எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, January 01, 2021

ஆதுரசாலையில் தத்தன்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 ப்ளாகர் திடீர் திடீர்னு சண்டித்தனம் பண்ணுது. இன்னிக்குப் பதிவை எப்படியானும் போடணும்னு நினைச்சு முயற்சிகள் செய்தால், "இன்னிக்குப் போட முடியாது!" unable to create new post!" என்றே செய்தி வருது. என்னடா இது சோதனைனு நினைச்சுட்டு மறுபடி மறுபடி விடாமல் முயற்சி செய்ய ஒரு வழியா வந்தது. கிட்டத்தட்ட ஒரு மாசமா எழுத முடியலை. வீட்டில் உறவினர் வந்து ஒரு வாரம் இருக்கப் போறாங்கனு நினைச்சு எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு இருந்தேன். வந்தவங்க உடனே கிளம்பிப் போயிட்டாங்க. ஆனாலும் பதிவு போட முடியலை. என்னமோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்னிக்கு எப்படியானும் உட்கார்ந்துடணும்னு உட்கார்ந்திருக்கேன். 

*************************************************************************************

அவ்வளவில் இருவரும் அன்றிரவு உறங்கிவிட்டார்கள். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் தத்தனுக்கு உடல் கொதித்துக் கொண்டிருந்தது. கஷாயம் சாப்பிட்டுவிட்டு தத்தனை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டுப் பார்த்தால் இரவில் மறுபடி ஜூரம் அதிகம் ஆகி தத்தன் கன்னாபின்னாவெனப் பிதற்ற ஆரம்பித்தான். வல்லபன் செய்வதறியாது சத்திரத்து உதவியாளர்களை அழைக்க அவர்கள் ஓர் வண்டி வைத்து தத்தனையும், வல்லபனையும் அங்கிருந்த ஆதுரசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வயோதிக வைத்தியரின் வீட்டிற்குப் பக்கத்திலேயே அந்த ஆதுர சாலை இருந்தது. அவரும் இவர்களை உடனே அடையாளம் கண்டு கொண்டுவிட்டார். இளம் வயது என்பதால் தேவையின்றி மழையில் நனைந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டே தன் வைத்தியத்தை ஆரம்பித்து வைத்தார். 

சுற்றும் முற்றும் பார்த்த வல்லபன் அங்கே தத்தனைத் தவிர இன்னமும் 30 பேர் சிகிச்சைக்கு வந்திருப்பதையும், அங்கே படுக்கைகளில் படுத்திருப்பதையும் கண்டான். எங்கும் மருந்தின் மணம் சூழ்ந்து இருந்தது. வல்லபன் தத்தனின் கை, கால்களைத் தேய்த்து விட்டுச் சூடு பண்ணிவிட்டுப் போர்வையால் அவன் உடலைப் போர்த்திவிட்டுப் பின்னர் நோயாளியுடன் வந்தவர்களுக்கு எனப் பிரத்யேகமாய் இருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்து இளைப்பாறினான். இருள் கவிந்து வந்த அந்த மழைக்கால மாலைப் பொழுதில் ஆதுர சாலையின் அந்தக் கூடத்திலும் இருள் சூழ ஆரம்பிக்க இரு பெண்கள் வந்து ஆங்காங்கே மாடங்களில் உள்ள விளக்குகளை ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தியைப் பார்த்துத் திகைத்தான் வல்லபன். தத்தன் தண்ணீரில் விழுந்தபோது அவனைக் கைப்பிடித்துத் தூக்கிய பெண் தான் அவள். சின்னப் பெண்ணான அவள் சுறுசுறுப்புடன் ஒவ்வொரு மாடமாகச் சென்று விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு இடமாகப் போன அவள் அந்த ஆதுரசாலையின் ஓர் ஓரத்துக் கட்டில் அருகே விளக்கை ஏற்றும்போது அந்தக் கட்டிலில் படுத்திருப்பவரைப் பார்த்த வல்லபனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. எங்கேயோ பார்த்த நினைவு வந்தது. காலில் கட்டுகளுடன் அங்கே படுத்திருந்த மனிதனையும், அவனது கால் மாட்டில் வல்லபனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நிற்பவரையும் ஏற்கெனவே பார்த்த மாதிரி இருந்தது வல்லபனுக்கு.  எங்கே பார்த்தோம் என யோசித்தவனுக்கு திடீரென நினைவு வந்தது. ஆஹா! இவர்கள் அந்த மகரவிழி மங்கைக்குப் பாதுகாவலாகச் சென்ற சேவகர்கள் ஆயிற்றே! இங்கே எப்படி வந்தார்கள்? தன்னைப் பார்த்திருப்பார்களோ? அப்படிப் பார்த்து அடையாளமும் தெரிந்து கொண்டால் ஆபத்தாயிற்றே!

இவர்கள் இருவர் மட்டும் இருக்கிறார்களா? அல்லது மற்றவர்கள் இவர்களுக்காக இந்த ஊரிலேயே காத்திருக்கிறார்களா? அப்படியானால் அந்த மகரவிழியாள்? அவள் எங்கே போயிருப்பாள்? அவள் கட்டாயமாய் பாண்டிய ராஜகுமாரியாகத் தான் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் நினைத்த வல்லபன் விளக்குகளை ஏற்றி முடித்துத் திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த இளம்பெண்ணைப் பார்த்துவிட்டு அவளைத் தொடர்ந்து சென்றான்.  இரண்டே எட்டில் அவளை அடைந்து முன்னால் சென்று அவள் வழியை மறிக்கிறாப்போல் நிற்கவே அவள் வல்லபனைப் பார்த்துப் புரிந்து கொண்டு குறும்புப் புன்னகை செய்தாள். அவள் பெயர் என்னவென்று கேட்டுக்கொள்ளவில்லையே என நினைத்தவண்ணம் வல்லபன் அவளிடம், அவசரமாக ஓர் உதவி வேண்டும் என்று கெஞ்சினான்.  அந்தப் பெண்ணோ அதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு தத்தன் மீண்டும் வழுக்கி விழுந்துவிட்டானா? என்று கேலியாகக் கேட்டுவிட்டுக் கலகலவெனச் சிரித்தாள்.

வல்லபன் அதற்கு தத்தன் அந்த ஆதுரசாலையில் தான் ஜுரத்துடன் படுத்திருப்பதாகச் சொன்னான். அவள் ஆச்சரியத்துடன் அப்படியா எனவினவிவிட்டு எங்கே படுத்திருக்கிறான் என்பதையும் கேட்டாள். தூரத்தில் இருந்தே தத்தன் படுத்திருந்த கட்டிலைச் சுட்டிக்காட்டிய வல்லபன், அந்த சேவகர்கள் இருந்த இடத்தையும் சுட்டிக் காட்டிவிட்டு இந்தச் சேவகர்களால் தங்கள் இருவருக்கும் எந்நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்பதை விளக்கிச் சொன்னான். அந்தப் பெண்ணிடம் அதனால் தான் வேண்டிக் கேட்டுக் கொள்வதாகவும் அந்தச் சேவகர்களால் தத்தனுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க அவள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டவன், அவர்கள் மேல் தாக்ஷண்யம் வைத்து அந்தப் பெண் இதைச் செய்ய வேண்டும் எனவும், மேலும் தொடர்ந்து வல்லபன் அங்கேயே இருந்தால் அவனுக்கும் ஆபத்து வந்துவிடும் என்பதால் தான் போய்வருவதாகவும், தத்தனைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படியும் சொல்லிக் கொண்டே வாசல்பக்கம் ஓடினான் வல்லபன். அந்தப் பெண்ணோ பிடி கொடுத்தே பேசவில்லை.

No comments: