எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, January 08, 2021

தத்தனுக்கு நேர்ந்தது என்ன? ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

தன்னை சுதாரித்துக் கொண்ட மஞ்சரி அங்கிருந்து கிளம்பி வைத்தியர் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் இரு வேலைக்காரகள் அங்கே வந்து தத்தனைப் படுத்திருந்த கட்டிலோடு சேர்த்துத் தூக்கிச் சென்றார்கள். திடுக்கிட்ட அந்த வீரன் என்னவென விசாரித்ததற்கு நோயாளி இறந்துவிட்டான் என்பதால் உடலை அகற்றி விட்டார்கள் எனத் தெரியவந்தது. 

அங்கே சத்திரத்தில் தங்கி இருந்த வல்லபனுக்கோ தூக்கமே வரவில்லை. ஊரிலிருந்து கிளம்பியதில் இருந்து நடந்தவற்றை எல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்தான். ஏதேதோ சம்பவங்கள் நடந்திருந்தன. அடுக்கடுக்காக நடந்து கொண்டே இருந்தன. அந்தக் கூண்டு வண்டியையும், அதில் அந்தப் பெண்ணையும் பார்த்ததில் இருந்து சங்கடங்கள்! தலைவனிடம் அகப்பட்டு அவனோடு விவாதித்துத் தூக்குக் கயிற்றிலிருந்து மீண்டு வந்தது என அடுத்தடுத்து நினைவில் வந்தன. அரங்கனைத் தானே தேடிக் கொண்டு கிளம்பினோம்.அரங்கனும் கிடைக்கவில்லை. அவனைப் பற்றிய மேல் அதிகத் தகவல்களும் கிட்டவில்லை. எத்தனை இடையூறுகள் நேரிட்டு விட்டன?

யோசித்த வல்லபனுக்கு தத்தனின் நினைவு வந்துவிட்டது. அந்தச் சேவகன் தத்தனைப் பார்த்திருப்பானோ? அடையாளம் கண்டு கொண்டிருப்பானோ?  ஓடுமானூரில் அவர்களோடு சமாதானம் செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் தங்கள் மேல் மறுபடி மோதல் போக்கைக் கடைப்பிடித்தால்?  ஏனெனில் அவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தி வைத்தது அந்தக் கற்பூர வியாபாரி தான். அவனால் தான் சமாதானம் ஏற்பட்டது. அந்த வீரர் தலைவன் அதை ஏற்கவே இல்லை என்பது அவன் முகத்தில் அப்போதே தெரிந்தது. அதிலும் அந்தப் பெண்ணைக் காட்டும்படி சொன்னபோது அந்த வீரர் தலைவன் முகத்தில் கோபமும், குரோதமும் கொழுந்து விட்டெரிந்தது. அந்தப் பெண்ணை அவர்கள் ரகசியமாக அழைத்துச் சென்றிருந்திருக்கிறார்கள். ஆகவே அந்தப் பெண்ணைப் பலர் முன்னால் தான் காட்டச் சொன்னது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. 

ஆகவே அவனுக்குத் தன்மேல் கோபம் இன்னமும் குறைந்திருக்காது.  வஞ்சகத்தைத் தீர்த்துக் கொள்ளச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பான். நினைவுகள் மேலே மேலே வந்து மோதின வல்லபனுக்குள். உறக்கம் என்பதே வரவில்லை. மனதில் கலக்கம் ஏற்பட்டு விட்டது. ஏதோ நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லியது. ஆகவே வல்லபன் உடனே எழுந்து தன் சுமைகளைச் சேகரித்துக் கொண்டான். சத்திரத்து அதிகாரியிடம் தான் இப்போதே செல்வதாகக் கூறிவிட்டுச் சத்திரத்தை விட்டு வெளியேறினான். அந்த ஊரில் மொத்தம் நான்கு பெரிய வீதிகளும் இரண்டு சிறிய தெருக்களும் இருந்தன. அங்கே யார் வீட்டுத் திண்ணையிலாவது இடம் பெற்றுப் படுக்க வேண்டும் என நினைத்தான் வல்லபன். ஒரு வீதிமுனை திரும்புகையில் பேச்சுக்குரல்கள் கேட்டுச் சற்றே நின்றான். அவனைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஒருவன் சொல்கிறன்: அதே பையன் தான்! சத்திரத்தில் தான் தங்கி இருப்பான். வேறே எங்கும் சென்றிருக்க மாட்டான்!" என்றான்.

"நிச்சயமாய்ச் சொல்கிறாயா? அவனேதானா? உனக்குக் கொஞ்சம் போதாது. தப்பாக அடையாளம் கண்டிருப்பாய்!" இன்னொருவன்.

இருவர் வாக்குவாதங்களும் முற்ற ஆரம்பித்தன. 

No comments: