எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 26, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சோமாஸ்கந்தர்!

அடுத்து நாம் காணப் போவது சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும். உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் காட்சி அளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி என அழைக்கப் படுகின்றது. இந்தத் திருமேனியைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு எனக் கூறப் படுகின்றது. இறைவன் ஒரு இனிய அன்பான கணவனாய், பாசமிக்க தந்தையாய்க் காட்சி அளிக்கும் இந்த மூர்த்தம் திருவாரூரில் மிகச் சிறப்பு வாய்ந்து விளங்குகின்றது. சச்சிதானந்தம் ஆன இறைவனை சத்= இறைவன், சித்=இறைவி என்றும் இருவரும் சேர்ந்தே ஆனந்தம்=கந்தன் என்றும் விளங்குவதாயும் சொல்லுவார்கள். உண்மையான இறைவனும், நன்மையான இறைவியும் சேர்ந்து படைத்த அழகே வடிவான கந்தன் எனவும் சொல்லலாம்.

நமது பாரதத்தின் திரிவேணி சங்கமத்தில் இணையும் வெண்மை நிறக் கங்கையைப் போல் உடல் முழுதும் அணிந்த வெண்ணிறத் திருநீறோடு இறைவனும், கருநிஆஅ யமுனை போன்ற உமை அம்மையும், சிவந்த நிற சரஸ்வதி போன்ற செக்கச் சிவந்த சிவகுமாரன் ஆன ஸ்கந்தனும் சேர்ந்தே சோமாஸ்கந்த மூர்த்தி ஆனார்கள் என்பது வழக்கு. பொதுவாகக் கர்ப்பகிரகங்களின் வலப்பக்கங்களில் காணப் படும் சோமாஸ்கந்த விக்ரகம் பல்லவர் காலத்தில் பிரபலம் ஆகி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் காலங்களில் கருவறைக்குப் பின்புறம் கருவறைச் சுவரில் இந்த மூர்த்தம் வைக்கப் பட்டு வழிபட்டு வந்ததாயும் தெரிய வருகின்றது.

ஈசன் அமர்ந்த திருக்கோலத்தில் இடக்காலை மடித்துக் கொண்டும், வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டும், புலித் தோலோ அல்லது பட்டாடையோ அணிந்து கொண்டும் இருப்பார். நான்கு திருக்கரங்களில் பின்னால் உள்ள இரு கரங்களிலும் முறையே மானும், மழுவும் இருக்கும். முன்னால் உள்ள இருகரங்களும் முறையே அபய முத்திரையும், வரத முத்திரையும் காட்டிக் கொண்டிருக்கும். அம்பிகை நேர்மாறாக வலக்காலை மடித்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பார். வலக்கரம் தாமரையுடனும், இடக்கரம் மேனியில் அமர்த்தியும் காணப்படும். அம்பிகையின் மடியிலோ அல்லது இருவருக்கும் நடுவே ஆடிக் கொண்டோ குழந்தை கந்தன் ஆனந்தமாய்க் காட்சி தருவான்.

ஆடிய கோலத்தில் இருக்கும் கந்தனின் இடக்கரம் பழத்தையும், வலக்கரம் ஆள்காட்டி விரலைக் காட்டியபடியும் காணப்படும். நம்மைச்சுட்டிக் காட்டுவதாயும் அமைந்திருக்கும் இந்தக் கோலம் காணக் கிடைக்காத அரிய காட்சி. பல அருங்காட்சியகங்களில் காணப் படும் இந்த சோமாஸ்கந்த வடிவம் திருக்கருகாவூர், திருக்கள்ளில் போன்ற இடங்களிலும், சப்த விடங்கத் தலங்களில் முதன்மையான திருவாரூரிலும் காணப்படுகின்றது.திருவாரூரில் தியாகராஜா என்ற பெயரில் வழங்கப்படுபவர் இந்த ஸோமாஸ்கந்தரே ஆவார். இந்த மூர்த்தத்தையே மஹாவிஷ்ணு புத்திரப் பேறு வேண்டி தன் இதயத்தில் இருத்தி வழிபட்டதாய்ச் சொல்வார்கள். இந்த சோமாஸ்கந்தரைத் தான் தியாக ராஜராகப் போற்றி வழிபடுகின்றோம். குமரகுருபரர் தம் திருவாரூர் நான்மணி மாலையில் இவரைப் போற்றிப் பல பாடல்கள் பாடி இருக்கின்றார்.

என்பணிந்த தென்கமலை யீசனார் பூங்கோயில்
முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்பென்னாம்
புண்சுமந்தோ நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
மண்சுமந்தா ரென்றுருகு வர்.

வரந்தந் தருள வரதம்வைத் தாலென் வரதமிடக்
கரந்தந்த தாலிவர் கையதன் றேபலி காதலித்துச்
சிரந்தந்த செங்கைக் கமலேசர் நாமந் தியாகரென்ப
தரந்தந்த வாள்விழி யாடந்த தாங்கொ லறம்வளர்த்தே


மல்லல்வளங் கனிந்தபுகழ்க் கமலேசர் திருவுருவும் வாம பாகத்
தல்லமர்பைங் குழலுமையா டிருவுருவு மிருவருக்கும் அமுத மான
கொல்லயில்வேற் பசுங்குழவி திருவுருவு மருவுருவாம் குணங்கண் மூன்றின்
நல்லுருவா தலினன்றோ விவரகில காரணராய் நவில்கின் றாரே. 32


குமரகுருபரரின் திருவாரூர் நான்மணி மாலையில் இருந்து.

சோமாஸ்கந்தர், இல்லற வாழ்வின் இன்பத்தினையும், நன் மக்கட் பேறு, போன்றவற்றை வலியுறுத்தும் வண்ணம் இறைவனே தன் குடும்ப சமேதராய் பக்தர்களைக் காப்பதற்கு என ஏற்பட்டது. இவரைத் துதித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் எனவும், சோமாஸ்கந்தருடன் இருக்கும் உமையம்மையை, "புத்திர செளபாக்கிய ப்ரதாயினி" என்றும் சொல்லப் படுகின்றது. அடுத்து வருபவர் சிவ வடிவங்களிலேயே அனைவர் மனதையும் கவர்ந்த நடராஜர் ஆவார்.

No comments: