

ஆண்மயில் வடிவில் இறைவன் உறைந்த இடம் மயிலாடுதுறை. இறைவனை அடைய பெண்மயில் உருவில் ஸ்ரீதேவி, சரஸ்வதி துணை புரிய அம்பிகை தவம் செய்த இடம் மயிலாடுதுறை. இறைவியின் தவத்தை மெச்சி அவளை அடைந்த இறைவன், அவளை மகிழ்விக்க ஆடிய ஆட்டமே "கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது என்றும் கூறுகிறார்கள். இந்தக் கோயிலின் இந்தச் சபையை "ஆதி சபை" என அழைக்கிறார்கள். அப்பர் தேவாரத்தின் மயிலாடுதுறை பற்றிய பதிகத்தில் இருந்து இரு பாடல்கள் கீழே காணலாம்.
கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
உள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடு துறையுறை
வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே.
5.39.1
388
சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பான்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே
இது தவிர, ராமநாதபுரம் மாவட்டத்துத் திரு உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர்
திரு உருவம் எங்கும் காணக் கிடைக்காத ஒன்று.

வேண்டுகோளுக்கிணங்கி அறைக்குள் அன்னை மட்டுமே காணுமாறு ஆடியதாய்க் கூறுகின்றனர். "அறைக்குள்" ஆடியது திரு உத்தரகோசமங்கையிலும், "அம்பலத்தில்" சிதம்பரத்திலும் ஆடியதாய்க் கூறப்படுகிறது. மாணிக்க வாசகர் இங்கே பாடியருளிய நீத்தல் விண்ணப்பம் முதலிரு பாடல்கள் கீழே காணலாம்.
கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105
கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106
இவற்றைத் தவிர எல்லாச் சிவன் கோவில்களிலும் நடராஜ மூர்த்தம் இருந்து வந்தாலும், இந்திரனிடம் இருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியினால் பெறப்பட்ட 7 விதமான நாட்டிய பாவங்களைக் காட்டும் "விடங்க மூர்த்தி"களும் உள்ளனர். நாளை பார்ப்போமா?
2 comments:
அருமையான பதிவு.அழகான எழுத்து நடை.தொடருங்கள்
நன்றி சதீஷ்குமார். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment