எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, June 26, 2021

சிங்கழகரின் அனுபவங்கள் தொடர்ச்சி! ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம்.

 அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள திருநாராயணபுரத்தில் அரங்கனை எழுந்தருள வைத்துக் கொண்டு பலரும் அங்கேயே அரங்கனுடன் தங்கிவிட்டார்கள் என்றார் சிங்கழகர். தாமும் அவர்களில் ஒருவனாக அப்போது இருந்ததாகவும் சொன்னார். மொத்தம் அறுபது பேர் கிளம்பியதில் யாத்திரையின் கடுமையான சோதனைகளில் பலரும் திசைமாறிப்பல்வேறு திக்குகளிலும் போய்விட சிலர் ஆங்காங்கே தங்கி விட எஞ்சிய சிலருடன் கன்னடத்தின் மேல்கோட்டையில் அரங்கனுடன் சிலர் தங்கினார்கள். அவர்களில் சிங்கழகரும் ஒருவராக இருந்தார்.  சில ஆண்டுகளின் பின்னர் ஹொய்சள மன்னன் மதுரை சுல்தானுடன் சண்டை இடுவதாகத் தகவல்கள் கிட்ட மேல்கோட்டையிலிருந்து கிளம்பி கொங்கு வழியாகச் சத்தியமங்கலத்தை வந்தடைந்தனர் சிலர். அவர்களில் சிங்கழகரும் ஒருவர். ஆனால் அந்தப் போரில் ஹொய்சள மன்னன் கொல்லப்பட்டு ஹொய்சளப்படைகள் தோல்வி அடைய மீண்டும் மேல்கோட்டையை நோக்கிச் சென்றுவிட்டனர் அனைவரும். 

சுல்தானியர்களோ தமிழர்களின் இந்தத் திடீர் எழுச்சியைச் சகிக்காமல் மேலும் கோபம் கொண்டு அக்கம்பக்கம் நாடுகளையும் குறிப்பாக ஹொய்சள நாட்டையும் கோயில்களையும் சூறையாடினார்கள். அவர்கள் அப்படியே அரங்க விக்ரஹம் மேல்கோட்டையில் இருக்கும் செய்தியைத் தெரிந்து கொண்டு அங்கே வருவார்கள் என்னும் செய்தி மேல்கோட்டையில் பரவியது. பீதி அடைந்த அவர்கள் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வேறெங்காவது இன்னமும் தூரமாகப்போய்விட எண்ணினார்கள். ஆனால் வடக்கே செல்ல முடியாது. ஏனெனில் வடக்கே பெரும்பாலும் துருக்கியரே ஆண்டு வந்தனர். ஆகவே கிழக்கே செல்லலாம் என நினைத்துத் திருமலை/திருப்பதி நோக்கிப் போய் அங்கேயே தங்கத் தீர்மானம் செய்தனர் அவர்கள் அனைவரும்.  இவர்கள் இப்போது ஐந்து பேர்களாகக் குறைந்து விட்டனர். திருவரங்கத்திலிருந்து கிளம்பிய போது அறுபது பேர்களாக இருந்தவர்கள் இப்போது ஐந்து பேர்களாகக் குறைந்து விட்டனர். இவர்களில் சிங்கழகர் தவிர இன்னொருவர் மாலழகர். மற்ற மூவரும் பந்துக்களான கொடவர்கள் குருகூர் தாசர், சீராம தாசர், வில்லிப்புத்தூர் தாசர் ஆகியோர்.  சீராம தாசர் குருகூர் தாசரின் மகன். வில்லிபுத்தூர் தாசரோ சீராம தாசரின் தாய் மாமன் ஆவார்.

அரங்கனின் பொன் நகைகள், எஞ்சி இருந்த அணிமணிகள், ஆடைகள் என அனைத்தையும் ஓர் சுமையாகக் கட்டி ஒருவர் எடுத்துக் கொண்டோம். அரங்க விக்ரஹம் கனமாக இருந்ததால் மாறி மாறி அவரைத் தங்கள் தோள் மேல் வைத்துக் கொண்டு சென்றோம்.வழியெங்கும் கலவரமாக இருந்ததால் மிகவும் கவனமாக வழி நடந்து ஆங்காங்கே வைணவர்களாகத் தேடித்தேடி அவர்கள் உதவிகளைப் பெற்று இரவுகளில் ரகசியமாகத் தங்கிக் கொண்டு நாற்பது நாட்கள் கழித்துச் சந்திரகிரிக்கோட்டையை அடைந்தோம். என்ன துரதிருஷ்டம்! சந்திரகிரிக்கோட்டையும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கவே கோட்டையைத் தவிர்த்துவிட்டுக் காட்டு மார்க்கத்தில் இறங்கிப் பிரயாணப்படும்போது அங்கிருந்த தனிப்பாதையில் மூன்று துருக்கிய வீரர்கள் காவலுக்கு இருந்தவர்கள் எங்களைப் பார்த்துவிட்டார்கள், என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தோம்.

No comments: