எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, July 04, 2019

வல்லபன் நிலை என்ன?

ஒன்றும் புரியாமல் விழித்த வல்லபனை ஜாடை காட்டிக் கீழே அமர்த்திய காலதத்தன் தன் கால் விரல்களால் வல்லபன் பாதத்தைத் தொடும்படி அமர்ந்து கொண்டு வல்லபனை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினான். பின்னர் தன்னுடைய மூட்டையிலிருந்து ஏட்டுக்கட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு விளக்கடியில் வைத்துக் கொண்டு அதைப் படிக்க ஆரம்பித்தான். வீரர் தலைவன் நக்கலாகச் சிரித்தான். "என்ன மந்திரம் அது தம்பி?" என்று கேட்டுக்கொண்டு வீரர் தலைவன் காலதத்தன் அருகே வந்தான். அதற்குக் காலதத்தன் வீரர் தலைவனைப் பார்த்துத் தாங்கள் இருவரும் ஜோசியர்கள் எனவும் ஆரூடம் பார்த்துச் சொல்லுவார்கள் எனவும் இன்றிரவு அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று சாத்திர ரீதியாகத் தெரிந்து கொள்ளப் பார்ப்பதாகவும் சொன்னான். ஆனால் வீரர் தலைவன் மிகவும் கெட்டிக்காரனாகவும் தந்திரக்காரனாகவும் இருந்தான்.அதைப் புரிந்து கொண்ட காலதத்தன் அருகே இருந்த குத்துவிளக்கைத் தன் காலால் இடறுவது போல் போக்குக் காட்டி விளக்கைக் கீழே தள்ளி அணைத்து அறையை முற்றிலும் இருட்டாக்கி விட்டான்.

எங்கும் இருள் படர்ந்தது. அவ்வளவு பெரிய சத்திரத்தில் ஒளி கொடுத்துக் கொண்டிருந்த ஒரே விளக்கு அணைந்ததும் தடுமாறிய வீரர் தலைவனைப் பிடித்துத் தள்ளினான் காலதத்தன். வல்லபனின் கைகளைப் பற்றி இழுத்த வண்ணம் சத்திரத்து வாயிலை நோக்கி ஓடினான். கீழே விழுந்த வீரர் தலைவன் செய்வதறியாது திகைத்தாலும் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு கதவருகில் காவலாக நின்றிருந்த கணபதி என்னும் வீரனைக் கதவைத் திறக்க விடாமல் பார்த்துக்கொள்ளும்படியும் இருவரையும் பிடிக்கும்படியும் ஆணையிட்டான். கணபதி என்ற அந்த வீரன் தன் வாளை வெகு வேகமாகச் சுழற்றினான். அதற்குள்ளாகத் தலைவன் எழுந்து கொண்டு தன் வாளை அங்கும் இங்குமாகச் சுழற்றிக்கொண்டு கூடத்தில் அங்குமிங்கும் ஓடி இளைஞர்களைத் தேடினான். எவரும் கிடைக்காமல் சோர்ந்து போனவன் வெளியே வெளிச்சத்தில் இருக்கும் காவலனை அழைத்துச் சுளுந்து கொளுத்திக் கொண்டு வரும்படி ஆணை இட்டான். 

