எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, October 02, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருவண்ணாமலையில்!

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் குலசேகரனைக் கண்டதும் ஓடோடி வந்து விசாரித்த கிருஷ்ணாயியைக் கண்டு குலசேகரன் பிரமித்தான். அவள் மனம் முதிர்ச்சி அடைந்திருப்பதை அவள் கண்கள் காட்டின. பெண்மைக்கே உரித்தான நிதானமும், கனிவும் அவள் கண்களில் வழிந்து கொண்டிருந்தது.  என்றாலும் குலசேகரனால் அவளைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. ஒரு கணம் அவளை வெறித்தவன் மறுபடி தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். அவன் முகம் கல் போல் இறுகியது. கிருஷ்ணாயியோ அவன் தன்னைப் பார்க்கவே விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டவளாக, "ஏன் என்னைப் பார்க்க மறுக்கிறீர்கள் ஸ்வாமி? எப்போது வந்தீர்கள்? என்னை ஏன் வந்து பார்க்கவில்லை! என் மேல் என்ன கோபம்?" என்றெல்லாம் விசாரித்தாள். குலசேகரனோ வேறு பக்கம் திருப்பிய பார்வையுடனேயே அவளைப் பார்த்து, "மஹாராணி, என்னை எதுவும் கேட்க வேண்டாம். நான் பழைய விஷயங்களை எல்லாம் மறக்க விரும்புகிறேன்." என்றான். அவன் கண்களிலே கண்ணீர் ததும்பி நின்றது.

கிருஷ்ணாயியோ அவனைப் பார்த்து,"ஸ்வாமி! எனக்குக் காரணம் புரிகிறது! ஆனால் இனி நான் உங்கள் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யவே மாட்டேன்! இனியும் உங்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பவும் இல்லை. பழைய விஷயங்களுக்காகவும், நான் நடந்து கொண்ட முறைக்காகவும் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னியுங்கள்! நான் வருகிறேன்!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள். பிறகு அவனைப் பார்த்துத் தயங்கியவண்ணம் அவன் திருவண்ணாமலைக்கு வந்திருக்கும் காரணம் தனக்குப் புரியவில்லை என்றும் எனினும் அவனுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் தான் செய்யத் தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தாள். மேலும் அவனை ஒரு முறையாவது அந்தப்புரம் வந்து தன்னைப் பார்த்துச் செல்லும்படியும் அவன் வந்தால் அது தனக்கு என்றென்றும் மறக்க இயலா ஓர் நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் என்றென்றும் தான் அதை நினைவில் வைத்துப் போற்றி வருவாள் எனவும் தெரிவித்தாள். குலசேகரன் மறுமொழி சொல்லாமல் அவளைத் திரும்பியும் பார்க்காமல் மௌனம் சாதித்தான். பின்னர் அவள் கிளம்பிச் சென்றபின்னர் அவனும் அங்கிருந்து வெளியேறி முன்னர் தான் தங்கும் சத்திரம் திரும்பினான்.  யாரைப்பார்க்க வேண்டாம் என நினைத்தானோ அவளைப் பார்க்க நேர்ந்தது தன் துர்ப்பாக்கியம் தான் எனக் கருதினான்.

இரவுப் பொழுதைச் சத்திரத்தில் கழித்த குலசேகரன் மறுநாள் காலை தன்னை அரச சந்திப்புக்கு ஏற்றவாறு அலங்கரித்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்றான். அங்கே அரசர் வல்லாளர் சிங்காதனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார். சுமார் எழுபது வயதுக்கு மேல் ஆனாலும் அவருடைய கம்பீரமும் கட்டுக்குலையாத உடம்பும் குலசேகரனைக் கவர்ந்தது. குலசேகரனை அவர் அடையாளமும் கண்டு கொண்டார். அவனைப்பார்த்து சிங்கப்பிரான் அனுப்பினாரா எனக் கேட்டவர் மேலும் தொடர்ந்து, "வீரனே! நீ திருவண்ணாமலை வர இஷ்டப்படவில்லை என சிங்கப்பிரான் சொன்னாரே!" என்றும் வினவினார்.  குலசேகரன் சற்று நேரம் மௌனமாக இருந்தவன் பின் மன்னரைப் பார்த்து, "அரசே! இந்தத் தென்னாட்டு அதிலும் தமிழகத்து அரசர்களிடம் எனக்கு நம்பிக்கையே இல்லை! சிறிதும் இல்லை!" என்றான். வல்லாளர் கலகலவெனச் சிரித்தார்.

குலசேகரனைப் பார்த்துப் பத்து வருடங்கள் முன்னர் இளமைத் துடிப்பில் இருந்தபோது பேசிய அதே மாதிரி அவன் இப்போதும் படபடப்புடன் பேசுவதைச் சுட்டிக் காட்டினார். மேலும் ராஜரிக காரியங்களில் அவசரமோ, படபடப்போ கூடாது என்றும் அறிவுறுத்தினார்.  எத்தனையோ சோதனைகளுக்குப் பின்னர் ஹொய்சளம் இப்போது தான் இரண்டு, மூன்று ஆண்டுகளாக வலுப்பெற்று வருவதாயும் சொன்னார். வடக்கே உள்ள பகைவர்களை இப்போது தான் அழித்து ஒழித்ததாகவும் இனிமேல் தெற்கே தங்கள் கவனத்தைத் திருப்பப் போவதாயும் சொன்னார்.  மேலும் இதைத் தான் ஏற்கெனவே சிங்கப்பிரானுக்குத் தெரிவித்துவிட்டதாயும் கூறியவர் இப்போது ஹொய்சளம் தமிழ்நாட்டின் மதுரை சுல்தான் மேல் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாயும் கூறினார்.  குலசேகரன் முகம் பிரகாசம் அடைந்தது.

இந்தச் செய்தியைக் கேட்கவே தான் காத்திருந்ததாய்ச் சொன்ன அவன் இந்த முடிவு குறித்து அவனுக்கு ஏதும் தெரியாது என்பதால் தான் வந்த உடன் மன்னரிடம் குற்றம் கூறியதாகவும் இது முன்னரே தெரிந்திருந்தால் மகிழ்ச்சியோடு மன்னரை வந்து கண்டிருப்பேன் எனவும் தெரிவித்தான்.  மன்னர் அவனிடம் பொறுமையுடன் காத்திருந்து தான் எதையும் செய்யவேண்டும் என்றும் இப்போது நேரம் வந்து விட்டதாயும் சொன்னார். மேலும் குலசேகரன் தன் மேல் கொண்டிருக்கும் கோபம், வருத்தம் ஆகியவை அவருக்குத் தெரியும் என்பதால் தான் நேரிடையாக அவனைத் திருவண்ணாமலை வரும்படி சொல்லி அனுப்பவில்லை என்றும் சிங்கப்பிரானிடம் சொல்லி அவனை அனுப்பச்சொன்னதாகவும் தெரிவித்தார்.  அவனுக்கு இங்கே நிறைய வேலைகள் காத்திருப்பதாயும் சொன்னார். குலசேகரன் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொள்ள மன்னர், திருவரங்கத்தையும், திருச்சியையும் மதுரை சுல்தான்களிடமிருந்து மீட்பதற்காகப் போர் செய்யவும் தயங்கப்போவதில்லை என்பதைத் தெரிவித்தார். 

No comments: