எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, August 02, 2019

வல்லபனின் துக்கம்!

அந்தப் பெண்ணின் வண்டி சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வல்லபன். அதைக் கண்ட தத்தன் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, "என்ன விஷயம்?" என வினவினான். ஆனால் வல்லபனால் பேச முடியவில்லை. அந்தப் பெண் சென்ற திசையை விட்டு அவன் கண்கள் நகரவில்லை. வாய் மட்டும் , "ஒன்றுமில்லை!" எனப் பிதற்றியது. அவன் நிலையைப் புரிந்து கொண்ட தத்தன், "அப்பா, வல்லபா! இதைக் கேள்! பொதுவாகவே இளம் பெண்கள் தங்கள் கைகளால் எதைத் தொட்டாலும், "பட்ட மரம் தளிர்க்கும்." என்பார்கள்.  அவர்கள் காலால் உதை படும் அசோக மரம் பூக்கும். பகுல மரம் என்ற ஒன்று உள்ளது. அது இளம் கன்னிப் பெண்கள் வாயில் மதுவை வைத்து மரத்தின் மேல் உமிழ்ந்தால் பூக்கும் இயல்பு உள்ளது என்பார்கள். அவர்களின் காதல் மொழியிலேயே பூக்கும் பல மலர்கள் உண்டு. சிரித்தால் சில மலர்கள் மலரும். அவர்கள் சுவாசத்தால் பழ மரங்கள் இனிமையான கனிகளைக் கொடுக்கும்  சாதாரணப் பெண்களுக்கே இப்படி எனில், இப்போது வண்டியில் போனாளே, அவள் சிறந்த பத்மினி ஜாதிப் பெண்! அவள் பார்வை பட்ட மாத்திரத்திலேயே அனைத்தும் நடந்து விடும். அத்தனை உயிரோட்டமுள்ள பார்வை. அந்தத் தலைவன் நெஞ்சில் தான் ஈரம் இல்லை!" என்று முடித்தான்.

வல்லபன் அனைத்தையும் கேட்டுக் கொண்டு மௌனமாகவே இருந்தான். பின்னர் பொழுது நன்கு புலர்ந்து வெயிலும் ஏற ஆரம்பிக்க இளைஞர்கள் இருவரும் மீண்டும் பயணப்பட ஆரம்பித்தார்கள். காலை உணவு ஏதும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆதலால் அவர்களால் விரைவாக நடக்க முடியவில்லை. மெதுவாகவே சென்று கொண்டிருந்தனர். கிழக்கு நோக்கிச் சென்ற ராஜபாட்டையில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர் இருவரும்.  வல்லபன் மனதில் அந்தப் பெண்ணும் அந்தக் கூண்டு வண்டியும் அந்தப்பெண்  கைகளும், கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலைமையுமே மாறி மாறி வந்து கொண்டிருந்தது. ம்ம்ம்ம், இதே சாலையில் தான் அவளும் சற்று நேரத்திற்கு முன்னால் சென்றிருப்பாள். அவள் செல்கையில் பொழுது நன்றாகப் புலரவில்லையோ? இதே மரங்களையும், செடி, கொடிகளையும் அவளும் பார்த்திருப்பாள் அல்லவா? இந்தப் பட்சிகள்  அப்போதும் இதே போல் இனிய கானம் இசைத்துக் கொண்டிருந்திருக்கும் அல்லவா? அவள் என்ன நினைத்துக் கொண்டு போயிருப்பாள்? என் நினைவு அவளுக்குள் வந்திருக்குமா? இந்தச் சாலையில் எவ்வளவு தூரம் அவள் முன்னால் போயிருப்பாள்? அல்லது எங்கானும் தங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறார்களோ? தத்தனும்  மௌனமாகவே வல்லபனின் நிலையைக் கண்டு வந்தான்.

சற்று நேரம் பொறுத்து, "வல்லபா! என்ன உன் கவலை? எதைக் குறித்து மனக்கிலேசம் கொண்டிருக்கிறாய்?" என்று வினவினான். வல்லபன் திடுக்கிட்டான். எதுவும் இல்லை என மறுத்தான். ஆனால் தத்தன் அதை நம்பவில்லை. வல்லபன் மௌனமாகவே வருவதைச் சுட்டிக்காட்டி, மனக்கிலேசத்தினால் தான் அவன் அவ்வாறு வருவதாய்க் கூறினான். அதற்கு வல்லபன் கொஞ்சம் தயங்கி விட்டுப் பின்னர் தன் மனம் துக்கம் அடைந்திருப்பதாய்க் கூறினான். எதனால் துக்கம் என்று தத்தன் கேட்டான். அதற்கு வல்லபன், மெல்லத் தயங்கிக் கொண்டே, "அது தான்! அந்த இளம்பெண். அவள் விருப்பத்திற்கு மாறாக அல்லவோ அவளைச் சங்கிலியால் பிணைத்து அழைத்துச் செல்கின்றனர். இது எனக்குத் துக்கத்தை உண்டாக்கி விட்டது!" என்றான். தத்தன் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "வல்லபா! இது என்ன புதுமையா? இப்போதெல்லாம் இப்படி நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டதே! இந்தப் பெண்ணுக்காக நீ ஏன் கவலைப்படவேண்டும்?" என்றான்.

வல்லபனோ தான் இப்போது தான் முதல் முறையாக இதைப் பார்ப்பதால் மனம் அதிகம் அதிர்ச்சி அடைந்திருப்பதாய்ச் சொன்னான். பின்னரும் சற்று நேரம் இருவரும் மௌனமாகவே பயணத்தைத் தொடர்ந்தார்கள். பல காத தூரங்களை அன்று ஒரே நாளில் எளிதில் கடந்தார்கள். பின்னர் ஓர் காட்டாற்றின் கரையிலிருந்த ஓர் மண்டபத்தில் இரவு தங்கி நன்கு உறங்கினார்கள். இரவெல்லாம் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் உறங்கினார்கள். காலை எழுந்து காட்டாற்றில் குளித்து முடித்து உடைகளை அணிந்து கிளம்ப வேண்டி ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது சட்டெனத் தனக்கு எதிரே ஏதோ பார்த்த தத்தன் கலவரம் நிறைந்த முகத்தோடு வல்லபனை அழைத்து, "அதோ பார்!" எனச் சுட்டிக்காட்டினான். ஓர் வீரன் குதிரையில் ஏறிக்கொண்டு வாளை ஓங்கிய வண்ணம் தலை தெறிக்கும் வேகத்தில் வந்து கொண்டிருந்தான். காலதத்தன் முன்னால் சென்ற வீரர் தலைவன் தான் அந்த ஆளை அனுப்பி இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு மோசம் போய்விட்டோமே எனப் புலம்பிய வண்ணம் செய்வதறியாது திகைத்தான்.

No comments: