எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, June 25, 2019

வல்லபனின் வருத்தம்!

"அதெல்லாம் சரி காலதத்தா! பாறை மேல் நாம் ஏறிக்கொண்டதால் என்ன பலன்?" என்று வல்லபன் கேட்டான். வருகிறவன் நம்மைக் கண்காணிக்கும் எதிரியாக வருகிறானா? அல்லது சிநேகித பாவத்தில் வருகிறானா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதனால் தான் ஏறிக்கொள்ளலாம் என்றேன். திடீரென அவன் நம்மேல் வாளை வீசி விட்டால்? இருவரையும் ஒரே வீச்சில் மேல் உலகுக்கு அனுப்பி விட்டால்? இந்தப் பாறையைப் பார்த்தாய் அல்லவா? நாம் இருவரும் ஒடுங்கிக் கொண்டு அல்லவோ இருந்தோம்? மூன்றாம் நபர் இதன் மேல் ஏறி வந்து நம்மைத் தக்க முடியாது. அவர்கள் ஏறுவதற்குள் நாம் எச்சரிக்கை அடைந்து விடுவோம் அல்லவா!" என்றான் காலதத்தன். "அவன் ஏன் நம்மைக் கொல்ல வேண்டும்?" என்று கேட்டான் வல்லபன். "வல்லபா! நீ அந்தக் கூண்டு வண்டியைப் பார்த்தாய் அல்லவா? அதன் உள்ளே இருந்த இளம்பெண்ணையும் பார்த்தாயா?" என்று கேட்டான் தத்தன். "பார்த்தேன், அதற்கு என்ன?" என்றான் வல்லபன். காலதத்தன் அதற்குக் கொஞ்சம் குரலைத் தாழ்த்திய வண்ணம் மெதுவாக, "அந்தப் பெண் அரசகுலத்துப் பெண். அநேகமாக ஓர் இளவரசியாக இருக்க வேண்டும்." என்றான்.

"எப்படிச் சொல்கிறாய்?" என்று காலதத்தனைப் பார்த்து வல்லபன் கேட்க, காலதத்தன், "அவள் முகத்தைப் பார்த்தாயா? வட்டவடிவான சந்திரனை ஒத்து இருந்தது. செவ்வரி ஓடிய நீண்ட கண்கள். புருவங்கள் ஒன்றோடு ஒன்று சேராமல் வில்லைப் போல் வளைந்து ஓர் கீற்றாகக் காணப்பட்டது. உதடுகள் பவளம் போல் சிவந்திருந்தன. நெற்றியைப் பார்த்தாயா? மூன்று விரல் அளவுக்கே நெற்றி இருக்கும்போல! கரிய நீண்ட கூந்தல். பருத்த புஜங்களோடு சிறுத்த இடை! அவற்றில் அநேஎகமாக மடிப்புக்கள் இருக்க வேண்டும். இந்த சாமுத்ரிகா லக்ஷணப்படி அவள் அரச குலத்துப் பெண்ணாகவே இருக்க வேண்டும். " என்று முடித்தான் கால தத்தன்.

"நீ அனுமானிப்பது தானே காலதத்தா!" என்று வல்லபன் கேட்க, காலதத்தன், "இல்லை, வல்லபா! இது அரசகுலப் பெண்டிருக்கான லக்ஷணங்கள். இந்தப் பெண்ணைக் கைது செய்து பிடித்துக் கொண்டு போவது நமக்குத் தெரிந்து விட்டது. நமக்குத் தெரிந்து விட்டதே என அந்த வீரர் தலைவனின் மனதில் குடைச்சல் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். இதனால் ஏதேனும் விபரீதம் நிகழலாம், அல்லது நாம் சும்மா இருக்க மாட்டோம் என்றெல்லாம் அவர்கள் எண்ணி இருக்கலாம். அதனால் நம்மைக் கொல்வதற்கெனக் கூட இங்கே அந்த வீரர் தலைவன் வந்திருக்கலாம். உண்மையில் அந்தப் பெண் யார், ஏன் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் என்பதெல்லாம் நமக்கு ஏதும் தெரியாது! ஆனால் அதை அவர்கள் அறிய மாட்டார்கள் அல்லவா? அதான் முன் ஜாக்கிரதையாக நம்மை வந்து உளவு பார்த்துச் செல்கின்றனர்." என்றான் காலதத்தன்.

வல்லபன் யோசனையோடு தத்தனிடம் அந்தப் பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவளாக இருப்பாள் எனவும் ஏன் அவளைக் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்கின்றனர் என்றும் யூகம் செய்ய முடிகிறதா எனக் கேட்டான். தத்தனோ தென்னாடு முழுவதுமே சரியான தலைவன் இல்லாமல் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறதே! நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன, தென்னாடு தலைவனின்றித் தவிக்கிறது.  இதில் யார் இந்தப் பெண் என்பதையும் அவளை ஏன் கடத்திக் கொண்டு போகிறார்கள் என்பதையும் நாம் என்ன கண்டோம்! அல்லது அவளைச் சிறைப்படுத்திக் கொண்டு போனாலும் நமக்கு என்ன புரியும்? எப்படியோ போகட்டும் வல்லபா! நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடரலாம்!" என்று சொல்லிக் கொண்டே தத்தன் பாறையிலிருந்து கீழே குதிக்க முயன்று அது முடியாமல் மௌனமாக இறங்கத் தொடங்கினான். அவனைப் பின் தொடர்ந்து இறங்கிய வல்லபன் கீழே இறங்கியதும் அப்படியே யோசித்த வண்ணம் நின்றான்.

காலதத்தன் அவனை மேலே நடக்கச் சொல்லி வற்புறுத்தினான். இருள் முழுவதும் கவிந்து விட்டது.  காற்றோ குறையவே இல்லை. விண்ணில் மேகக்கூட்டங்கள் மாபெரும் மலைகள் போல் காட்சி அளித்த வண்ணம் வேகமாகப் போய்க் கொண்டிருந்தன. அவற்றின் கருமையால் ஏற்கெனவே கவிந்து கொண்டிருக்கும் இருள் இன்னமும் கருமையைப் பூசிக் கொண்டது.  இந்த மழைக்காலத்தில் மையிருட்டில் வழி கண்டுபிடித்துப் போகவேண்டுமே என்னும் கவலை தத்தனுக்கு ஏற்பட்டது. வல்லபனை துரிதப்படுத்தினான். ஆனால் வல்லபனோ, தற்சமயம் தென்னாடு தலைவனின்றித் தவிப்பதாக தத்தன் கூறிய வார்த்தைகளை மனதில் போட்டு அவற்றையே நினைத்துக் கொண்டிருந்தான். அதை தத்தனிடமும் கூறினான். நாற்பது வருடங்கள் என்பது எத்தனை நீண்ட காலம்! ஒரு பரம்பரையே முற்றிலும் அழிந்து பட்டிருக்கிறது. இப்போது முற்றிலும் புதிய பரம்பரை! இதற்கு முந்தைய பரம்பரை குறித்த எந்தத் தகவல்களும் சரியாகத் தெரியாது. இத்தகைய புதிய பரம்பரையிலே நாம் தோன்றி இருக்கிறோமே! நம் காலத்திலும் அமைதி என்பதை நாம் இதுவரை பார்க்கவே இல்லையே என்றெல்லாம் வல்லபன் கேட்டான்.

ஒரு காலத்தில் இந்தத் தென்னாடு முழுவதும் சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்டதாம் நீதி நேர்மை, அமைதி போன்றவை இருந்ததாம். அரசர்கள் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனராம். கடைசியாகப் பாண்டியர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பெரிய சாம்ராஜ்யத்தையே ஆண்டனராம். பின்னர் அவர்களுக்குள் வந்த வாரிசுச் சண்டையில் சாம்ராஜ்யமே அழிந்து விட்டதாமே! என்ன கொடுமை இது! இருந்த வரைக்கும் அவர்கள் எல்லா சமயங்களையும் ஆதரித்துப் போற்றிப் பாதுகாத்து மக்களையும் நல்வழியில் ஆண்டு வந்தனராம். பற்பல கோயில்களையும் எழுப்பினார்களாம். இவைகளைப் பற்றி எல்லாம் செவிவழியாக நாம் கேள்விப் படுகிறோம். ஆனால் இப்போதே அப்படியான ஓர் அரசனைக் கூட நம்மால் பார்க்க முடியவில்லையே! கோயில்களில் ஆறு கால வழிபாடுகள், திருவிழாக்கள் நடக்குமாம். இப்போதோ! பெரும்பாலான கோயில்கள் மூடியே கிடக்கின்றனவே. திருவிழா என்றால் என்ன? நம்மால் பார்க்கவே முடிவதில்லயே!

No comments: