நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.
1.135.1 1449
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.
அருணகிரிநாதரின் திருப்பராய்த் துறைத் திருப்புகழின் கடைசிச் செய்யுட்களில் இருந்து,
மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம
லாசனன் வந்துல காக்கி வைத்திடு
வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ரறிவாக
மூதறி வுந்திய தீக்ஷை செப்பிய
ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத
மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே.
நாவுக்கரசரின் தேவாரத்தில் இருந்து இந்தப் பழமையான பதியைப் பற்றி அறிய முடிகிறது.
கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.
அடுத்து உத்தமர் கோயிலையும் பிச்சாண்டார் கோயில், பிட்சாண்டார் கோயில் என்று சொல்வது உண்டு.இதுவும் திருச்சிக்கு அருகே உள்ளது. ஆனால் இந்தக் கோயிலில் மும்மூர்த்திகளையும் அவரவர் பத்தினிமாரோடு தரிசனம் செய்யலாம் என்று சொல்கின்றனர். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட கோயில் என்றும், இங்கே உள்ள மஹாலக்ஷ்மியிடம் வாங்கிய பிட்சைக்குப் பின்னரே பிரம்மனின் கபாலம் ஈசன் கையிலிருந்து அகன்றது என்றும் சொல்கின்றனர். வடநாட்டில் வேறு விதமாய்ச் சொல்லுவார்கள். தாருகாவனத்து ரிஷிகள் வேதங்களையும், அது சம்பந்தமான சாஸ்திர, சம்பிரதாயங்களை மட்டுமே கடைப்பிடித்துக் கடவுளையும், அவர் இருப்பையும் அலட்சியம் செய்ததோடு, தங்கள் யாகங்களாலும், தவங்களாலும் செருக்குடனும் இருந்துவந்தனர். ஆகவே அவர்களுக்குப் புத்தி புகட்டவே ஈசன் பிக்ஷாடனர் கோலத்தில் வந்தார். இதுவே நாம் தெரிந்து கொண்டது.

ஆனால் வடநாட்டில் சிலர் பிரம்மனின் தலையைக் கிள்ளியதும், அவர் கபாலமும், பிரம்மஹத்தி தோஷமும் ஈசனைப் பீடிக்கிறது. பிரம்மனும் ஈசன் என்று கூடப் பாராமல் நீ பிக்ஷை எடுத்து உண்டு வாழவேண்டும். எவ்வளவு போட்டாலும் இந்தக் கபாலம் அத்தனை பிக்ஷையையும் சாப்பிட்டு விடும். என்று இந்தக் கபாலம் நிறைகிறதோ அன்றே உங்கள் கையிலிருந்து இது அகன்று போகும்.” என்று சாபம் கொடுத்த்தாயும், அதிலிருந்து பிக்ஷாடனராக பிக்ஷை எடுத்து வந்த ஈசன், காசி மாநகருக்கு வந்து அங்கே அன்னபூரணியாக உணவு சமைத்து அனைவருக்கும் அளித்துத் தவம் செய்து கொண்டிருந்த அன்னையிடம் பிக்ஷை வாங்கியதாகவும், அன்னை ஒரு கரண்டி அன்னம் இட்டதுமே கபாலம் நிறைந்ததாயும் கூறுகின்றனர்.

No comments:
Post a Comment