எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 19, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! உமா மகேசர்


மன்மதனை அழைத்து ஈசன் மீது மலர்பாணங்களைச் செலுத்தி அவர் அன்னையை மணக்கும்படிச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். ஆனால் மன்மதன் பயந்தான். ஈசனின் கோபம் தன்னை என்ன செய்யுமோ என்று பயந்தான். ஆனால் அனைவரும் வற்புறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் மன்மதன் ஒத்துக்கொண்டான். தென்றலாகிய தேரில் ஏறிக்கொண்டு, கரும்புவில்லையும், மலர்ப்பாணங்கள் ஐந்தையும், தாமரை, அசோகா, மா, மல்லிகை, நீலோற்பலம் ஆகியன. தாழை மடலாகிய வாளையும் எந்திக்கொண்டு கிளம்பினான் மன்மதன். ரதியும் உடன் கிளம்ப அவளையும் அழைத்துக்கொண்டான். கயிலை மலைச் சாரல். ஈசன் கடும் மோனத்தில் இருந்தார். அங்கே காவலுக்கு இருந்த நந்திதேவரைக் கண்ட மன்மதன் அவரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு மேற்கு வாயில் வழியாக உள்ளே சென்றான். அங்கே யோகத்தில் ஆழ்ந்திருந்த ஈசன் மேல் மலர்க்கணையைச் செலுத்த ஈசனின் மோனம் கலைந்தது. கண் விழித்த ஈசன் மன்மதனைக் கண்டதும், தன் நெற்றிக்கண்ணைத் திறந்து விழிக்க, அந்த அக்னியின் வெப்பம் தாங்காமல் மன்மதம் சாம்பலானான்.

இதைக் கண்ட ரதி துடித்தாள். புலம்பினாள், அழுதாள், அரற்றினாள். அவள் நிலை கண்டு இரங்கிய ஈசன் மன்மதனை அவள் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு அநங்கனாக உயிர்ப்பித்தார். பின்னர் தேவாதி தேவர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு அம்மையைத் திருமணம் செய்து கொள்ள இசைந்தார். அங்கே தவத்தில் ஆழ்ந்திருக்கும் அம்மையை வயோதிக வடிவில் ஈசனே சோதனை செய்து பார்த்துத் தெளிந்து அன்னையை ஏற்றுக்கொள்வேன் என உறுதியும் கூறினார். பின்னர் திருமண ஏற்பாடுகள் செய்யப் பட்டன. திருமணத்திற்குக் குவிந்த கூட்டத்தினால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்ததும், அதைச் சமன் செய்ய அகத்தியர் தெற்கே வந்ததும் தெரிந்த கதை. அப்படித் திருமணம் ஆன பின்னர் ஐயனும், அம்பிகையும் ரிஷபத்தில் அமர்ந்த வண்ணம் திருக்கயிலையில் உமாமகேசராக அருள் பாலித்தனர்.அமைதியாக மோனத் தவம் செய்த சிவம் அமைதிநிலை உடையது. நிலையானது. அது இயங்க வேண்டுமெனில் சக்தி, ஆற்றல் தேவை. சலனம் என்று கூறினாலும் இங்கே சரியாக இருக்கும். தற்காலங்களில் சலனம் என்பது மனச் சஞ்சலத்தைக் குறிக்கும் சொல்லாக மாறி உள்ளது. ஆனால் இங்கே சலனம் என்பது இயக்கத்தையே சுறுசுறுப்பான ஆற்றல் வாய்ந்த சக்தியின் இயக்கத்தையே குறிக்கும். நிலையான சிவத்தோடு ஐக்கியம் ஆகும் ஆற்றல் வாய்ந்த சக்தியினாலேயே இவ்வுலகம் இயங்குகிறது. உலகப்பொருட்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்தும் காண்கின்றோம். இந்த உமாமகேச வடிவங்கள் இந்தியாவைத் தவிர வெளிநாடுகளான நேபாளம், திபெத் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் காணப்படுவதாய் அறிகிறோம். இதைத் தவிர அகத்தியரைத் தென்னாட்டைச் சமன் செய்ய அனுப்பியதால் அவருக்குத் தமிழ்நாட்டில் பல இடங்களில் உமாசகிதராக ஈசன் காட்சி அளித்ததாகத் தெரிகிறது. வேதாரண்யம், திருவேற்காடு, திருநல்லூர் போன்ற தஞ்சை மாவட்டக் கோயில்களிலும் உமாசகிதராக ஈசன் அருள் பாலிக்கிறார்.

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

thanks mami

ராம்ஜி_யாஹூ said...

thanks mami

Geetha Sambasivam said...

நன்றி ராம்ஜி யாஹூ!