எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 18, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்! நவ கைலாயம் - 6

அடுத்ததாக நாம் பார்க்கப் போவது சுக்கிரனுக்கான தலம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து ஆத்தூர் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து புன்னைக்காயல் என்னும் ஊர் செல்லும் பேருந்தில் சென்றால் நடுவில் இரண்டு அல்லது மூன்றாம் கிலோமீட்டரில் சேர்ந்தபூமங்கலம் என்னும் பெயருடைய இந்த ஊர் வரும். இந்த ஊரில் தான் ஆறாம் நவ கைலாயம் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து வந்தால் திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆத்தூரை அடைந்தும் இங்கே செல்லலாம். வழியை நன்கு தெரிந்தவர்கள் துணையோடு சென்றால் ஒரே நாளில் நவ திருப்பதிகளிலேயே அமைந்துள்ள நவ கைலாயங்களையும், நவதிருப்பதி/நவ கைலாயம் செல்லும் வழியில் உள்ள திருப்பதி/கைலாய தரிசனங்களையும் இரண்டு நாட்களில் தரிசிக்க முடியும். சிற்ப விநோதங்களையும் மற்ற இயற்கைக் காட்சிகளையும் காணவேண்டுமானால் நவ திருப்பதி இரு நாட்கள், நவ கைலாயம் தனியாக இரு நாட்கள் என வைத்துக் கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரின் சிற்ப விநோதங்களே பெருமளவு பேசப்படக் கூடியதாகவும், சிற்பக் கலை வல்லுநர்களுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும்படியாகவும் அமைந்துள்ளதாய்க் கூறுவார்கள். நாங்க கிருஷ்ணாபுரம் போகவில்லை. இன்னொரு முறைதான் போகணும்.

இப்போ சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதரைத் தரிசிக்கலாமா? இங்கே குபேரனுக்கு மூலவரின் கருவறை விமானத்தின் மேல் சிலை உள்ளது. இரு தேவியருடன் காட்சி அளிக்கின்றான் குபேரன். யானை வாகனத்தில் நடுவில் குபேரனும், இருபக்கமும் இரு தேவியரும் காட்சி அளிக்கின்றனர். இது தவிர சதுரமான பீடம் கொண்ட ஒரே லிங்கமும், தன்னுடன் ஒரு பக்கம் அம்பிகையும் இருவருக்கும் நடுவே விநாயகரும் இருக்கக் காட்சி கொடுக்கும் அற்புதமும் காணலாம். மூலவரின் பெயர் கைலாச நாதர். ரோமசமுனிவர் ஸ்தாபித்த கோயில்களுள் ஆறாவது கோயில் இது. இங்கே மூலவரே சுக்கிர அம்சத்தோடு காட்சி கொடுக்கிறார் என்பது ஐதீகம். அம்பாள் பெயர் அழகிய பொன்னம்மை தெற்கு நோக்கிக் காட்சி கொடுக்கிறாள். கைலாசநாதரை கருவறையில் வணங்கிய பின்னர் விமானத்தில் தரிசனம் கொடுக்கும் குபேரனையும் வணங்குவது மிகவும் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. சுக்கிரனின் தோஷம் உள்ளவர்களும், செல்வம் வேண்டும் என நினைப்பவர்களும் இங்கே வந்து சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சார்த்தி, மொச்சைப் பொடிசேர்த்த சாதமும், தயிர்சாதமும் நிவேதனம் பண்ணுகின்றனர். வெண்தாமரை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் சுக்கிர ஹோரை இருக்கும் நேரம் வழிபடவேண்டும் என்றும் சொல்கின்றனர்.

இரண்டு வாசல்களுடன் கூடிய இந்தக் கோயிலின் தல விருக்ஷம் வில்வம். இங்கே உள்ள பிரகாரத்தில் சொக்கநாதர், மீனாக்ஷி அம்மையுடனும், சனீஸ்வரர், பைரவர் போன்றோரும் பரிவார தேவதைகளாக இடம் பெற்றிருக்கின்றனர். முருகன் மட்டும் தன்னைத் தனியாய்க் கவனிக்கவேண்டுமென்றோ என்னமோ, ஒரு பக்கமாய்த் திரும்பி மயில் வாகனத்தில் நின்று கொண்டிருக்கிறார். வள்ளி, தெய்வானை கூட இருந்தாலும் மயில் வலப்புறம் திரும்பி இருப்பதன் காரணம் தெரியவில்லை. கந்தனுக்குரிய சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இந்தக் கோயில் பிற்காலப் பாண்டியர்களால் கட்டப் பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. மதுரைச் சொக்கநாதரும், மீனாக்ஷி அம்மையும் இடம் பெற்றிருப்பதால் பாண்டிய காலத்துக் கோயிலாக இருக்கலாமென்றே நம்பவேண்டி உள்ளது. தாமிரபரணிதான் இங்கே தீர்த்தம். மேலும் சிறப்பு என்னவென்றால் பொதிகை மலையில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி பாபநாசத்தில் தரை இறங்கி வந்து எல்லா ஊர்களையும் கடந்து இந்த ஊர் அருகே உள்ள புன்னைக்காயலில் தான் கடலில் சங்கமம் ஆகின்றாள். திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை செல்லும் முருகபக்தர்கள் இந்தப் புன்னைக்காயலின் தாமிரபரணியில் நீராடிச் சென்ற பின்னரே திருச்செந்தூரில் கடலாடுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றார்கள். இங்கேயும் மார்கழியில் திருவாதிரைத் திருநாளும், சித்திரை மாசம் பிரம்மோற்சவமும் சிறப்பாய்க் கொண்டாடப் படுகிறது. இந்தக் கோயிலும் குறிப்பிட்ட நேரமே திறந்திருக்குமென்பதால் காலை ஏழு மணியில் இருந்து பத்து மணிக்குள்ளாகவும், மாலை ஐந்தரை மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளாகவும் சென்று தரிசிப்பது நல்லது.

5 comments:

Jayashree said...

தாரங்கதாரா கடந்தவுடன் வெத்தலை பாத்தி எல்லாம் பாத்துண்டே வந்துடலாம்.சேந்தபூமங்கலம் எட்டியவுடனேயே ஊர் வாசலில் பெரிய அழகான ST MICHAEL உடய சிலையோட ST MICAEL'S CHURCH பாத்திருப்பேளே. இதுவும் புன்னைகாயல் ST XAVIER'S ம் என்னால மறக்க முடியாத LAND MARKS. ம்ம்.. மலரும் நினைவுகள். 1976 TO 81 ஒவ்வொரு வியாழக்கிழமையும் புன்னைக்காயல் போவேன். என் rural health சாம்ராஜ்யங்கள் புன்னைகாயலும், புதியம்புத்தூரும். என்னை எதிர்பார்த்து நிற்கும், பாப்பா என்றழைக்கும், அன்பு காண்பிக்கும் சாதாரண வல்லத்து மக்கள். எனக்கு மீன் சமைத்து தரணும்னு ஒற்றை காலில் நிக்கற லாசர் பாட்டியம்மா!! என்னை காப்பாத்த பாடுபடும் ஸிஸ்டர் PAULAGRFT ம் கிரேஸம்மாவும் !! NUNS ஒடு சேவையுடன் கூடிய ஆசிர்வாதம். எவ்வளவு கொடுத்தாலும் வாழ்க்கையில் திரும்பக்கிடைக்காத தருணங்கள். மன நிறைவு அந்த SERVICE ல தான்.அப்போ இந்த கைலாயம் பத்தி தெரியல்லயே!! மத்தது அப்பப்போ பார்த்து இருக்கேன்.

குப்பன்.யாஹூ said...

serntha ppo mangalam, punnai kaayal, autthor, mukkani, eral - those are great places.
we can feel the Tamirabarani's kindness in these places.

ambi said...

இங்க எல்லாம் நான் போனதே இல்லை. உங்க வயசு வரும்போது போய்க்கலாம். அதுக்கு இன்னும் ஐம்பது வருஷம் இருக்கு. :))

முருகன் ஏன் திரும்பின்டு இருக்கார்?னு குருகளை கேக்கலையா? :)

சரி, விடுங்க தெரியாம திரும்பிட்டார்.

ambi said...

@ஜெயஸ்ரீ, சுருக்கமா நீங்க ஒரு திருனெல்வேலி தெரசான்னு சொல்லுங்க. :))

Jayashree said...

அட நீங்க வேற!! அம்பி. நானே திரிசங்குனு வருத்தத்தில இருக்கேன். போதா குறைக்கு பொன்னிவந்தாளான்னு...