
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
1.10.1
98
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
அருணாசலேஸ்வரர் கோயில் ஐந்து பிராகாரங்களோடு இருந்தாலும் மாடவீதியும் கிரிவலப் பாதையும் இரண்டு பிரஹாரமாய்க் கணக்கெடுத்துக்கொள்ளப் படுகிறது. கிரிவலப் பாதையில் யாரும் கால்களுக்குச் செருப்புப்போட்டுக்கொண்டு நடப்பதில்லை. கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகப் பழமையான கோயில் என்பது பார்த்தாலே தெரியும். கருவறை பல்லவர் காலத்திலேயே அமைக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. கோபுரங்கள் ஒன்பது உள்ளன.

இதைத் தவிரவும் கோயிலில் அநேக மண்டபங்களும் இருக்கின்றன. அவை தீர்த்தவாரி நடக்கும் தீர்த்தவாரி மண்டபம், ஞானப்பால் மண்டபம், திருவருள் விலாச மண்டபம், மாதப்பிறப்பு மண்டபம், உருத்ராக்ஷ மண்டபம், அமாவாசை மண்டபம், பன்னீர் மண்டபம், காட்சி மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை. திருக்கல்யாண மண்டபத்தின் மர விதானம் செப்பால் ஓடு வேயப்பட்டுக் காட்சி அளிக்கிறது. தூண்கள் அழகிய வேலைப்பாடுகளோடும், ஓவியங்களும் நிறைந்த மண்டபம். பார்க்க ஒரு நாளாவது வேண்டும். :( பிராகாரங்களின் மதில்கள் உயரமாய்க் குறைந்தது முப்பது அடி உயரத்துடன் காட்சி அளிக்கின்றன. அகலமே நிறைய இருக்கும்போல் தெரிகிறது. இந்த மதில்கள் மூலவரின் திருச்சுற்றுப் பாதையில் அமைந்துள்ளன. இவற்றில் மேற்கு மதில் ஆதித்திய சோழனாலும், பின்னர் அவன் மைந்தன் முதலாம் பராந்தக சோழனாலும், கிழக்குச் சுவர் உத்தம சோழனாலும் கட்டப்பட்டவை எனத் தெரிய வருகிறது. கருவறைக்குள் நுழையும் வாசலே உத்தம சோழன் பெயரால் அழைக்கப் படுகிறது. கருவறைக்குள் உத்தமசோழனின் சிற்பமும் இருக்கிறதாய்த் தெரிய வருகிறது. இந்தத் தகவல் முன் கூட்டியே தெரியாது என்பதால் நாங்க தேடிப் பார்க்கலை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிழக்கு வாயிலின் வலப்பக்கம் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் மற்றக் கோயில் மண்டபங்கள் போல் இல்லாமல் சரியாக ஆயிரம் தூண்கள் உள்ளதாயும் தெரிவிக்கின்றனர்.

வல்லாள கோபுரத்தில் வல்லாளனின் சிலை இருப்பதாயும் கூறினார்கள். அண்ணாந்து பார்த்துக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த வல்லாளனுக்காக ஈசனே குழந்தையாக வந்து ஈமக்கடன்களைச் செய்வதாயும் ஐதீகம். அந்த வரலாறு வருமாறு:
குழந்தைச் செல்வம் இல்லாத வல்லாள மகாராஜா, இறைவனை வேண்டினார். ஒரு நாள் அண்ணாமலையாரே சிவனடியார் உருவில் அரண்மனைக்கு வந்தார். தன்னுடன் தினம் ஒரு பெண் தங்க வேண்டும் என்றும், அன்றிரவு தங்கப் பெண்ணே கிடைக்கவில்லை என்றும் கூறி மன்னனைக் கேட்கிறார். கோயிலில் தேவதாசியர்கள் இல்லாமையாலும், மற்றப் பெண்களை அனுப்ப மனமில்லாமையாலும் தன் மனைவியான சல்லாமா தேவியையே அந்தச் சிவனடியாரிடம் அனுப்பி வைக்கிறான் வல்லாள ராஜன். சல்லாமா தேவி உள்ளே சென்றதுமே சிவனடியார் மறைந்து ஒரு பச்சிளம் குழந்தை இருக்கிறது. திகைத்த தேவி தன் கணவனிடம் சொல்ல, அண்ணாமலையார் ரிஷபாரூடராய்க் காட்சி அளிக்கிறார். மன்னனுக்குத் தாமே குழந்தையாக வந்து இறுதிக்கடன்களை நிறைவேற்றுவதாய் வாக்கும் கொடுத்து மறைகிறார்.
இதனால் ஒவ்வொரு வருஷமும் மாசி மாதம் மக நக்ஷத்திரத்தில் அண்ணாமலையார் அருகிலுள்ள, "கொண்டப்பட்டு" என்னும் கிராமத்துக்கு எழுந்தருளி, வல்லாள ராஜாவுக்கு உத்தரகிரியைநடத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் நடராஜப் பெருமானின் செப்பு விக்ரஹம் காணப்படுகிறது. அதை ஒட்டி இருக்கும் அறைகள் ஈசனின் அணிகலன்கள், ஆடைகள், பொக்கிஷ அறை போன்றவை ஆகும். இங்குள்ள கல்லால் ஆன சங்கிலித் தூண் அருகே இருந்து சுரங்கப்பாதை ஒன்று மலையை ஊடுருவிச் செல்வதாய் ஒரு கருத்து உண்டு. கிளி கோபுரத்தின் தெற்கே இருக்கும் விநாயகர் யானையாக வந்து கொடுங்கோல் அரசன் ஒருவனை மிரட்டியதாயும் செவிவழிச் செய்திகள் உண்டு. கிளி கோபுரத்துக்கு அடுத்துக் காணப்படும் மண்டபம், மங்கையர்க்கரசி என்பவரால் கட்டப்பட்டது. இங்கு மலைமீது தீபம் ஏற்றும்போது உற்சவ மூர்த்திகள் எழுந்தருளுவது வழக்கம்.
கிளி கோபுரத்திற்கு எதிரே நந்தி மண்டபம். மண்டபம் வல்லாள ராஜாவால் கட்டப்பட்டிருக்கிறது. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள சின்ன மண்ட்டபத்தில் அண்ணாமலையார் யோகி உருவில் சூக்ஷ்ம வடிவில் உறைவதாகவும், இங்கு அமர்ந்து ஆழ்நிலைத் தியானம் செய்தால் மன அமைதி கிட்டும் என்பதும் ஐதீகம். சிவகங்கைக்குளத்துக்கு அருகே கம்பத்து இளையனார் சந்நிதியில் முருகன் வில்லேந்திய கோலத்தில் காட்சி கொடுக்கிறான். அருணகிரிநாதருக்காக பிரெளட தேவராயன் என்பவனுக்கு முருகன் காட்சி கொடுத்த இடம் இது என்கின்றார்கள். ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பக்கம் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. பகவான் ஸ்ரீ ரமணர் பலகாலம் இங்கே தங்கி தவம் இருந்ததைக் கூறும் இந்தச் சந்நிதி "பரோசா தலையார் காண்" என்ற வெளி நாட்டுப் பெண்மணியால் அவர் தலைமையில் புநர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. 1949-ம் வருஷம் அப்போதை கவர்னர்ஜெனரல் ஸ்ரீராஜாஜி அவர்களால் திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. 108-க்கும் மேல் கல்வெட்டுக்கள் உள்ள இந்தக் கோயிலில் பரத சாஸ்திரத்தின் தாண்டவ லக்ஷணத்தை விளக்கும் நாட்டிய நிலைகள் 108-ஐயும் விளக்கும் சிற்பங்கள் உள்ளன.