எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, January 09, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

வீர வல்லாளனிடம் பரிசில்கள் பெற்றுச் சென்ற ஹேமலேகா குலசேகரன் எதிர்பார்த்தபடி அவன் பக்கம் திரும்பக் கூட இல்லை. குலசேகரனுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்!  அவள் சென்ற பின்னரும் பல புலவர்களும் தங்கள் திறமைகளைக் காட்டிப் பரிசில்கள் பெற்றுக் கொண்டிருக்க நடுவில் கிடைத்த இடைவெளியில் குலசேகரனையும், குறளனையும் ஓர் அதிகாரி அறிமுகம் செய்து வைத்தார். மன்னன் அவர்களைப் பார்த்து விட்டு, "ஶ்ரீரங்கமா? நாளை விரிவாகப் பேசலாம்!" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். கொஞ்சம் ஏமாற்றம் அடைந்த குலசேகரன் குறளுடன் தாங்கள் தங்கி இருந்த சத்திரத்துக்குச் சென்றான். அங்கே உணவு உண்டுவிட்டுப் படுத்தவனுக்கு ஹேமலேகாவின் நினைவுகள் மேலோங்கின.

அவளுடைய புலமையை எண்ணி எண்ணி வியந்தான். அவள் பெயருக்கேற்றாற்போல் தங்கம் போல் ஜொலித்த அவள் அழகையும் அவன் நினைக்காமல் இல்லை. தானும் அவளைப் போல் படிக்காமல் போனோமே என்று கழிவிரக்கம் கொண்டான். தற்சமயம் தான் ஒவ்வொரு நாடாக, ஒவ்வொரு நகரமாக அலைவது இல்லாமல் எங்கேயானும் ஓர் இடத்தில் நிரந்தரமாக இருந்திருக்கலாமோ என்னும் எண்ணமும் கொண்டான். இம்மாதிரிச் சிந்தனைகளிலேயே இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. ஹொய்சள மன்னரோ, "நாளை" என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவர் பேசுவது வேற்று மொழி என்பதால் நம் இறைவனிடம் அவருக்கு கவனம் இல்லையோ எனக் குறளன் சந்தேகப்பட்டான். ஆனால் குலசேகரனோ அவர் மொழி வேறாக இருந்தாலும் நம்முடைய சமயத்தைத் தானே அவரும் பின்பற்றுகிறார். ஆகவே மொழி ஒரு தடையல்ல.  என்று சொன்னான். ஒருவேளை அவருக்கு நமக்கு உதவி செய்ய விருப்பம் இல்லையோ எனக் குறளன் கேட்க, அதை நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்று குலசேகரன் பதில் சொன்னான்.

மூன்று நாட்களாக அந்நகரை அவர்கள் சுற்றி வந்ததில் இந்த தில்லிக்காரர்களின் படை எடுப்பினால் இந்த நகரத்துக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள். அந்த நகரத்தின் தற்போதைய நிலையையும் ஶ்ரீரங்கத்தின் தற்போதைய நிலையையும் எண்ணிப் பார்த்து வருந்தினார்கள்.  அன்றும் அம்மாதிரி பேசிக் கொண்டு நகரைச் சுற்றி வருகையில் எதிரே ஒரு மூடு பல்லக்கு வந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றிக் காவல் வீரர்களும் ஒரு தளவாய் எனப்படும் தலைவனும் வந்து கொண்டிருந்தனர். அந்தத் தளபதி நகருக்குப் புதியவர்களான இவர்கள் இருவரையும் கண்டு அருகில் அழைத்து என்ன காரியமாய் வந்திருக்கிறார்கள் என விசாரித்தான். அவர்கள் திருவரங்கம் என அறிந்ததும் தில்லிப்படைகளின் கொள்ளை பற்றியும் நகரைக்காக்காமல் பாண்டியன் ஓடி ஒளிந்ததையும் குறித்துக் கேட்டறிந்தார்கள்.

குலசேகரனுக்கு உள்ளுக்குள் அவமானம் பிடுங்கித் தின்றது. சாதாரணமாக அவனும் அந்தத் தளபதியுடன் சேர்ந்து பாண்டியர்களைத் திட்டி இருப்பான். ஆனால் தளபதியின் ஏளனம் அவனுக்குள் சினத்தை மூட்டி விட்டது. இவர்கள் நம் தமிழ்நாட்டின் வடக்கே நமக்கு முன்னால் இருக்கின்றனர். இவர்கள் தடுத்து நிறுத்தி இருந்தால் தில்லிக்காரர்கள் ஶ்ரீரங்கம், மதுரை வரை வந்திருப்பார்களா என எண்ணினான். கோபத்துடன், தளபதியிடம், "தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் வாளா இருந்ததால் தானே எங்களுக்குப் பிரச்னை! அவர்கள் தில்லிக்காரர்களை ஓட ஓட விரட்டி இருந்தால் பாண்டியர்கள் ஏன் அஞ்சி ஓடி இருக்கப் போகிறார்கள்?" என்று கேட்டான். உடனே தளபதிக்கும் கோபம் வந்தது! "என்ன? நாங்களா தடுத்திருக்க வேண்டும்?" என்று கேட்க "ஆம், நீங்கள் தானே முன்னால் இருக்கிறீர்கள்? அவர்களைத் தடுத்து நிறுத்தாமல் நீங்கள் அடி பணிந்து வணங்கியதால் அவர்கள் உங்களைக் கடந்து எங்கள் நாட்டுக்கு வந்து சூறையாடி விட்டார்கள்!" என்றான் குலசேகரன் அதே கோபத்தோடு. மேலும், "உங்களுக்கும் பராக்கிரமம் எல்லாம் எதுவும் இல்லை! நீங்கள் அடி பணிந்தீர்கள்! எங்கள் மன்னர் எதிர்க்காமல் ஓடி ஒளிந்தார். இருவர் பராக்கிரமும் ஒன்றே தான்!" என்றான் ஏளனத்துடன்.

தளபதிக்குக் கோபம் பொங்க, "என்ன! எங்கள் அரசரையா வீரமில்லாதவர் என்கிறாய்?" என்று தன் வாளை உருவ, பதிலுக்குக் குலசேகரனும் ஏதோ மறுமொழி கூறிக் கொண்டே தன் வாளை உருவ இருவருக்கும் இடையே அங்கே உக்கிரமான வாட்போர் தொடங்கியது. அப்போது பின்னால் வந்த மூடு பல்லக்கு அந்த வாட்போரைக் கவனித்துவிட்டு நிறுத்தப்பட்டது. அதிலிருந்து மிகவும் இளமையும், அழகும் வாய்ந்ததொரு முகம் குலசேகரனைக் கூர்ந்து கவனித்தது. குலசேகரன் அதை எல்லாம் கவனிக்காமல் தளபதியின் வாளைத் தடுத்து நிறுத்தி அவனையும் காயப்படுத்திக் கீழே தள்ளிவிட்டான். தளபதிக்கு உதவியாகப் போரிட்ட வீரர்கள் ஓட்டமாய் ஓடி விட, பல்லக்கும் மெல்ல நகர்ந்தது. சிறிது நேரத்தில் சுமார் நூறு பேர் கொண்ட ஹொய்சளப்படைவீரர்கள் அங்கே வந்து குலசேகரனையும் குறளனையும் கைது செய்து கொண்டு போய்க் கோட்டைச் சிறையில் அடைத்தார்கள். உதவி கேட்டு வந்த இடத்தில் இப்படி மாட்டிக் கொண்டு விட்டோமே எனக் குலசேகரனுக்குள் வருத்தம் மேலோங்கியது.

அவர்கள் அந்தச் சிறைக்கு வந்த மூன்றாம் நாள்! கிடங்கின் படிகளில் யாரோ ஏறி வரும் சப்தமும், தீவர்த்தியின் வெளிச்சமும் தெரிந்தது. சிறிது நேரத்தில் தீவர்த்திகளைத் தாங்கிக் கொண்டு சிலர் வர அவர்களுடன் ஓர் உருவம் தலை முதல் கால் வரை போர்த்திய வண்ணம் வந்து கொண்டிருந்தது. குலசேகரன் இருந்த இடத்துக்கு வந்ததும் அவனைப் பார்த்துக் கைகாட்டி அழைத்தது.

No comments: