
அருமை தெரியலை, போகட்டும். இப்போப் போயிருந்தப்போ பால்கோவா வாங்கினீங்களானு கேட்கிறீங்களா? ஆமாம், வாங்கினோம், வாங்கினோம், ஆனால் சுவை??? அதேபோல் தைலச் சக்கை கிடைக்கலை, ஆண்டாள் ஸ்நாநப் பவுடர்னு பாக்கெட்டுகளில் விற்கிறாங்க. அரை மனசோடு வாங்கிட்டு வந்தது இன்னும் இருக்கு தேய்ச்சுக்காமல். எல்லாம் அது ஒரு கனாக்காலமாயிட்டது. போகட்டும், ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமையை இன்றைக்கும் மாறாமல் வைத்திருக்க ஆண்டாளின் பெயர் ஒண்ணே போதுமே? வேறே என்ன வேண்டும்?? பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையின் புகழ் என்றைக்கும் மங்காது. அதே போல் நம் தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப் பட்ட அரசுச் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் தான். இதை அரசுச்சின்னமாக அறிவித்தவர் ஓமந்தூரார்னு நினைக்கிறேன். யாருப்பா அங்கே? ஓமந்தூரார் தானே அல்லது வேறே யாருமானு வந்து சொல்லுங்க கொஞ்சம். ஆனால் அப்போது பிரதமராய் இருந்த நேருவிற்கு சமயச் சின்னத்தை ஏற்க மனமில்லை என்றும், ஓமந்தூரார் இதை சமயச் சின்னமாய்ப் பார்க்கவேண்டாம் எனவும், திராவிடக் கட்டடக் கலையின் சின்னமாய்ப் பார்க்கும்படியும் சொன்னதாகக் கேள்விப்பட்டுப்படிச்சு இருக்கேன். இத்தனை புகழ் வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும், ஆண்டாளுக்கும் அடுத்ததாய்ப் புகழ் பெற்றவர் வில்லி பாரதம் எழுதிய வில்லிபுத்தூரார். மேலும் தருமை ஆதீனத்தின் குருஞானசம்பந்தருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தான் சொந்த ஊர் எனத் தெரிய வருகிறது.
வைணவ திவ்யதேசங்களில் முதலாவதான ஸ்ரீரங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒரு திவ்ய தேசம் தான். கடைசித் தலமான இது ஆண்டாளின் பிறந்த வீடு. ஸ்ரீரங்கமோ ஆண்டாளின் புகுந்த வீடு. அதோடயா?? மதுரையின் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது ஒவ்வொரு வருஷமும் ஆண்டள் சூடிக் கொடுத்த மாலையையும், அவள் அனுப்பி வைக்கும் பரிவட்டங்களையும் அணிந்து கொண்டே ஆற்றில் இறங்குவார். இவருக்காக ஆண்டாள் நூறுதடா வெண்ணெயும், நூறு தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாய் நேர்ந்து கொண்டாள். ஆனால் ஆண்டாளால் அதைச் செய்ய முடியவில்லைபோலும். ஆண்டாளின் இந்த விருப்பத்தைப் பின்னால் வந்த ஸ்ரீராமநுஜர் நிறைவேற்றி வைத்துவிட்டு ஸ்ரீவில்லி புத்தூர் சென்றால் என்ன ஆச்சரியம்??? அங்கே இருந்த ஆண்டாள் விக்ரஹம், “என் அண்ணாரே!” என அழைத்துக் கொண்டு முன் வந்து ஸ்ரீராமாநுஜரை வரவேற்றது. “பெரும்புத்தூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்ற வாழ்த்தையும் பெற்றாள் ஆண்டாள். இனி கோயிலுக்கு உள்ளே நுழையுமுன் சற்றே ஆண்டாளின் அவதாரக் கதையைத் தெரிந்து கொள்வோமா?? அனைவருக்கும் தெரிந்த ஒன்றே என்றாலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மிகச் சிறந்த சில கதைகளில் இதுவும் ஒன்று.
4 comments:
thanks for sharing. I always feel proud to say that I started my school (UKG, 1st standard) in srivilliputhur . that too under teacher Vedha.
Srivilliputhur is One of the holy town.
நானும் முதல் இரண்டு வகுப்புகள் ஸ்ரீவில்லிபுத்தூரில்தான் படித்தேன்.அந்த ஊரில் இருந்த
6 வருடங்கள் பொன்னானவை.
கீதா சொல்வது போல ஊரே மணக்கும். ஆண்டாள் மாலையின் அழகு சொல்லி முடியாது. தங்கள் ஊர்ப் பெண் மாப்பிள்ளையாகவே பாவித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவது நினைவு வருகிறது.
மதிய வேளைகளில் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கோவிலில் பூக்கட்டும் பாக்கியம் கூட கிடைக்கும்.
வாங்க குப்பன் யாஹூ, ரொம்ப சந்தோஷம், உங்க மலரும் நினைவுகளைப் பகிர்ந்ததுக்கு
வாங்க வல்லி, நாங்க போயிருந்தப்போ அறநிலையத் துறை அதிகாரி ஒரு பெண்மணி வந்திருந்தார். அவருக்குக் கிளி பிரசாதம் அளிக்கப் பட்டது. அவர் தயவில் எல்லாம் நன்றாய்ப் பார்த்தோம்.
Post a Comment