எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, June 17, 2019

வல்லபன் கிளம்பினான்!

வாசந்திகா மகனைப் பார்த்துக் கண்ணீர் பெருக்கினாள். அவனிடம், "மகனே! எந்தத் தாயும் கேட்கக் கூடாத ஒன்றை உன்னிடம் கேட்கப் போகிறேன். ஆனால் அது இந்த நாட்டின் உன்னதமானதொரு லட்சியத்தை நிறைவேற்றத் தான் கேட்கப் போகிறேன். இவ்வலவு வருடங்களாக என்னுடைய கண்காணிப்பில் வளர்ந்த நீ இப்போது தன்னந்தனியாக நாட்டுக்குள் சென்று பல்வேறு விதமான அனுபவங்களையும் பெறப் போகிறாய்! அனைத்தும் புதுமையாக இருக்கும் உனக்கு! அந்த அனுபவங்களில் சில உனக்கு சோதனைகளைத் தரலாம். சங்கடங்கள் ஏற்படலாம். நீ என்னென்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் நான் சொல்லி அனுப்பினாலும் அதையும் மீறிச் சில நிகழ்வுகள் ஏற்படலாம். நீ அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்."

"மகனே! உன் தந்தை மேற்கொண்டிருந்த மாபெரும் லட்சியம் குறித்து உன்னிடம் பலமுறை பேசி விட்டேன். அதை நிறைவேற்றுவது ஒன்றே உன் முதல் கடமை! அதை நினைவில் வைத்துக்கொள்! அதற்கு இடையூறாக ஏதேனும் நிகழ்ந்தால் நீ அதில் சம்பந்தப்படக் கூடாது! மகனே! தெளிவாகவே சொல்கிறேன். நீ செல்லும் வழியில் பல்வேறு இளம்பெண்களைப் பார்க்கலாம். அவர்களின் உன் மனதைக் கவரும்படியான பெண் இருக்கலாம். அவளைத் திருமணம் செய்து கொண்டால் என்ன என்னும் எண்ணம் உன்னிடம் உதிக்கலாம். மகனே! உன் தந்தை கொண்ட லட்சியம் நிறைவேறும் வரையிலும் நீ அத்தகையதொரு எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதே! பெண்ணாசை உன்னைப் பெரும் குழியில் தள்ளிவிடும். உன் லட்சியத்திலிருந்து நீ பிறழ்ந்து நடக்க வழி செய்து விடும். உன் தந்தையோடு நானும் கொண்ட இந்தக் கனவு! அரங்கனை மீண்டும் திருவரங்கம் கொண்டு சேர்க்கும் மாபெரும் லட்சியம்! இது நிறைவேறும்வரை நீ வேறு ஏதும் ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்காமல் உன் மனதை உறுதியாகக் கல்லைப் போல் திடமாக வைத்துக்கொள்! இந்த உறுதிமொழியை நீ எனக்குக் கொடு!" என்று சொல்லிய வண்ணம் தன் வலக்கையை வல்லபனுக்கு எதிரே நீட்டினாள் வாசந்திகா.

வல்லபன் நிமிர்ந்து தாயைப் பார்த்தான். அவன் கண்களில் வீரமும் அதனால் விளைந்த பெருமிதமும் தலை தூக்கி நின்றன. தன் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு," இவ்வளவு தானா அம்மா! இத்தகையதொரு காரியத்தைச் செய்ய நான் மறுப்பேனா? உங்கள் கனவு, லட்சியம் நிறைவேறும்வரை நான் திருமணம் பற்றி நினைக்கக் கூட மாட்டேன்! இது சத்தியம்!" என்று கூறினான். பின்னர் கீழே விழுந்து அவளை நமஸ்கரித்து எழுந்தான். மகனைக் கட்டி அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள் வாசந்திகா. பின்னர் வெற்றி உண்டாகட்டும் என்று அவனை வாழ்த்தினாள். அப்போது அங்கு வாசலில் வந்து நின்றான் கையில் தாழங்குடையுடன் ஓர் வாலிபன். எப்போதும்  முறுவல் பூத்த முகத்தோடு காணப்பட்ட அவன் வல்லபனின் பிராயத்துக்கு ஒத்தவனாக இருந்தான். அவனைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதி அடைந்த வாசந்திகா, அவனிடம், "காலதத்தா! எல்லா விபரங்களையும் வல்லபனிடமும் சொல்லி இருக்கிறேன். இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் வெகு ஜாக்கிரதையாகச் செல்லுங்கள்! உங்களுக்குக் கொடுத்த வேலையை நல்லபடியாக முடித்துக் கொண்டு திரும்ப வேண்டும்." என்றாள்.

காலதத்தன் அவள் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டதற்கு அறிகுறியாக அவளைப் பார்த்து அதே முறுவலைச் சிந்தினான். பின்னர் வாயிலில் நன் நிமித்தங்கள் தென்படுகிறதா எனப் பார்த்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். வாசந்திகாவின் கண்களில் இருபது வருடங்கள் முன்னர் குலசேகரன் அரங்கனைக் காப்பாற்ற வேண்டிக் கிளம்பிச் சென்ற காட்சி கண் முன்னே விரிய இப்போது தன் மகனாவது அரங்கனைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமே என்னும் கவலையில் மூழ்கிய வண்ணம் அந்த வீட்டின் வாசற்படியில் இருந்த தூண்களில் ஒன்றில் சாய்ந்த வண்ணம் தூணோடு தூணாகக் கண்ணீர் பெருக்கிய வண்ணம் சிலையாகச் சமைந்தாள்.

இங்கே இளைஞர்கள் இருவரும் பேச்சும் சிரிப்புமாகப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஊரைக் கடந்து ஊரின் கோயில் விமானத்தைத் தரிசித்துக் கொண்டு மரங்களுக்கு இடையே அமைந்திருந்த பாட்டையில் நடக்கத்துவங்கினார்கள். கிழக்கே செல்லும் ராஜபாட்டை அது. அந்தச் சமயத்தில் அந்த ராஜபாட்டையில் ஜன நடமாட்டமோ, வாகனங்களோ செல்லவில்லை. ஓரளவுக்கு அமைதியாகவே இருந்தது. இதைக் கண்டு இருவருக்கும் கொஞ்சம் ஆச்சரியம் ஏற்பட்டது.  எப்போதும் ஜனநடமாட்டம் அதிகமாகக் காணப்படும் அந்தச் சாலையில் இப்போது நடமாட்டமே இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது இருவருக்கும் மனதை உறுத்தியது. காரணம் என்னவாக இருக்கும் என்று பேசிக் கொண்டார்கள். 

No comments: