எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, March 12, 2019

குலசேகரன் முடிவு!

வியாபாரிகளைப் பற்றியும் அவர்கள் வியாபார முறைகளையும் சிந்தித்துப் பார்த்த குலசேகரனுக்கு ஒன்று நிச்சயமாய்த் தெரிந்தது. இந்த வியாபாரிகள் இங்கே கோட்டைக்கு வெளியே முற்றுகை இட்டிருக்கும் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் கோட்டைக்கு உள்ளே முற்றுகைக்கு ஆட்பட்டவர்களுக்கும் வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகப் பண்டங்களை விற்று வந்தார்கள். பலரும் இப்படிச் செய்வது சகஜம் தான் என்றாலும் வெளியே இருப்பவர்களுக்குத் தெரிந்தால் வியாபாரிகள் கதி அதோகதி தான்! அதையும்  மீறி அதிகப் பணத்துக்கு ஆசைப்பட்டு வியாபாரிகளில் பலரும் உள்ளே உள்ளவர்களுக்கும் வேண்டியதைச் செய்தார்கள். அதில் தான் அதிகமான பணமும் கிடைத்தது அவர்களுக்கு. இந்த விஷயத்தைக் குறித்துக் குலசேகரன் நன்கு யோசித்துப் பார்த்தான். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். அதற்கு முன்னால் அவர்கள் உள்ளே இருப்பவர்களிடம் எவ்விதம் தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் குலசேகரன் கவனித்தான்.

இந்த வியாபாரிகள் தங்கள் பக்கம் இருக்கும் படைவீரர்களில் சிலரையோ அல்லது அவர்கள் உப தலைவரையோ எப்படியோ கைக்குள் போட்டுக் கொள்வார்கள்.கூடியவரை அவர்களுக்குப் பணம் வாங்காமல் பண்டங்களைக் கொடுப்பார்கள்.பின்னர் அவர்கள் தயவின் முலம் கோட்டைச்சுவரை மெல்ல மெல்ல அணுகுவார்கள். கோட்டை மீதுள்ள கொத்தளங்களில் காவல் காக்கும் வீரர்களிடம் பண்டத்தைக் காட்டியும் தானியங்களைக் காட்டியும் ஆசை காட்டுவார்கள். கோட்டைக்குள் முற்றுகையில் இருக்கும் அந்த வீரர்களோ நல்ல உணவு உண்டோ அல்லது உடை உடுத்தியோ பல நாட்கள் ஆகி இருக்கும். இதனால் அவர்கள் கொடுக்கும் தானியங்களையோ அல்லது மற்றப் பண்டங்களையோ வாங்க ஆவலுடன் வருவார்கள்.  ஆனால் இந்த வியாபாரிகள் உடனே அவர்களுடன் வியாபாரத்துக்குப் படிந்து விட மாட்டார்கள். எதிரிகளின் நிலைமையையும் அவசரத்தையும் நன்கு கணித்துக் கொள்வார்கள். கூடியவரை தாமதம் செய்வார்கள். மெல்ல மெல்ல விலையைக் கூட்டிக் கொண்டே போவார்கள். ஒரு கட்டத்தில் எதிரிக்கு அது அவசியத் தேவையாக இருக்கும் பட்சத்தில் வியாபாரிகள் கேட்ட விலையைக் கொடுத்துப் பண்டத்தை வாங்கிச் சென்று விடுவார்கள்.

அதிலும் முற்றுகை தீவிரம் அடைந்து உள்ளே இருப்பவர்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்துவிட்டால் தானியங்களுக்குப் பற்றாக்குறையே ஏற்பட்டு விடும். தங்களிடம் இருக்கும் தங்க நாணயங்கள், விலை மதிப்பற்ற ஆபரணங்கள் ஆகியவற்றைக் கொடுத்துப் பதிலாக தானியங்களைப் பெற்றுச் செல்ல ஆரம்பிப்பார்கள்.  மேலும் இந்த வியாபாரம் நடக்கும் முறை எப்படி எனில் கோட்டைக்கு மேல் நிற்பவர்கள் மேலிருந்து ஒரு கூடையைக் கட்டிக்கீழே இறக்குவார்கள்.அதில் தேவையான பணமோ நகையோ இருக்கும். கீழே இருக்கும் வியாபாரிகள் அதை எடுத்துக் கொண்டு தானியங்களை அந்தக் கூடையில் போட்டு மேலே அனுப்பி வைப்பார்கள்.  இந்த லாபத்தைத் தாங்கள் மட்டும் அனுபவிக்காமல் தங்களுக்காக உதவி செய்யும் ஊழியர்கள், படை வீரர்கள், உப தலைவர்கள் ஆகியோருக்குப் பகிர்ந்து அளிப்பார்கள் வியாபாரிகள். இம்முறையில் வீரர்களும் நல்ல லாபம் பார்ப்பார்கள் என்பதால் இம்மாதிரி வியாபாரங்களை அவர்கள் கண்டும் காணாதது போல் இருந்து விடுவார்கள்.

இந்தப் பழக்கதை எப்படியேனும் தனக்கு ஆதாயமாக மாற்றக் குலசேகரன் நினைத்தான்.  என்ன செய்வது என யோசித்துத் தீர்மானித்துக் கொண்டவன் மறு நாள் கிருஷ்ணாயியிடம் இருந்து அவளுடைய விலை உயர்ந்த நகைகள் பலவற்றையும் வாங்கிக் கொண்டான். அவற்றில் சிலவற்றை மட்டும் நங்கூரானுக்குக் கொடுத்தான். அவனிடம் மெதுவாக ஹொய்சள வீரர்கள் என்ன பணம் கொடுத்தாவது அரிசி, தானியங்கள் வாங்கச் சித்தமாக இருப்பதாய்த் தெரிவித்தான்.  அந்த நகைகளைக் கண்ட நங்கூரான் விலை மதிப்பற்றவை என்பதைப் புரிந்து கொண்டு குலசேகரன் இழுத்த இழுப்புக்கு வளைய ஆரம்பித்தான். அதன் பின்னர் குலசேகரன் மெதுவாகக் கோட்டைக்கு வெளியே ரோந்து போய்க் கொண்டிருந்த படைவீரர்கள், உப தலைவர்கள் எனச் சந்தித்துப் பொன் ஆபரணங்களைக் கொடுத்து அவர்களை மகிழ்வித்தான்.  இதன் பின்னர் தன் எண்ணத்தைத் தெரிவிக்கவே அவர்களும் குலசேகரன் மேலே கோட்டை வீரர்களுடன் வியாபாரம் செய்யச் சம்மதம் தெரிவித்தனர்.

குலசேகரன் ஒரு நாள் இரவில் மெல்ல மெல்லக் கோட்டை வாசலை அடைந்தான்.  மேலே இருக்கும் காவலனை அழைத்தான். உங்களுக்கு உணவு சமைக்க தானியங்களும், அரிசியும் அனுப்புகிறேன் எனச் சொல்லி விட்டு ஒரு கூடையில் அரிசியையும், தானியங்களையும் நிரப்பி அதனுள் ஓர் ஓலையை மறைவாகச் செருகி வைத்தான். கூடையை மேலே அனுப்பினான். ஓலைச் சுருளில் கிருஷ்ணாயி இப்போது இருக்கும் இடத்தையும் அவள் நிலைமையையும் சொல்லி இருந்ததோடு அல்லாமல் இளவரசன் மிகவும் மோசமாகப் பலஹீனம் அடைந்திருப்பதையும் தெரிவித்திருந்தான். அதோடு அடுத்த நாள் இரவில் கிருஷ்ணாயியையும், அவள் குமாரனையும் கோட்டைக்குள் அனுப்பப் போவதாகவும் அதற்குச் சித்தமாக இருக்கும்படியும் தெரிவித்திருந்தான்.

மறு நாளும் வந்தது. இரவும் வந்தது!

1 comment:

Anuprem said...

ஆஹா..நல்ல திட்டம்