எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, June 23, 2021

சிங்கழகரின் அனுபவங்கள்! ஶ்ரீரங்க ரங்கநாதரின் பாதம் பணிந்தோம்!

 சத்திரத்துக்குத் திரும்பினாலும் தத்தன் கண்களின் எதிரே மஞ்சரியின் முகமே அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தயவாக ஆறுதலாக அந்தப் பெண்ணிடம் நடந்து கொண்டிருக்கலாமோ என நினைத்துக் கொண்டான் தத்தன். மறுநாள் காலையில் கட்டாயமாய் அந்தப் பெண்ணைப் போய்ப் பார்த்து ஆறுதலாக நாலு வார்த்தைகள் பேச வேண்டும் என தத்தன் நினைத்துக் கொண்டான். மறுநாள் காலையில் இருவருமே மஞ்சரியின் மாமா வீடு சென்றனர்.  மஞ்சரி அவர்களைக் கண்டதுமே மிகுந்த உற்சாகத்துடன் அவர்களுக்கு உபசரணைகள் செய்தாள். ஓர் பெரிய கிண்ணம் நிறையக் காய்ச்சிப் பக்குவமாய் நாட்டுச் சர்க்கரை சேர்த்த பசும்பாலை இதமான சூட்டுடன் குடிக்கக் கொடுத்தாள். 

சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் பின்னர் மெதுவாக சிங்கழகரிடம் தாங்கள் இருவரும் அரங்கனைக் கண்டு பிடிக்கும் வேலையில் இருப்பதாகவும் அரங்கனை எங்கே கண்டு பிடிக்க முடியும் என்பது பற்றி அவருக்கு ஏதேனும் தெரியுமா என்றும் கேட்டார்கள். இதைக் கேட்ட சிங்கழகர் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் பெருகியது. எழுந்து வந்த அவர் இளைஞர்களைத் தழுவிக் கொண்டு கண்ணீர் மழை பொழிந்தார். இக்காலத்தில் அரங்கனை நினைப்பாரும் இருக்கிறார்களே எனச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  அரங்கன் என ஒருத்தர் இருந்ததையே பலரும் மறந்திருக்கையில் இளைஞர்களான இவர்கள் இருவரும் அவன் இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு செல்வதை அறிந்து மிகவும் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு ஆசிகள் வழங்கினார். அவர்கள் யாரெனக் கேட்டார். வல்லபனின் தந்தை பற்றி அறிந்ததுமே அவருக்குள் ஆனந்தம் பொங்கிற்று. தான் வல்லபனின் தந்தையை நேரில் பார்த்திருப்பதாகவும், அவர் வீரத்தைக் குறித்தும் அறிந்திருந்ததாகவும் சொன்னார்.

வல்லபன் பார்க்கத் தன் தந்தையையே சாயலில் உரித்து வைத்தாற்போல் இருப்பதையும் சொன்னார்.  வல்லபனின் தந்தை அரங்க நகரையும், அரங்க நகரத்து மக்களையும், அரங்கனையும் கொடியோர் கைகளில் இருந்து பாதுகாக்கப் பட்ட பாட்டை நினைவு கூர்ந்தார் அந்தக் கிழவர். அதோடு இல்லாமல் வல்லபனின் தாய் வாசந்தியைப் பற்றியும் மிகவும் புகழ்ந்து சொன்னதோடு அல்லாமல் வல்லபனைக் குறித்துப் பெருமிதமும் கொண்டார். இப்போதுள்ள நிலைமையில் நாடுகளெல்லாம் அழிந்து நம் சமயங்கள் எல்லாம் சீரழிந்து வரும் இந்தச் சமயத்தில் அரங்கனை நினைப்பாரும் உண்டோ! அவனைத் தேடுவாரும் உண்டோ எனச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  வல்லபன் அவரிடம் அரங்கனைத் தூக்கிக் கொண்டு கோட்டையிலிருந்து புறப்பட்டஐவரில் சிங்கழகரும் ஒருவர் எனத் தான் அறிந்திருப்பதைக் குறித்துக் கூறினான்.ஆகவே சிங்கழகருக்கு நேர்ந்ததை எல்லாம் அவர் நினைவில் இருக்கிறபடி அப்படியே கூறினால் அதிலிருந்து அரங்கன் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைக்கலாம் என்றான் வல்லபன்.  சிங்கழகரும் அதை ஒப்புக் கொண்டு தன் நினைவில் இருந்தவரையிலும் எல்லாவற்றையும் வல்லபனுக்கும் தத்தனுக்கும் எடுத்துக் கூறலானார். 

No comments: