எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 22, 2019

கம்பணன் மனைவி செய்த உதவி!

அரங்கனை நாம் மேல்கோட்டையிலேயே விட்டு விட்டு வந்து விட்டோம். அங்கே சில காலம் அரங்கன் இருக்கட்டும். அதற்குள்ளாக அரங்கனை மீண்டும் திருவரங்கத்தில் ஸ்தாபிதம் செய்யப் பெரிதும் உதவிய குமார கம்பணன் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொண்டு மேலே போவோம். ஹொய்சளர்கள் காலத்துக்குப் பின்னர் அவர்கள் வீழ்ச்சியின் போது காகதீயர்களுடன் இணைந்து சில அரச குடும்பத்தினர் ஹொய்சள நாட்டின் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். அவர்கள் தாய்மொழி தெலுங்கு! அவர்கள் வித்யாரண்ய தீர்த்தர் என்னும் துறவியின் வழிகாட்டுதலின் படி தங்கள் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவர்கள். இதைக் குறித்து நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகளில் விஜயநகரப் பேரரசின் ஆரம்பம் குறித்து விரிவாகப் பார்க்கலாம். அவர்களில் ஹரிஹரன், புக்கர் இருவரில் புக்கரின் மகனே குமார கம்பணன்.  இவன் காலத்தில் தான் திருவரங்கத்தில் அரங்கன் மீண்டும் குடி வந்தான். இவனுடைய செயல்களை எல்லாம் அருகே இருந்து பார்த்து அதைச் சிறியதொரு காவியமாக மாற்றியவள் கங்கா தேவி என்னும் பெண். அவள் வேறு யாரும் இல்லை. குமாரகம்பணனின் மனைவியே தான். முதல் முதல் பயணக்கட்டுரை இவளாலேயே எழுதப்பட்டது. அதுவும் முழுக்க முழுக்க வடமொழியில். அந்த மொழியின் அழகில் தோய்ந்து அணுஅணுவாக அனுபவித்துப் புலமை பெற்ற கங்கா தேவி கம்பணன் மதுரையின் சுல்தான்களை விரட்டப் போர் செய்யப் போகும் போதும் அவனுடைய மற்றப் போர்களிலும் நேரிடையாகக் கலந்து கொண்டவள்.  தன் கணவன் மதுரை வரை சென்று பெற்ற வெற்றிகளை எல்லாம் மதுரா விஜயம் என்னும் காவியமாக்கி வைத்திருக்கிறாள். மேலும் இதைத் தன் கணவன் பெயரால் வீரகம்பராய சரிதம் என்னும் பெயரையும் அளித்துள்ளாள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து இந்த நிகழ்வுகள் நடந்த காலத்திலேயே வாழ்ந்து சம்பவங்களை எல்லாம் நேரிலும் பார்த்து  அனைத்தையும் பதிவு செய்து ஓர்  நூலாக ஆக்கிக் கொடுத்திருக்கிறாள் கங்கா தேவி. தென்னிந்தியச் சரித்திரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட ஆய்வு நூல்களில் இது முதன்மையானது என வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறுகின்றனர். வெகு காலம் இது பற்றி அறியாமல் கரையான் அரித்துக் கொண்டு திருவனந்தபுரத்தில் இருந்த இந்த நூல் 1916 ஆம் ஆண்டில் வெளிப்பட நேர்ந்தது. கிரந்த லிபியில் இருந்த இந்த நூல் பின்னர் அச்சில் வெளிவந்தது. அத்தகைய ஓர் சரித்திர நிகழ்வுகளைத் தான் இனி வரும் நாட்களில் நாம் காண்போம். 

No comments: