எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, August 11, 2019

கன்னியின் மகரகண்டிகை சொன்ன செய்தி!

அந்தப் பெண் தங்களுக்கு "முறி" எழுதி இருப்பதாக அந்தப் புதியவன் சொன்னதை தத்தன் சிறிதும் நம்பவில்லை. (முறி-கடிதம், பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதுவார்கள்.) நமக்கு ஏன் அவள் முறி எழுத வேண்டும் என தத்தன் நினைத்ஹ்டான். ஆனால் வல்லபனுக்கோ பரபரப்பு உண்டாயிற்று! அந்தப் பெண்ணா முறி எழுதி இருக்கிறாள்? அதுவும் நமக்கு என நினைத்துப் பரபரத்தான். தத்தனோ வல்லபனிடம் அந்த ஆள் சொல்லுவதை நம்பவேண்டாம். அவன் தங்களை ஏமாற்றுகிறான் என எச்சரித்தான். ஆனால் அந்த யாத்ரிகன் தன் இடுப்பிலிருந்து ஓர் ஓலை நறுக்கை எடுத்து வெளியில் போட்டான். தத்தனைப் பார்த்து, "தம்பி! இப்போதாவது நம்புகிறாயா?" என வினவினான்.  அதை எடுத்துப் படிக்குமாறும் கூறினான். ஆனால் அந்த ஓலை நறுக்கு சாதாரணமாக அனைவரும் எழுதும் பனை ஓலை போல் இல்லை. சரியாக நறுக்கப்படவும் இல்லை. ஒழுங்கற்று காணப்பட்டது.  அதை அந்த யாத்ரிகன் கீழே போட்டதும் சற்றே உருண்டு போய்ச் சிறிது தூரத்தில் நின்றவண்ணம் காற்றில் ஆடியது.

வல்லபன் அதை எடுக்கக் குனிந்தான். ஆனால் தன் தாழங்குடையைச் சுற்றிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்த தத்தன் அதை எடுக்க வேண்டாம் என எச்சரித்தான். தான் சொல்லுவதை அவர்கள் நம்பவில்லை என்பதைக் கண்ட யாத்ரிகன் தத்தனிடம் இன்னொரு அடையாளமும் இருப்பதாகச் சொல்லிவிட்டுத் தன் இடுப்பின் இன்னொரு பகுதியிலிருந்து ஓர் மகர கண்டிகையை எடுத்தான்.  அந்த மகர கண்டிகையை உயரே தூக்கிக் காட்டினான். மிகவும் விலை உயர்ந்தது அது. அந்தக் காலகட்டத்தில் அது பல நூறு கழஞ்சுகளுக்கும் மேல் மதிப்புள்ளது. பெரும்பணக்காரர்களும் அரச குலத்தினருமே அணிய முடியும். இருவரும் அந்த யாத்ரிகன் இதை அந்தப் பெண்ணிடமிருந்து திருடி வந்திருப்பானோ என யோசனையுடனும் அதிர்ச்சியுடனும் அவனைப் பார்த்தார்கள். இருவருமே ஏதும் பேசவில்லை.

அவர்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டது போல் அந்த யாத்ரிகன் தான் எப்படி அந்த மகர கண்டிகையைக் கண்டெடுத்தோம் எனச் சொல்ல ஆரம்பித்தான். அவர்களைப் பார்த்து தத்தனும், வல்லபனும் சத்திரத்தில் இருந்து சென்றபிறகும் கூடத் தங்கி இருந்ததாகவும் அவர்கள்  இருவரும் ஏதும் அறிந்து கொள்ளாமல் சென்று விட்டதாகவும் கூறினான். மேலும் தான் அவர்களைப் போல் கருக்கிருட்டில் கிளம்பாமல் நன்றாக விடிந்து ஒரு ஜாமம் ஆன பின்னர் கிளம்பியதாகவும் அதனால் சத்திரத்தை ஒவ்வோர் அறையாக நன்கு சோதித்துப் பார்க்க முடிந்ததாகவும் கூறினான். முக்கியமாய் அந்தப் பெண் சிறையிருந்த அறையை நன்கு சோதனை இட்டதாய்க் கூறினான். அப்போது தான் கட்டிலுக்குக் கீழே இந்த மகரகண்டிகையைக் கண்டெடுத்ததாயும் கூறினான். அந்த மகர கண்டிகையில் ஓர் நுனியில் நூலால் சுற்றப்பட்டு இந்த ஓலை நறுக்கு இருந்ததாகவும் கூறினான். அதைப் பிரித்துப் பார்த்தால் இந்த இளைஞர்களுக்கு என அது எழுதப் பட்டிருந்ததாகவும் ஆகவே அவர்களை எப்படியேனும் சந்தித்து இதைக் கொடுக்க வேண்டும் என்றே தான் வந்ததாயும் கூறினான். ஆனால் அவர்கள் இருவரும் சிறிதும் அவனை நம்பவில்லை என்பது தனக்கு வருத்தத்தைத் தருவதையும் கூறிவிட்டு இனியும் இங்கே நின்று கொண்டு நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்பதால் தான் விடைபெற்றுச் செல்வதாய்க் கூறிக் கை கூப்பினான்.

வல்லபன் அந்த ஓலை நறுக்கையே பார்த்தான். மெல்ல எழுந்து நறுக்கின் அருகே போய் அதை எடுத்தான். அது எல்லோரும் எழுதும் பனை ஓலை அல்ல. சாதாரணமாகக் கூடை முடையும் ஓர் ஓலை! அதில் எழுத்தாணி கொண்டு எழுத முடியாது. சந்தேகத்துடன் அதைப் பிரித்துப் பார்த்தான். அவன் கண்களுக்கு முதலில் எதுவுமே தெரியவில்லை. பின்னர் கூர்ந்து கவனித்தான். தெளிவில்லாத எழுத்துக்கள் அதில் காணப்பட்டன. எழுத்தாணியால் எழுதப் பட்டதாகத் தெரியவில்லை. ஏதேனும் கூர்மை இல்லாப் பொருள் அல்லது மலர்க்காம்புகளால் எழுதி இருக்கலாமோ? மிகவும் சிரமப் பட்டு வல்லபன் அதை வாசித்தான்.  அதில் சத்திரத்தில் தங்கிய அந்த இளைஞர்களுக்கு மகரகண்டிகையை அடையாளம் வைத்துத் தான் எழுதுவதாகவும், தான் தெற்கே!" இது வரை எழுதப் பட்டிருந்தது. தெற்கே எங்கே போகிறார்கள்? ஒன்றும் புரியவில்லை. பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் அந்தப் பெண் அதை அங்கேயே விட்டுச் சென்றிருக்கிறாள்.

அதை தத்தனிடம் கொடுக்க அவனும் படித்துவிட்டுத் தலையை ஆட்டினான். அவனுக்கும் ஏதும் புரியவில்லை. என்றாலும் அவனால் இன்னமும் அந்த யாத்ரிகனை நம்ப முடியவில்லை. ஆகவே வல்லபனிடம் இவன் சொல்வதை எல்லாம் நம்பவேண்டாம் எனவும் அவன் பசப்புக்காரனாகத் தெரிகிறான் எனவும் கூறினான். அதற்கு வல்லபன் மகர கண்டிகை பல நூறு கழஞ்சுகள் பெறும் எனவும் கடிதமும் அந்தப் பெண்ணால் தான் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினான். பிறகு அந்த யாத்ரிகனைப் பார்த்து அவன் யார் எனவும் எங்கிருந்து வருகிறான் எனவும் கேட்டான். மேலும் அந்த யாத்ரிகன் செய்யும் காரியங்கள் எல்லாம் சந்தேகாஸ்பதமாக இருப்பதால் தங்களால் அவனை நம்ப முடியவில்லை என்பதையும் கூறினான்.

No comments: