அங்கே எல்லாமே பெரிது பெரிதாக சிற்பங்கள். பெரிய நந்திகேஸ்வரர், பெரிய ஆவுடையார், பெரிய லிங்க பாணம், பெரிய கருவறைக் கோபுரம் சுற்றுப் பிராஹாரங்களிலும் ஈசனின் பல்வேறு வடிவங்களில் பெரிய சிற்பங்கள் அமைத்தான்.
இந்த சாந்திக் கூத்தே தற்கால மலையாள நாட்டிய நாடக வகையான கதகளி ஆட்டத்தின் மூலம் என பரமாசாரியாள் அவர்கள் தெரிவிக்கிறார். இவை நாட்டியம் கலந்த நாடக வகையைச் சார்ந்தது என்றும் சொல்கிறார். நாட்டிய, நாடக வகைகள் சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என இருவகைப் பட்ட்து என்றும், விநோதக் கூத்தில் கொஞ்சம் ஹாஸ்யம், விநோதம், கலந்து பொம்மலாட்டம், கழைக்கூத்து, குடக்கூத்து(கரகாட்டம் போன்ற ஒரு வகை) இவை எல்லாமும் கொஞ்சம் வேடிக்கை, விளையாட்டு கலந்து ஆடப் பட்டதாயும், சாந்திக் கூத்து இவற்றிலிருந்து வித்தியாசப் பட்டதாயும் கூறுகின்றார். சாந்தி கூத்து நாலு வகைகள் என்று தெரிய வருகிறது. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா?
சொக்கம்: சுத்த நிருத்தம் என்று சொல்லப் படும் இதில் பாட்டுக்கு அபிநயமாக இல்லாமல் தில்லானா, ஜதிஸ்வரம் போன்ற அடவுகளைப் பிடித்து மனசை உயர்த்தும் வண்ணம் நளினமாய் உடலை வளைத்துக் கொண்டே அதற்கேற்றவாறு கை, கால்களையும் வளைத்துக் காட்டவேண்டும். இவற்றில் 108 கரணங்கள் உண்டெனத் தெரிய வருகிறது. அந்தக் கரணங்களை ஈசன் ஆடும் கோலத்தில் தஞ்சைப் பெருங்கோயிலின் கர்ப்பகிருஹத்தைப் பிரதக்ஷிணம் செய்யும் போது விமானத்தில் இரண்டாம் தளத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன. கூர்ந்து கவனிக்கவேண்டும், நாட்டிய சாஸ்திரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் 108 கரணங்களும் சொல்லப் பட்டிருக்கிறதாயும் தெரிய வருகிறது.
அடுத்து மெய்க்கூத்து: இதில் நாயகன், நாயகி பாவத்தில் இறைவனை வழிபடுவது பற்றியே சொல்லப் படும். ஜீவாத்மாவும், பரமாத்வாவும் ஐக்கியமாகும் பாவத்தில் பாடல்கள் அமைந்துள்ள தேவார, திருவாசகப் பாடல்களைக் கொண்டு அமைக்கப் படும்.
மூன்றாவது அவிநயம்: கவனிக்கவும் அவிநயம். விநயம் என்றால் என்ன அர்த்தமோ அதற்கு மாற்று என இங்கே அர்த்தம் கொள்ளக் கூடாது. அபிநயமே, அவிநயமாக இங்கே ஓரெழுத்து மாற்றிச் சொல்லப் படுகிறது. நவரசங்களையும் அபிநயம் மூலம் வெளிப்படுத்திக் காட்டுவதும் இதன் கீழே வரும். பல்வேறு விதமான அபிநயங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
கடைசியாகச் சொல்லப் படுவது நாடகம்: ஒரு பெரிய கதையை எடுத்துக்கொண்டு அதை ஆடல், பாடல்கள், அபிநயங்கள் மூலம் நடித்துக் காட்டுவது. இவற்றில் சில உட்பிரிவுகள் உண்டு. சம்ஸ்கிருதத்தில் உள்ள பாடல்களுக்கு அபிநயித்துக்கொண்டு ஆடிப் பாடுவது ஆரியக் கூத்து எனவும், தமிழில் உள்ள பாடல்களுக்கு ஏற்ற கதையைத் தேர்ந்தெடுத்து ஆடுவது தமிழ்க்கூத்து எனவும் சொல்லப் பட்டது. இதிலே சாந்திக் கூத்து எங்கே இருந்து வந்தது? ஈசனும், காளியும் எங்கே வந்தார்கள்? கொஞ்சம் பொறுக்கவும்.