எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, March 07, 2019

மன்னரின் கலக்கம்! குலசேகரன் வருகை!

திருவண்ணாமலைக்கோட்டையும் இப்படித் தான் பற்பல முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்புச் செய்யப் பட்டிருந்தது. எனினும் மன்னர் கொஞ்சம் ஏமாந்து தான் விட்டார். தான் படை எடுத்துச் செல்ல வேண்டும் என ஏற்பாடுகள் செய்து வருகையில் இப்படித் திடீரென சுல்தானியர்கள் வந்து முற்றுகை இட்டது குறித்து மன்னருக்குத் தாங்கொணா வருத்தம். எப்படி இந்த முற்றுகையை முறியடிப்பது என்பதை யோசித்ததோடு மட்டுமில்லாமல் ஒற்றர் படை எங்கே ஏமாந்தது என அறியவும் துடித்தார். இவ்வளவு விரைவில் வந்து முற்றுகை இட்டுவிட்டார்களே என மனம் குமுறினார்.அதோடு இல்லாமல் அப்போது தான் அறுவடை நடந்து கொண்டிருந்தபடியால் கோட்டையின் தானியக் களஞ்சியங்களுக்கு வர வேண்டிய தானியங்கள் இன்னமும் முழுமையாக வந்து சேரவில்லை. கோட்டையில் போதிய தானியங்கள் கையிருப்பு இல்லை.  அக்கம்பக்கம் கிராமங்களில் இருந்து தானியங்களை வாங்கிச் சேமிக்கக் கூட அவகாசம் தராமல் எதிரி வந்து விட்டான். இது ஒரு மாபெரும் தவறு! குறை! ஆனால் எப்படியேனும் சமாளிக்க வேண்டும். மன்னர் தவித்துக் கொண்டிருந்தார்.

இங்கே கோட்டைக்கு வெளியே கோட்டையைச் சூழ்ந்து கொண்ட சுல்தானியப் படை வீரர்களால் அதன் மொத்த நீளத்துக்கும் சுற்றி வளைக்க முடியவில்லை. கோட்டைச் சுற்றுச் சுவரின்  நீளம் அபரிமிதமாக இருந்தது. ஆகவே அவர்களால் நான்கு வாயில்களை மட்டுமே சுற்றி வளைக்க முடிந்தது. பிரதான வாயில்களின் முன்புறமும் அதைத் தாண்டி நகரைச் சுற்றி வளைக்கும் முக்கிய இடங்களில் காவல் போட்டார்கள். கோட்டைச் சுவருக்குள் கோட்டையிலிருந்து வெளியேயோ அல்லது வெளியே இருந்து உள்ளே செல்லவோ வழியோ, சுரங்கப்பாதையோ இருக்கிறதா என ஆராய்ந்தார்கள். ஐந்தைந்து வீரர்களாகப் பிரித்து ஆங்காங்கே ரோந்து சுற்ற வைத்தார்கள். இதன் மூலம் மக்கள் கூடுவதையும் கலந்து ஆலோசிப்பதையும் அவர்களால் தடுக்க முடிந்தது.  மேலும் வீரர்கள் கோட்டையைச் சுற்றிச் சுற்றி வந்ததில் கோட்டைக்கு உள்ளே இருந்தோ, வெளியே இருந்தோ ஆட்கள் வர முடியாமலும் தடுத்து விட்டார்கள்.

முற்றுகை ஆரம்பித்து மூன்றாம் நாள் தான்  குலசேகரன் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தான்.  நகரத்தை நெருங்க நெருங்க ஏதோ மாறுதல்களைக்  கண்ட குலசேகரன் அக்கம்பக்கம் கிராமங்கள், சுற்று வட்டார ஊர்களில் எல்லாம் இருந்த மக்கள் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். கிராமங்களின் வெறுமை தான் தன்னைத் தாக்கி இருக்கிறது என்பதையும் கண்டான்.  மனதில் கலக்கத்துடன் சூனியமாக இருக்கும் கிராமங்களைத் தாண்டிக் கொண்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தான் குலசேகரன். மக்கள் தாங்கள் செல்கையில் தாங்கள் வளர்த்த கால்நடைச் செல்வங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. அவற்றையும் கூடவே அழைத்துச் சென்று விட்டார்கள். மிகுந்த எச்சரிக்கையுடன் வந்த குலசேகரன் அங்கே காணப்பட்ட ஒரு பாறைக்குன்றின் மேல் ஏறிப் பார்த்தான். தூரத்தில் கோட்டை வாசலில் காணப்பட்ட வீரர்கள் நடமாட்டத்தைக் கண்டு அவர்கள் சுல்தானியப் படை வீரர்கள் தான் என்றும் முற்றுகை ஆரம்பித்து விட்டது என்றும் புரிந்து கொண்டான்.  குலசேகரன் மனதை வெட்கமும் வருத்தமும் ஆக்கிரமித்தது. இது தன்னால் நேர்ந்தது என்பதை அவன் உடனடியாகப் புரிந்து கொண்டான். எப்பேர்ப்பட்ட மாபெரும் தவறைத் தான் செய்து விட்டோம் என உணர்ந்து அவன் உடலும் உள்ளமும் துடித்தது.

படைகள் வரும் செய்தியைத் தான் மட்டும் ஒழுங்காக வந்து இருந்தால் ஒரு வாரம் முன்னரே மன்னரிடம் தெரிவித்திருக்கலாம். மன்னரும் முற்றுகையை எதிர்கொள்ளவோ அல்லது எதிரியை எதிர்கொள்ளவோ ஆயத்தமாக இருந்திருப்பார். அப்படிச் செய்யாமல் தன்னுடைய அல்ப ஆசைக்காக ஹேமலேகாவைத் தேடிக் கொண்டு சென்றதில் ஒரு வாரம் மட்டும் போகவில்லை. மகத்தான தாமதமும் ஏற்பட்டு இப்போது சுல்தானியர்களின் வெற்றிக்கு அது அடிகோலிட்டிருக்கிறது. அநியாயம் நிகழ்ந்து விட்டது! அதுவும் தன்னால்! சிங்கப்பிரானுக்கு மட்டுமல்ல, ஹொய்சள மன்னனுக்கு மட்டுமல்ல, அரங்க நகருக்கு மட்டுமல்ல, அரங்கனுமே நான் துரோகம் செய்து விட்டேனே! மனம் குமைந்து வாய் விட்டு அலறக் கூட முடியாமல் குலசேகரன் தவித்தான். செய்வதறியாமல் சிலை போல் அந்தப் பாறைக் குன்றிலேயே அமர்ந்தான்.  பகல் முழுவதும் ஆட்கள் நடமாட்டம் அங்கும் இங்குமாகத் தெரிந்ததால் அவனால் அங்கிருந்து உடனே வெளியேற முடியவில்லை. ஆகையால் அந்தக் குன்றிலேயே மறைந்து கொண்டான்.

இரவு வந்ததும் கீழே இறங்கி இனி என்ன செய்வது என யோசித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். ஆராய்ந்தான். அங்கே இரவு போஜனத்திற்காக சுல்தானிய வீரர்கள் அடுப்புக்களை மூட்டிச் சமைக்கத் தொடங்கி இருந்தார்கள். சிறு சிறு அடுப்புக்களை மூட்டி இருந்ததால் அவற்றின் வெளிச்சம் பரவலாகத் தெரியாமல் கார்த்திகைக்கு ஏற்றும் தீப ஒளி போல் தெரிந்தது. குலசேகரன் எப்படி கோட்டைக்கு உள்ளே செல்வது என்னும் யோசனையில் ஆழ்ந்தான். கோட்டையின் பிரதான வாயிலில் எதிரிகள் காவல், அதை விட்டால் அகழி, அங்கிருந்து உயரமான அரண். அதன் மேல் ஏறினால் எதிரிகளுக்கும் தெரியும். உள்ளே கோட்டை வீரர்களுக்கும் தெரியும். அவசரத்தில் கோட்டை வீரர்கள் தன் மேல் அம்பு எய்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. பேசாமல் திரும்புவது தான் நல்லதோ? ஆனால் குலசேகரனின் உள் மனம் அதற்கு ஒப்பவில்லை.  தன்னால் விளைந்த இந்தத் தவறை எப்படியேனும் தானே முயன்று சரி செய்ய வேண்டும் என்னும் உறுதி அவனுள் எழுந்தது.

5 comments:

நெல்லைத்தமிழன் said...

கேள்வி கேட்டால் பதில் போடாம விட்டிருக்கீங்களே கீசா மேடம்

Geetha Sambasivam said...

Thank You Nellai.

நெல்லைத்தமிழன் said...

நீங்க இதை வேகமாக எழுதணும். விரைவில் முடிக்கணும். மின்னூலா வெளியிடணும். அதற்கு ஏற்ற படங்களை முடிந்த அளவு இணையத்தில் தேடிக் கண்டுபிடித்துத் தருகிறேன். இது முக்கியமான வரலாறு.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

களத்தில் இருப்பதுபோலவே உள்ளது. தொடர்ந்து பயணிக்கிறேன்.

Anuprem said...

அவர் என்ன செய்தார் என அறிய காத்திருக்கிறேன்