எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, September 30, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பத்து ஆண்டுகள் பின்னர்!

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களும் ஆகிக் கொண்டிருந்தன. அரங்கனைச் சூழ்ந்திருந்த பரிவாரங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்து விட்டது. ஒரு சிலர் முதுமை, உடல்நிலை காரணமாக உயிரிழக்க நேர்ந்தது. இன்னும் சிலர் பிழைப்பைத் தேடியும், குடும்பங்களைத் தேடியும் சென்று விட்டனர். சென்றவர் திரும்பவில்லை.  தமிழக வரலாற்றில் இந்தப் பத்து வருடங்கள் எவ்வித மாற்றங்களும் காணாமல் நகர்ந்து கொண்டிருந்தது. தென்காசி, திருநெல்வேலிப் பகுதியில் இருந்து அடிக்கடிப் பாண்டியச் சிற்றரசர்கள் மதுரையிலிருந்து துருக்கியரை விரட்டத் தங்களால் ஆன மட்டும் இயன்றார்கள், ஆனால் வெற்றி கிட்டவில்லை. ஹொய்சளர்களோ எனில் வடக்கே தங்கள் கவனம் முழுமையும் செலுத்தி ஆந்திராவையும், தில்லிப் பேரரசில் நடப்பதையும் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு நடுவே மதுரையில் மட்டும் சிறிய மாற்றம்.

தில்லிக்குத் தளபதியாக  தென்னாடு வந்த அஸன்ஷா என்பவன் தில்லிப் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தவன் தில்லி ஆட்சியினரைத் தூக்கி எறிந்து விட்டுத் தன்னை மதுரைக்கும் அதைச் சேர்ந்த பாண்டிய நாட்டுக்கு உட்பட்ட இடங்களுக்கும் சுல்தானாக அறிவிப்புச் செய்து கொண்டான். ஆக மொத்தம் இதன் மூலம் மதுரையில் ஒரு சுல்தான் பரம்பரை ஆட்சி தொடங்கியது. ஆனால் ஆட்சி நிர்வாகம், பாதுகாப்பு போன்றவற்றில் கவனக்குறைவாகவே இருந்தார்கள். அவர்கள் கவனமெல்லாம் ஆடம்பரமான சுகபோக வாழ்க்கையில் இருந்தது. இருந்தாலும் தங்கள் வலிமையை விட்டுக்கொடுக்காமல் யாரையும் உள்ளே நுழையாமல் பார்த்துக் கொண்டனர்.  ஆகவே எவ்வித மாறுதலும் இல்லாமல் பத்தாண்டுகள் கடந்து விட்டன.
*********************************************************************************

திருவண்ணாமலை! ஓர் நாள் மாலை!

ஓர் வாலிப வீரன் பித்துப் பிடித்தாற்போல் வீதியில் நடந்து கொண்டிருந்தான். இளமையுடனும், வீரத்துடனும் காணப்பட்ட அவன் முகத்தைக் கவலை மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. நீண்ட காலம் சென்று அன்று அவன் இந்த ஊருக்கு வந்திருந்தான். நீண்ட நேரம் நடந்த அவன் அந்த மாலை நேரத்தில் அங்கே உள்ள ஓர் வைணவக் கோயில் முன்பாகப் போய் நின்றான்.  பெருமாள் சந்நிதி திறந்திருந்தாலும் உள்ளே செல்ல மனமின்றிக் கண்கள் கலங்க அவன் கை கூப்பியவண்ணம், "பெருமாளே! நான் பதிதன்! உள்ளே வந்து உன்னைச் சேவிக்கும் அருகதை அற்றவன்! ஐயோ! போனமுறை கூட உள்ளே வந்து உன்னைச் சேவித்தேனே! இம்முறை என்னால் அது இயலாது போயிற்றே!" எனப் புலம்பிய வண்ணம் கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தான்.

அப்போது அங்கே திடீரென சில ஆரவாரங்கள் கேட்கவே அதனால் சிந்தை கலைக்கப்பட்டவனாய்த் திரும்பிச் சுற்றும் முற்றும் பார்த்தான் அந்த இளைஞன். அங்கே ராணி கிருஷ்ணாயி வந்து கொண்டிருந்தாள்.  அவனை அங்கே கண்டதும் சிறு புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் சேடிமார் மெய்க்காப்பாளர் போலக் காவலுக்கு வந்திருந்தனர். இந்தப் பத்து வருடங்களில் அவள் எழில் அதிகரித்துப் பூரணமானதொரு மங்கையாக ஆகி இருந்தாள். கண்களில் முன்னிருந்த காமவெறி இல்லாமல் கனிவு தோன்றி இருந்தது. அவளைப் பார்த்துப் பிரமித்தக் குலசேகரனைக் கண்டு அவள், "ஸ்வாமி! என்னைத் தெரியவில்லையா?" என்று கேட்டபடி முன்னால் வந்தாள்.

No comments: