எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, March 29, 2019

கிருஷ்ணாயியை மன்னித்தான்!

குலசேகரன் மன்னரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு தனக்கென ஒதுக்கப்பட்ட மாளிகையின் ஓர் அறையில் வந்து படுத்து ஓய்வு எடுக்கச் சென்றான். அப்போது திடீரென ஏதோ சப்தம் கேட்டது. அறையெங்கும் ஓர் நறுமணம் வீசியது. தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு நிமிர்ந்த குலசேகரன் சுற்றும் முற்றும் பார்த்தான். அறைச் சாளரத்தின் அருகே ஓர் அழகிய பெண்ணின் முகம் அவனையே கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அந்தப் பெண்ணின் முகம் கரை காணா மகிழ்ச்சியில் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது.  அதைக் கவனித்த குலசேகரன் அது கிருஷ்ணாயி தான் எனப் புரிந்து கொண்டு முகம் சுளித்தான். அதைக் கண்ட கிருஷ்ணாயியின் முகம் சுருங்கினாலும் சமாளித்துக் கொண்டாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள்.  மெல்ல மெல்ல ஓர் தேவதை போல் நடந்து உள்ளே வந்தாள்.

வந்தவள் கைகளில் ஓர் மயில் இறகினால் ஆன விசிறி  இருந்தது. அந்த விசிறியால் அவனுக்கு இதமாக வீச ஆரம்பித்தாள் கிருஷ்ணாயி! திகைத்துப் போனான் குலசேகரன். "மஹாராணி, இதென்ன! இதெல்லாம் மிகவும் அதிகமாகத் தெரிகிறது! தயவு செய்து சும்மா இருங்கள்!" என்று கூறிய வண்ணம் அந்த மஞ்சத்தில் இருந்து எழுந்து சற்றே விலகி நின்றான். கிருஷ்ணாயிக்கு மனம் புண்பட்டது அவள் முகத்தில் தெரிந்தது. அவனைப் பார்த்து சோகமான குரலில், "ஸ்வாமி, இன்னமும் என்னை ஓர் அந்நியப் பெண்ணாகவே அதுவும் மஹாராணியாகவே நினைக்கிறீர்களா? மிகவும் மரியாதையுடன் வேறு அழைக்கின்றீர்கள்! இதனால் என் மனம் புண்படுவதைத் தாங்கள் அறியவில்லையா? நான் தங்கள் அடிமை ஸ்வாமி!" என்ற வண்ணம் கீழே குனிந்து அவனை நமஸ்கரிக்க முற்பட்டாள். அதைத் தடுத்த குலசேகரன், "ராணி, நான் உங்கள் சேவகன். அடியாருக்கும் அடியான் நான். என்னிலும் கேவலமானவன் இவ்வுலகில் வாழவும் முடியுமோ? அப்படி இருக்கையில் உங்கள் மரியாதைக்கு நான் எவ்விதம் பாத்திரமாவேன்? இத்தகைய உபசரணைகளுக்கு நான் அருகதை அற்றவன்! " என்று பணிவுடன் சொன்னான்.

"ஐயா, தங்கள் மனம் புண்பட்டிருப்பதை நான் அறிவேன்.  வேறு எந்தக்காரணத்திற்காக இல்லை என்றாலும் என்னையும் என் மகனையும், இந்நாட்டையும் தாங்கள் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்காகவே இந்நாட்டினரான நாங்கள் அனைவரும் தங்களுக்கு ஊழியம் செய்யக் கடமைப் பட்டுள்ளோம்!" என்றவண்ணம் விசிறியை மீண்டும் வீச ஆரம்பிக்க, குலசேகரன் அவளை, "வேண்டாம்!" எனத் தன் கைகளால் தடுத்து நிறுத்தினான். அவன்முகம் அப்போது போன போக்கைப் பார்த்தும் அவன் மனதில் எழுந்த அருவருப்பையும் புரிந்து கொண்டாள் கிருஷ்ணாயி! "ஸ்வாமி,தங்கள் மனம் எனக்குப் புரிகிறது. நான் உங்களை இழிவு வழியில் தள்ளி விட்டேன் என்பதைத் தாங்கள் மறக்கவில்லை. அதோடு இப்போதும் அதற்குத் தான் வந்திருக்கிறேன் என நினைக்கிறீர்கள். இல்லை, ஸ்வாமி! இல்லை. நான் அப்படிப் பட்டவளே இல்லை. எனக்கு முக்கியமாக இந்த ஹொய்சளத்திற்கு ஓர் சந்ததி ஏற்பட வேண்டும் என்பதால் எங்கள் துளு வம்சத்தினர் கையாளும் வழியையே நானும் கையாண்டேன். அதன் மூலம் இந்த ராஜ வம்சத்துக்கு ஓர் சந்ததி கிடைத்து விட்டது! அதற்கு மேல் எனக்கு இதில் விருப்பம் ஏதும் இல்லை, ஸ்வாமி! முதலில் தாங்கள் அதைப் புரிந்து கொள்ளுங்கள்! எப்போதோ உங்களை வற்புறுத்தித் துன்புறுத்தி நான் இணங்க வைத்ததால் இப்போதும் நான் உங்களைத் தொந்திரவு செய்வேன் என நினைக்காதீர்கள்!" எனக் கண்களில் கண்ணீர் மல்க வேண்டினாள்.

அவள் கண்களில் இருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வழிவதைக் கண்டான் குலசேகரன். தான் அவளைத் தவறாக நினைத்தது குறித்து வருந்தினான். மெல்ல ஆதுரமாக அவளைப் பார்த்து, "கிருஷ்ணாயி!" என அவள் பெயரைச் சொல்லி அழைத்தான். உடனே அவள் கண்ணீருடன் முறுவலும் நிறைந்த முகத்துடன் அவனைப் பார்த்தாள்.  அவன் பார்வையில் அவள் துயரம் மெல்ல மெல்லக் கரைந்தது. குலசேகரனுக்கும் மனம் கொஞ்சம் சமாதானம் ஆகியது. அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். அவளும் வாயால் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள். அவ்வளவு நேரம் பேசியதில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தவறாகவே நினைத்த இருவரும் இப்போது ஒருவரை மற்றொருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். விவரிக்க இயலாத ஏதோ ஓர் பந்தம் தங்கள் இருவரையும் பிணைத்திருப்பதையும் இன்னதென்று சொல்லமுடியாத ஓர் புதிய உறவு முறையில் இருவரும் கட்டப்பட்டிருப்பதையும் ஒருசேர இருவரும் உணர்ந்து கொண்டார்கள். உணர்ந்து கொண்டதை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதன் மூலம் மேலும் உணர்ந்தார்கள்.

யுத்தத்தில் நடந்த கடுமையான கலவரங்களால் களைப்புற்றிருந்த குலசேகரன் இப்போது உண்மையாகவே அலுப்புடனும், சோர்வுடனும், தன்னால் விழித்திருக்க முடியவில்லை எனச் சொல்லிக் கொண்டு மஞ்சத்தில் விழுந்து படுத்துக் கொண்டு கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான். "தூங்குங்கள்! ஸ்வாமி!" என்று ஓர் குழந்தையைச் சொல்லுவது போல் அவனிடம் கனிவாகச் சொன்ன கிருஷ்ணாயி மெதுவாக இனம் புரியாததொரு ராகத்தில் தன் தாய் மொழியான துளுவில் தாலாட்டுப் போல் தொனித்த ஓர் பாடலைப் பாட அந்த அறை முழுவதும் அந்தப் பாடலின் ராகத்தாலும் லயத்தாலும் நிரம்பி வழிந்தது. குலசேகரன் நல்ல ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான்.

No comments: