*************************************************************************************
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxdYgbXaooG9__AaMJEBKa1AvAvMAJS-w9NG08fUbmhE4kdRGaYx7OHlWJ5dCrfmnh9lohx6K0kLtxbOttYR3xTuQaXx_toe2OUN-UZQ_9nUMNkm_mvrXv5NxAOTXb1z7k5rRBRg/s320/WTCASR4ICGCATPLDO9CADBJN1YCANJ0LXLCAAMZ2W0CAKLPZPCCAB5BIZ3CAEE5XUUCAY6VQ4CCA2GN7FRCAM9QY20CAJFC74MCAP7FB3QCARR1KMRCAPOBERGCAHSR2HKCA730KCJCAR5YH6Z.jpg)
அது போலவே மறுநாள் காலையில் சிற்பிகளை விடுதலை செய்த மன்னன், முதலில் செய்த செப்புத் திருமேனியை ஒரு அழகிய பல்லக்கில் வைத்துக் கூடவே சிற்பிகளையும் அனுப்பித் தெற்கே பயணம் ஆகச் செய்கின்றான். தெற்கே போகப் போக எதுவும் அடையாளம் தெரியவில்லையே எனக் கலங்கிய வீரர்களுக்கு தாமிரபரணியின் வடகரைக்கு வரவும் சிலையின் கனம் அதிகரித்து வந்தது தெரிய வருகின்றது. சிலையைக் கீழே வைக்கின்றனர். அசதி மிகுந்து போய்த் தூங்கிப் போகின்றனர் வீரர்களும், சிற்பிகளும். விழித்து எழுந்து பார்த்தால் சிலை அங்கே இல்லை. பதறிப் போனார்கள் அனைவரும்.
அந்தப் பகுதியின் அரசன் யார் என விசாரித்தார்கள். ராமபாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்ததாய்த் தெரிய வந்தது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKAgPQmFyroBiBuP7Y3wNX2qDD1gVFaLOyUKyFtCwm35mrQvHivk991o1gTIsKGLO3HmfY0Aq5WyTTId33ZU6sH3IwUe8dBrXwSKW1KkAK7yB6Qp9gKHDX9wT0qEM5Cr0xYbFXtg/s320/imagesnellai.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnxnawjThUOpKmKkwoAOns12NGYtHrug4YXv39UI9Jo9he2C8cGb3aBjWjp8XCqAE8Z5h0ciyCUbkg66IH4FOTLtoIW15f_Bkkz1BgQ8ZAp9sIUjODGYxDazlOmmm81nFCAnNGpA/s320/images.jpg)
விழித்தெழுந்த மன்னனுக்குக் கனவில் கண்டது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம் வடக்கே இருந்து வந்த சிற்பிகளும், வீரர்களும் வந்து தாங்கள் கொண்டு வந்த அதி அற்புத நடனச் சிலையைக் காணோம் எனவும், ஈசனின் ஆனந்த நடன வடிவம் அது எனவும், சொல்லவே, மன்னன் மேலும் திகைத்தான். அவர்களையும் அழைத்துக் கொண்டு வனத்திற்குச் சென்றான். வனத்தினுள்ளே, உள்ளே, உள்ளே, சென்
றான். திடீரென ஓர் இடத்தில் மத்தளம், கொட்டியது. பேரிகை முழங்கியது. தேவதுந்துபி முழங்கும் சப்தம் கேட்டது. தாளம் போடும் ஒலி, அத்தோடு யாரோ ஆடும் சிலம்பொலியும் கேட்டது. மன்னனுக்கு நினைவு வந்து கீழே பார்த்தால் எறும்புகள் சாரை, சாரையாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளைப் பின் தொடர்ந்தான் மன்னன். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நடராஜரின் திருமேனி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டான். மன்னன் ஆனந்தக் கூத்தாடினான்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcKWEkBy676jifKtjTV8oO-Uad6t3wb6HJQ1RcST3JsE3GQElPw_DEin8NUilfHnJ_L3yIjCAOyqNRKawzni9u6IIqXGabsQqcLXP1RY274wS3IoRTLUt3JWEZIrSNgHv5gC5Z-A/s320/WVCAA83VKQCAZ379BLCA4M38OGCA6G1F4MCATL5F2OCAXA9W3MCATQ3AXOCAKNKAAWCA4DH6HJCATWILS4CA68B502CATG0QP3CA1U0HQECA5PRPXFCAHHIRAYCA1813IPCAG2URPFCAHDXNT3.jpg)
ஆனந்தக் கூத்தாடும் இறைவனுக்கு அங்கேயே கோயில் எழுப்பவேண்டும் என்பதை அவர் குறிப்பால் அறிவுறுத்தியதையும் நினைவு கூர்ந்தான். அந்த இடத்திலேயே தில்லைக் கூத்தனுக்கு ஓர் அற்புதக் கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். திருநெல்வேலிக்கு வடகிழக்கே, 9 கி.மீ தூரத்தில் உள்ள ராஜவல்லிபுரத்துக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். முழுக்க முழுக்கச் சிதம்பரம் கோயில் பாணியிலேயே கட்டப் பட்ட கருவறையோடு, கோயிலின் முகப்பில் காளிக்காகவும் ஒரு கோயில் இருக்கின்றது. சிதம்பரத்தின் எல்லையில் இருப்பது போல இங்கேயும் காளி குடி கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றனர். இது மட்டுமா?? இதே போல் இன்னும் இரண்டு நடராஜர்கள் அதே சிற்பியால் செய்யப் பட்டு, இதே திருநெல்வேலி மாவட்டத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதைப் பற்றி நாளை காண்போமா??
2 comments:
படிக்கும் போதே மெய் சிலிர்க்கிறது
ஒரு முறை நேரில் சென்று பார்க்கவும்.
Post a Comment