இல்லையா? அவள் வேறு இவள் வேறா? குழப்பம் அடைந்தான் குலசேகரன். இரவு உணவருந்திவிட்டு உட்கார்ந்திருக்கையில் எங்கிருந்தோ யாழின் இன்னிசையுடன் கூடிய கதா காலட்சேபம் கேட்டது. ஒலி வந்த திக்கில் நடந்தவனுக்கு அங்கே ஹேமலேகாவைக் கண்டதும் தூக்கி வாரிப் போட்டது. அவள் அங்கே கூடி இருந்த மக்களுக்கு பாரதக் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளும் இந்தப் பரிவாரங்களுடன் வந்திருப்பதைக் குலசேகரன் அறிய மாட்டான். என்றாலும் தனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண் இங்கே இருப்பதை அறிந்து உவகை கொண்ட குலசேகரன் அங்கேயே அமர்ந்து அவள் கதை சொல்லுவதைக் கேட்டுக் கொண்டான்.

சற்று நேரத்தில் கதை முடிந்தது. அனைவரும் கலைந்து சென்றார்கள்.  ஹேமலேகாவும் கிளம்பும் முன்னர் குலசேகரன் அவசரம் அவசரமாகச் சென்று அவள் முன்னால் நின்றான். அவனை அடையாளம் தெரிந்து கொண்ட ஹேமலேகா, "உங்களைக் காவிரிக்கரையில் அல்லவோ பார்த்தேன்!" என்று கேட்டாள். அவனைக் கண்ட மகிழ்ச்சியில் அவள் முகமும் மலர்ந்தது. குலசேகரனும் அவள் சொன்னதை ஆமோதித்துத் தன் தாயாருக்கு அவள் ஈமச்சடங்குகள் செய்வித்து வைத்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தான்.  அவள் சிரிக்கையில் கண்களின் பிரகாசத்தையும் ஒளியையும் கண்ட குலசேகரன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். அவள் அழகில் அவன் உள்ளம் தோய்ந்தது.  பின்னர் குலசேகரன் தான் அவளைப் பல்லக்கில் தன்னந்தனியாக அனுப்ப நேர்ந்தது குறித்து இன்றும் வருந்துவதாகச் சொன்னான். அவளுக்கு என்னவாகி இருக்குமோ என்றெல்லாம் யோசித்துக் கலங்கினதாகவும் கூறினான்.

அப்போது ஹேமலேகா தான் அடைந்த அனுபவங்களை விவரித்தாள். "ஜம்புகேஸ்வரத்துக்குத் தான் திரும்புகையில் ஊரே சூனியமாகக் காட்சி அளித்ததாகவும் ஒரு கிழவர் சொன்னதன் பேரில் அரங்கன் ஊர்வலத்தைத் தேடிச் சென்ற வழியில் தான் குலசேகரன் அறிமுகம் கிடைத்ததாயும் சொன்னாள்.  பின்னர் தான் திருச்சிக்குச் சென்றதாகவும் அங்கே தான் கலவரங்கள் பற்றிய முழு விபரங்களைத் தெரிந்து கொண்டதாகவும் கூறினாள். பின்னர் தெற்கு நோக்கிப் பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை அறிந்து கொண்டதால் வடக்கு நோக்கிச் சென்றதாகவும் கூறினாள். அப்போது இந்தத் திருவண்ணாமலைக்கு வந்ததாகவும் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததால் வந்ததாகவும் சொன்னாள்.

அவளும் யாத்திரையில் வருவது குறித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டான் குலசேகரன். ஹேமலேகா அதற்குத் தான் மன்னரின் கட்டளையின் பேரிலேயே வந்ததாகவும், மஹாராணிக்குப் புராணக் கதைகள் நிறையக் கூற வேண்டும் என்று கட்டளை இருப்பதாகவும் இப்போது மஹாராணி காத்திருப்பார்கள் என்பதால் தான் செல்வதாகவும் கூறினாள். குலசேகரனுக்கு ஹேமலேகாவைச் சந்தித்ததும், அவளுடன் பேசியதுமே கனவு போல் தோன்றியது!

No comments: