எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, February 19, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரன் மிகவும் முயன்று குதிரையை ஒவ்வொரு பல்லக்கின் அருகேயும் கொண்டு போனான். அவற்றில் ஒன்றில் ஹேமலேகாவின் முகமும் அவனுக்குத் தெரிந்தது. ஹேமலேகா அவனிடம் பல்லக்கை ஒட்டிக் கொண்டு வரவேண்டாம் என எச்சரித்தாள். ராணி தவறாக நினைக்கக் கூடும் என பயந்தாள். ஆனால் குலசேகரன் அவளிடம் தான் கூற வந்ததைக் கூறினான்: "அம்மா! உங்கள் கதை கூறும் ஆற்றல் வியக்கத் தக்கது! நான் மிகவும் விரும்பிக் கேட்கிறேன். இது போன்ற ஆன்மிகக் கதைகளைக் கேட்டு என் நிலையை உயர்த்திக் கொள்ளாமல் வாழ்நாளைப் போர்ப்பயிற்சியில் வீணடித்து விட்டேனே என நினைத்தால் வேதனையாக இருக்கிறது.கல்வி கற்றால் எவ்வளவு மேன்மை என்பதை உங்களால் உணர்ந்து கொண்டேன்!" என்றெல்லாம் அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே திடீரென யாத்திரை நிறுத்தப்பட்டது. அனைவரும் அவரவர் நின்ற இடத்திலேயே நின்றனர்.

திகைத்துப் போய்ப் பார்த்த குலசேகரன் தூரத்தில் எதிரே ஒரு குதிரைப்படை புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்ததைப் பார்த்தான். அதைக் கண்ட ராணி உடனே குலசேகரனை அழைத்து அவனிடம் முத்திரை மோதிரம் ஒன்றைக் கொடுத்தாள். அது ஹொய்சள முத்திரை மோதிரம். அதைக் காட்டும்படி ராணி உத்தரவிடக் குலசேகரன் அதை எடுத்துக் கொண்டு சென்றான். வந்தவர்கள் தில்லி வீரர்கள் தான். நாட்டைச் சுற்றிச் சுற்றி வந்து ஆங்காங்கே வேவு பார்த்துக் கொண்டு வந்தனர். குலசேகரன் காட்டிய முத்திரை மோதிரத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் ஒரு சில கேள்விகளை மட்டிலும் கேட்டுக் கொண்டு ஊர்வலத்தை மேலே செல்ல அனுமதித்தனர்.  பின்னர் குலசேகரன் திரும்ப ராணியிடம் சென்று முத்திரை மோதிரத்தைத் திரும்பக் கொடுக்க ராணியோ அவனையே அதை வைத்திருக்கச் சொன்னாள். இன்னும் வேறு யாரேனும் வந்தால் இதைப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் கூறினான்.

பின்னர் அவனைப் பார்த்து, அவன் பெயரைக் கேட்டறிந்தாள். திருவரங்கத்துக்காரன் என்று தெரிந்ததும் போர்த்தொழிலை எங்கே எவ்வாறு கற்றான் என்றும் கேட்டாள். காஞ்சியில் ஹொய்சள வீரன் ஒருவனிடம் கற்றதாகச் சொன்ன குலசேகரனைப் பார்த்து அவனைப் போன்றதொரு வீரனுக்குக் கலை, இலக்கியம், கவிதை போன்றவை தேவை இல்லை என்றும் சொன்னாள். வீரத்தை வளர்த்துக் கொண்டு ஓர் குறுநில மன்னனாக ஆகும்படியும் அறிவுரை கூறினாள். ஆனால் குலசேகரனோ தனக்கு அவற்றில் எல்லாம் விருப்பம் இல்லை என்றும் தன் வாழ்க்கை லட்சியம் திருவரங்க நாதனைத் திரும்பத் திருவரங்கத்தில் சேர்ப்பிப்பது ஒன்றே என்றும் கூறினான். ராணியோ இதெல்லாம் ஒரு லட்சியமா எனக் கேலி செய்து நகைத்தாள். குலசேகரன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

ராணி அந்தப் பல்லக்கில் பஞ்சணையில் படுத்த வண்ணம் இருந்தாள். அவள் அழகைக் கண்டு வியந்தான் குலசேகரன்.  தன் பார்வையை அவன் மேல் படரவிட்ட ராணி, "இதெல்லாம் ஒரு லட்சியமா! ஓர் உலோக விக்ரஹம்! அதைப் பாதுகாப்பதாம்! திருவரங்கத்தில் கொண்டு சேர்ப்பதாம்!" என்று சொல்லி மீண்டும் கேலி செய்து சிரித்தாள். குலசேகரன் கோபத்துடன் தனக்கு அது லட்சியம் தான் என்றும் தன்னைப் பொறுத்தவரை அது வெறும் உலோக விக்ரஹம் மட்டுமில்லை என்றும் கூறினான். அரங்கன் அவர்களைப் பொறுத்த வரை உயிர் என்றும் அவனே அவர்களது நம்பிக்கை என்றும் அவனை இழந்தால் வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவுமே இல்லை என்றும் கூறினான். அரங்கனை இழக்க ஒருக்காலும் சம்மதியோம் என்ற குலசேகரன் அரங்கனைக் காப்பாற்றும் வியாஜ்யத்தில் எத்தனை பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பதையும் எடுத்துச் சொன்னான்.  அரசிக்குச் சிரிப்புத் தான் வந்தது. என்றாலும் போலியான பயத்துடன் குலசேகரனைப் பார்த்து நிறுத்திக் கொள்ளச் சொன்னாள்.

திருவண்ணாமலைக் கடைவீதியில் சண்டை போட்டது போல் சண்டை போட்டுவிடப் போகிறாய் என்று கேலியும் செய்தாள். பின்னர் அவனைப் பார்த்து யாத்திரை சரியாகச் செல்கிறதா என்று கண்காணிக்கும்படி சொல்லிவிட்டுப் பல்லக்கின் திரையை விட்டுக் கொண்டு திரும்பிப் படுத்தாள்.

****************

அங்கே!

அழகர் கோயிலில் ஒரு தோப்பு! அரங்கன் மறைந்து வாழ்ந்து வந்தான். பசுந்தழைகளால் ஆன விதானங்களை எழுப்பி அரங்கனுக்கு ஆலயம் போல் எழுப்பி தினசரி உபசரணைகளைச் செய்து வந்தார்கள் அரங்கனைப் பொறுப்பில் எடுத்துக் கொண்ட கொடவர்கள். அவர்கள் மூவரும் ஊர்வலத்தோடு சேர்ந்தே வந்த உறவினர்கள் ஆவார்கள்.  அரங்கனை வெறும் தெய்வமாக மட்டும் எண்ணாமல் ஓர் உலோக விக்ரஹமாக எண்ணாமல் தங்களுடன் வாழும் ஓரு மாமனிதன் என்றே நினைத்து அவனுக்கு வேண்டியதைச் செய்தார்கள். அவர்கள் வெப்பத்தை உணர்ந்தால் அரங்கனுக்கு விசிறி போட்டார்கள். அவர்கள் சாப்பிடும் முன் அரங்கனுக்கு உணவு படைத்தார்கள்.

அப்போது ஓர் நாள் வெகு தூரம் சென்று மண் குடங்களில் நீர் எடுத்து வருகையில் ஓர் அரசப் பரிவாரம் ஆரவாரங்களோடு அங்குள்ள தோப்புக்களில் புகுந்தது. மூவரும் பயந்து போய்விட்டார்கள். அரங்கனின் இருப்பிடம் நோக்கி விரைந்தார்கள். அவசரம் அவசரமாக அரங்கனைக் கண்டதும் அவர்களுக்குத் தெரிந்து விடப் போகிறதே என நினைத்து அவர்கள் செய்த குழப்படிகளால் அரங்கன் விக்ரஹம் அங்கிருந்த கூளங்களுக்குள் மறைந்து போனது. அப்போது பார்த்து அரசப் பரிவாரங்களில் கூட வந்த பெண்கள் அங்கே வந்து விட்டனர். அவர்கள் தில்லித் துருக்கப் பெண்கள் என்பது அவர்களின் உடையிலிருந்து தெரிந்தது. கொடவர்கள் செய்வதறியாது திகைக்கையிலேயே அரண்மனையில் ஊழியத்துக்கு அமர்த்தப்பட்டிருந்த அலிகள் ஓடி வந்து மூவரையும் பிடித்துக் கொண்டனர். 

3 comments:

நெல்லைத் தமிழன் said...

நீங்க தொட்டிருக்கறது பெரிய சப்ஜெக்ட். சும்மா எதையாவது எழுதினோம்னு இல்லாம, ரெஃபெரன்ஸ்லாம் படிச்சிருக்கீங்க. நானும் ஆரம்பத்திலிருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு சாண்டில்யன் நாவல்ல, பெரிய பெருமாளின் இரண்டு கண்களிலும் வைரம் பதிக்கப்பட்டிருந்ததாகவும், ஒன்று ரஷ்யாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும் இன்னொன்று காணாமல் போனது (அல்லது பிரிட்டிஷாரிடம் போனது) என்று ஒரு ஆதாரத்தைக் குறிப்பிட்டு ('நாவலின் பக்கத்தின் கீழ்) எழுதியிருந்தார். நீங்க சுட்டி கொடுத்திருந்த ஸ்ரீரங்கசரித்திரம் தளத்தில், அந்தப் படத்தையும் போட்டிருந்தார்கள் (ஆனால் அது ரொம்பப் பெரிய வைரமாகவும் பெருமாள் கண்ணில் வைக்கும் அளவு பொருத்தமில்லாததாகவும் எனக்குத் தோன்றியது)

Geetha Sambasivam said...

வாங்க நெ.த. இரண்டு மூன்று விதமான புத்தகங்கள். கோயிலிலேயே கிடைக்கும் ஒரு புத்தகம். அதைத் தவிரவும் கோயிலொழுகு முன்னால் ஆடியோவில் கிடைத்தது. இப்போ அந்த லிங்க் வேலை செய்யலை. கோயிலொழுகு புத்தகங்கள் எல்லாம் என்னால் வாங்க முடியாது! ஶ்ரீரங்கத்து விஜயராகவன் கிருஷ்ணன் முகநூலில் பகிரும் சில அபூர்வச் செய்திகள் (அவரிடம் சொல்லிட்டுத்தான் பகிர்வேன். இப்போ சமீபத்திலே அவர் ஏதும் பகிரவே இல்லை. இரண்டு வருஷங்கள் இருக்கும்.) இப்படி ஆங்காங்கே செய்திகள் சேகரிக்கிறேன். அதிகம் வெளியே போய் அலைந்து திரிந்து சேகரிக்க முடியாமல் உடம்பு படுத்தல். என்னைவிட வயசானவங்க ஓடியாடறதைப் பார்க்கிறச்சே கஷ்டமாவும் வெட்கமாயும் தான் இருக்கு! :( என்ன செய்ய முடியும்! ஒரு காலத்தில் ஓட்டமாக ஓடிக் கொண்டிருந்தது கனவாகப் போய் விட்டது!

Geetha Sambasivam said...

நீங்க சொல்லும் கண்ணில் வைரம் செய்தியின் நம்பகத்தன்மை மேல் எனக்கு சந்தேகம் தான். ஆனால் மூலவருக்கு என்பதால் ஒருவேளை அது சரியாகவும் இருக்கலாம்.