எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, March 04, 2011

ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!


சத்குரு ஞாநாநந்தகிரியின் பூர்வீகத்தை ஆராய்ந்ததில் அவர் கர்நாடகத்தை சேர்ந்த மங்களகிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர் எனவும், அவர் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதும் தெரிய வருகிறது. பள்ளிச் சிறுவனாக இருந்த போதில் இருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவர் ஊரை விட்டுக் கிளம்பிக் கால்நடையாகவே பண்டரிபுரம் வந்து சேர்ந்து சந்திரபாகா நதியில் நீராடி விட்டலனைத் தரிசித்துக்கொண்டிருந்திருக்கிறார். ஒரு நாள் தூங்கும்போது முன்பின் தெரியாத அந்தணர் ஒருவர் அவரை எழுப்பி, குருநாதர் தேடுவதாய்ச் சொல்லி மறைய திகைத்த சிறுவனான ஞானாநந்தர் சந்திரபாகா நதிக்குச் சென்று நீராடிவிட்டு விட்டலனையே சரணடைய, அப்போது தான் அவ்வூருக்கு ஜ்யோதிர்மடத்தில் இருந்து வந்திருக்கும் பீடாதிபதிகள் ஆன ஸ்ரீஸ்ரீ சிவரத்னகிரி ஸ்வாமிகள் அவ்வூரில் எழுந்தருளி இருப்பதை நினைவு கூர்ந்தார்.

அவரே தான் தேடும் குரு என உள்ளுணர்வு உறுத்த, உடனே சென்று அவரைச் சந்திக்க, ஞான ஆநந்த கிரி என்ற தீக்ஷை நாமத்தோடு அவருக்குத் துறவு அளித்தார் சிவரத்னகிரி ஸ்வாமிகள். அதன் பின்னரே குரு சேவையுடன் கூடவே புண்ய தல யாத்திரையும், ஜ்யோதிர்மடத்தில் வேதாந்த விசாரங்களும் மேற்கொண்டார் ஞான ஆநந்த கிரிஸ்வாமிகள். பின்னர் குருவின் மறைவுக்குப் பின்னர் இமயமலைப்பகுதியில் யோக தவங்கள் செய்வதிலும் அங்குள்ள சித்தர்கள், மகாபுருஷர்களைத் தரிசித்து வணங்குவதிலும் நாட்களைக் கழித்தவர் அங்கிருந்து தான் கதிர்காம ஸ்வாமிகளோடு ஸ்ரீலங்கா சென்றிருக்கவேண்டும்.

திரும்பி சீர்காழிக்கு வந்த இருவரில் கதிர்காம ஸ்வாமிகள் அங்கேயே தங்க, ஞான ஆநந்தரை ஈர்த்தது சித்தலிங்க பீடம். அங்கே உள்ள வ்யாக்ரபாதேஸ்வரர் என்னும் திருநாமம் பூண்ட ஈசனை இங்கே வணங்க முடியும். வ்யாக்ரபாதர் தவமிருந்தது இந்த சித்தலிங்க பீடத்தில் தான் என்று சொல்கின்றனர். இங்கே இவர் நடத்திய அருளாட்சியும், இவரின் சீடரான ஹரிதாஸ்கிரியால் நாம சங்கீர்த்தன மகிமை பரவியதையும் நன்கறிவோம். இனி தென்னாங்கூர்.

காஞ்சீபுரத்திலிருந்து நேரே முதலில் தென்னாங்கூர் தான் சென்றோம். காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தென்னாங்கூர் இருக்கிறது. ஞானாநந்தரின் சீடரான ஹரிதாஸ்கிரி அவர்கள் பண்டரிபுரத்தில் தமக்களிக்கப் பட்ட சிலைகளைப் பிரதிஷ்டை செய்யத் தேர்ந்தெடுத்த இடம் இது. கோயிலுக்குள் நுழையும்போது பார்க்கும் ராஜகோபுரம் தென்னிந்திய பாணியில் காணப்படுகிறது. கருவறைக்கு மேல் காணப்படும் விமானத்துடன் கூடிய கோபுரம் பூரி ஜெகந்நாதர் கோயிலின் அமைப்பை ஒட்டியது என்கின்றனர். பண்டரிபுரத்தில் கிடைத்த சிலைகளை உற்சவ மூர்த்திகளாக வைத்திருக்கின்றனர். மூலஸ்தானத்தில் குடிகொண்டிருக்கும் பாண்டுரங்கன் பனிரண்டு அடிக்கு உயரமாய்க் காணப்படுகிறார். ரகுமாயி இங்கே தனி சந்நிதி கொள்ளாமல் அருகேயே காட்சி அளிக்கிறாள். பண்டரிபுரத்தில் தனியாக சந்நிதி உண்டு. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு அலங்காரம் என்று செய்கின்றனர். நாங்கள் சென்றது ஞாயிறன்று என்பதால் முதல்நாள் செய்த திருப்பதி வேங்கடாசலபதி அலங்காரம் கலைக்கப் படவில்லை. சற்று நேரத்தில் ராஜாங்க கோலத்தில் தரிசனம் தருவார் என்றனர். அதற்கு ஒரு கதையும் சொல்கின்றனர்.

தென்னாங்கூர் ஷடாரண்யம் என அழைக்கப்பட்ட ஆற்காடு க்ஷேத்திரங்களுள் முக்கியமான ஒன்று எனச் சொல்கின்றனர். அதிலும் பாண்டிய அரசனோடு சம்பந்தம் கொண்ட முக்கிய வரலாறு. ஆம், மதுரையை ஆண்ட மலயத்வஜ பாண்டியன் தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று யாகம் செய்தபோது தேர்ந்தெடுத்த இடம் இந்தத் தென்னாங்கூர் தான். இங்கே தான் யாகம் செய்கையில் யாக குண்டத்திலிருந்து மீனாக்ஷி தோன்றியதாகவும், அவளை அழைத்துக்கொண்டு மன்னன் மதுரை சென்றதாகவும் புராணங்கள் கூறுவதாய்த் தெரிய வருகிறது. சப்தரிஷிகளின் மூலம் மீனாக்ஷி அவதரித்த இந்த இடத்தைக் காஞ்சி மகாமுனிவர் "மீனாக்ஷி தோன்றிய இடம்" என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கிறார்.

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

மிகுந்த நன்றிகள் மாமி, பகிர்விற்கு