வெளியே இருந்தவன் தன் கைகளில் வன்னிக்கட்டையை எடுத்துக் கொண்டு கடைந்து நெருப்பை உண்டாக்க ஆரம்பித்தான். ஐப்பசி மாத மழை நாள் என்பதால் அந்தக் கட்டை எளிதில் தீப்பொறியை உண்டாக்கவில்லை. ஆகவே ஊருக்குள் சென்று யார் வீட்டிலானும் நெருப்பை வாங்கி வரலாம்னு அந்தக் காவலன் ஓடினான். இதற்குள்ளாகத் தடுமாறித் தடுமாறி வெளியே வந்திருந்த வீரர் தலைவன் அந்த இளைஞர்களை உடனே இங்கே வந்துவிடுங்கள். கொன்றுவிடுகிறேன் உங்களை என்றெல்லாம் கத்த ஆரம்பித்தான். இங்கே வல்லபனும் தத்தனும் கூடியவரை மூச்சுக்காற்றுக் கூட வெளிவராமல் நடந்தனர். வாயில் கதவருகே ஒருவருக்கு இருவர் இப்போது நிற்பதால் அந்த வழியே வெளியேறுவது ஆபத்து என்பது புரிந்து விட்டது. ஆகவே புழக்கடைப்பக்கம் சென்றால் அங்கே வெளியேறும் கதவு ஏதேனும் இருக்கும் என்னும் எண்ணத்துடன் பின்புறம் செல்லும் வழியைக் குறி வைத்து நடந்தார்கள். ஆனால் அவர்கள் நடக்க நடக்க வழி நீண்டுகொண்டே போனது. எங்கே போனாலும் கும்மிருட்டுத் தான்! வெளிச்சக்கீற்றே காண முடியவில்லை.எந்தத் திசையில் செல்கிறார்கள் என்பதையும் அவர்களால் அனுமானிக்க முடியவில்லை. 

சீக்கிரம் ஏதேனும் செய்தால் தான் அந்த வீரர் தலைவன் பிடியிலிருந்து தப்பிக்கலாம். ஆகவே மெல்ல மெல்ல நகர்ந்து சுவரைக் கண்டு பிடித்து அதைத் துழாவிக் கொண்டு சென்றனர். சுவர் நடுவே ஓர் இடைவெளி காணப்படவே அதன் வழியே இருவரும் வெளியேறினார்கள். ஆனால் அது போகும் இடம் புரியவில்லை.  இது என்ன தாழ்வாரமா? அருகே எங்கானும் அறைகள் இருக்குமா? ஒன்றுமே புரியவில்லை.  கொஞ்ச தூரத்தில் சுவர் இரண்டாகப் பிரிந்தது. இருவரும் தயங்கி நின்றார்கள்.  இருவரும் அவசரமாக ஆலோசனை செய்து விட்டு நூறு எண்ணிக் கொண்டே ஆளுக்கு ஒரு திசையில் செல்ல வேண்டும் எனவும், மறுபடி நூறு எண்ணும்போது திரும்பி இதே இடத்துக்கு இருவரும் வர வேண்டும் எனவும் பேசிக் கொண்டார்கள்.  நூறு எண்ணிக் கொண்டே இருவரும் தத்தம் திசைகளில் சென்றனர்.  வல்லபன் சென்ற திசையில் அவன் தொண்ணூற்று எட்டு எண்ணும்போது அவன் நாசியில் மகிழம்பூ மணத்தது. அவன் மனம் சிலிர்த்தது. கூண்டு வண்டியில் இருந்த இளம்பெண்ணிடம் கூட இந்த வாசனை தானே வந்தது என நினைத்தான். அதற்குள்ளாக அவனுக்கு எண்ணிக்கை விட்டுப் போய் விட்டது.

குனிந்து கீழே தடவிப் பார்த்தால் கைகளில் இரும்புச் சங்கிலி நெருடியது. அதைத் தடவிய வண்ணம் போனான். சங்கிலியின் கண்ணிகள் மேலே மேலே போய்க் கொண்டிருந்தன. அதைத் தடவிய வண்ணம் அவன் கீழே ஊர்ந்தான். முடிவில் அவன் கைகளில் மிக மிக மிருதுவான தாமரைப் பூவின் ஸ்பரிசம் பட்டது. ஆனால் என்ன ஆச்சரியம்! அந்தத் தாமரை வாய் திறந்து பேசியது! "யாரது?" என மெல்லிய சீறலாகக் கேட்டது அந்தக் குரல். வல்லபன் மறுமொழி சொல்ல ஆரம்பிக்கையில் கூடத்தில் ஏதேதோ சப்தங்கள்! கதவு திறக்கும் சப்தங்கள், காலடி ஓசைகள்! திடீரென சத்திரம் பிரகாசமாக ஒளிர்ந்தது.அறைகள் அனைத்திலும் பளீரென வெளிச்சம் பரவிப் பாய்ந்தன. ஓர் வீரன் கையில் ஓர் சுளுந்தைத் தூக்கிக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்து விட்டான்.

No comments: