எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, June 20, 2019

வண்டிக்குள் யார்?

மக்கள் பயத்தின் காரணமாகப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்திருப்பார்கள் எனப் பேசிக் கொண்டனர் இருவரும். ஆனாலும் வயதின் காரணமாகவும் புதிய இடங்களைப் பார்க்கும் ஆவலினாலும் இருவரும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் பயணம் மேற்கொண்டனர். சிறிது தூரம் சென்றதும் தாகம் எடுக்கவே இருவரும் அங்கே காணப்பட்ட ஓர் ஓடை அருகே அமர்ந்து கொண்டு நிதானமாகத் தாகம் தணித்துக் கொண்டனர். வல்லபன் அப்போது நண்பனிடம் தன் தாய் ஊரை விட்டு ஒரு காத தூரம் சென்றதும் பார்க்கும்படி சொல்லி ஓர் ஓலைச்சுருளைக் கொடுத்திருப்பதாய்க் கூறினான். அந்த ஓலைச் சுருளை நண்பனிடம் காட்டவும் செய்தான். ஒரு காதத்துக்கும் மேல் தாங்கள் வந்து விட்டதால் ஓலைச்சுருளைப் பிரித்துப் படிக்கலாம் என இருவரும் முடிவு செய்தனர். அதன்மேல் ஓலைச்சுருளைப் பிரித்தனர். அதில் மஞ்சள் தடவி இருந்தது. அதில் கீழ்க்கண்டவாறு எழுதி இருந்தது.

"வல்லபனுக்கு ஆசிகள். மங்களம் உண்டாகட்டும். உன் தயார் உன்னை ஆசீர்வதித்துச் சொல்லுவது என்னவெனில் "வல்லபா! மொழியில் பிறழாதே! வழியில் பிறழாதே! விழியில் பிறழாதே!" என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு கணம் இருவருக்கும் எதுவும் புரியவில்லை.

பின்னர் வல்லபனுக்குச் சிரிப்பு வர, அவன் நண்பன் காலதத்தன் அதை வாங்கிக் கொண்டு மீண்டும் படித்தான். வல்லபனைப் பார்த்து, "வல்லபா, இதில் சிரிக்க ஏதும் இல்லை. அறிவில் சிறந்த உன் தாய் ஆழப் பொதிந்திருக்கும் கருத்துக்களைக் கொண்டு இதைச் சுருக்கமாக எழுதி இருக்கிறார். இதன் மூலம் உன் வருங்காலத்துக்குப் பல உதவிகள் ஏற்படலாம். நீ எதற்கும் கவனமாக இருக்க வேண்டும். இந்த அறிவுரைகளை நீ கவனத்துடன் பின்பற்ற வேண்டும்."


என்றான்.

அப்போது வல்லபன், தானும் தன் தாயை மதிப்பதாகவும், அவள் அறிவுரைகளை ஏற்பதாகவும் கூறினான். மேலும் அவன் கூறியதாவது அவன் தாய் இன்னமும் அவனைச் சின்னஞ்சிறு சிறுவனாகவே எண்ணி வருகிறார் என்று கூறினான். அவர் ஏற்கெனவே தக்க பாதுகாப்பு இல்லாமல் என்னை வெளியே அனுப்ப யோசனை செய்வார். இப்போது மட்டும் நீ இல்லை எனில் நான் இந்தப் பயணமே மேற்கொண்டிருக்க முடியாது!" என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தான். இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இரண்டாம் நாளும் பயணத்திலேயே சென்றது. அன்றைய தினம் இருவரும் பல காத தூரங்களை வெகு வேகமாகக் கடந்திருந்தனர். அதனால் காலதத்தனுக்குச் சோர்வு ஏற்பட்டிருந்ததோடு காலில் நோவும் கண்டிருந்தது. ஆகவே அவன் சற்று இளைப்பாறிவிட்டுச் செல்வோம் என வல்லபனிடம் சொன்னான். அதன் மேல் இருவரும் சாலையோரத்தில் இருந்த பெரியதொரு மர நிழலில் அமர்ந்து கொண்டு தங்கள் மூட்டைகளைப் பிரித்து அதில் இருந்து சத்துமாவு போன்றதொரு உணவை எடுத்து உண்டனர். பின்னர் இரவு எங்கே தஙுவது என்பது குறித்துப் பேசிக் கொண்டு அருகில் உள்ள  ஓடுமானூர் என்னும் ஊரில் உள்ள சத்திரத்தில் தங்கிச் செல்லலாம் என முடிவு செய்து கொண்டனர். வல்லபன் ஆச்சரியத்தோடு இதை எல்லாம் காலதத்தன் நினைவு வைத்திருப்பதைப் பற்றிக் கேட்க, கால தத்தன் தான் தன் தந்தையோடு இவ்வழியில் பலமுறை பயணம் செய்திருப்பதாய்க் கூறினான். காஞ்சிக்கும் திருப்பதி-திருமலைக்கும் கூடச் சென்று வந்திருப்பதாய்ச் சொன்னான்.

அப்போது அடித்த காற்றில் பறந்த தாழங்குடையைப் பிடிக்க வேண்டி எழுந்த காலதத்தன் கொஞ்ச தூரம் ஓடிப் போய்த் தான் அதைப் பிடிக்க வேண்டி இருந்தது. அது பாட்டுக்குக் காற்றோடு அதன் திசையில் போக காலதத்தன் ஓடோடிப் போய்ப் பிடித்தான். அப்போது சாலையில் ஏதேதோ அரவங்கள் கேட்க தன்னெதிரே விரிந்த சாலையைத் தலையைத் தூக்கிப் பார்த்தான் காலதத்தன். உடனே அவன் கண்கள் விரிந்தன. முகத்தில் கலவரம் பதிவாயிற்று. வல்லபன் பக்கம் ஓடி வந்து சேவகர்கள் சிலர் வருவதாகவும் யாருடைய சேவகர்கள் என்றே சொல்லமுடியவில்லை எனவும் கூறிக்கொண்டு சாலையை விட்டு அகன்று ஓரம் நோக்கி ஓடினான். வல்லபனையும் வரச் சொன்னான். அவன் காட்டிய திசையில் பார்த்த வல்லபன், யாராக இருக்கும் என வாய்விட்டுக் கேட்டுக் கொண்டே யோசித்தான்.

காலதத்தன் அதற்கு," நாட்டில் இப்போது நிரந்தரமாக எந்த அரசனும் ஆட்சி செய்ய முடியாமல் இருக்கையில் யாருடைய சேவகர்கள் என நாம் எப்படிக் கூற முடியும். இவர்கள் நம் நண்பர்களா, எதிரிகளா என்பதை எல்லாமும் நாம் அறிய மாட்டோம். ஆகவே நாம் இவர்களை நேருக்கு நேர் சந்திக்காமல் தவிர்ப்பதே நல்லது! சீக்கிரம் வா! எங்கானும் ஒளிந்து கொள்ளலாம்!" என வல்லபனை அழைத்தான். உடனே கீழே கிடந்த தங்கள் மூட்டைகளையும் எடுத்துக் கொண்டே ஒளிந்து கொள்ளலாம் என அவற்றை எடுக்கப் போன வல்லபன் மீண்டும் சாலையை நோக்கினான். அவன் கண்களுக்குப் பின்னால் ஓர் கூண்டு வண்டியும் வருவது தெரிந்தது. உடனே காலதத்தனிடம் சேவர்கள் புடைசூழக் கூண்டு வண்டி ஒன்று வருவதைச் சொன்னான். காலதத்தனுக்கும் இப்போது வல்லபனின் ஆவல் தொற்றிக்கொண்டது போலும்! ஒளிய வேண்டும் என்னும் பரபரப்புக் குறைந்து விட்டது அவனிடம். யாரெனப் பார்க்கலாம் என நினைத்தாற்போல் இரு இளைஞர்களும் அங்கேயே நின்று விட்டனர்.

வண்டி அவர்களை நோக்கி வந்தது. முன்னால் சேவகர்களும் பாதுகாப்புக் கொடுத்த வண்ணம் வந்தார்கள். வண்டியின் "டிங்க்! டிங்க்" என்னும் மணி ஓசை அந்த நிசப்தமான நேரத்தில் பேரோசையாகக் கேட்டது. கம்பீரமான இரு காளைகள் நீண்ட கொம்புகளுடன் காணப்பட்டவை அந்த வண்டியை இழுத்துக் கொண்டு சற்றே பெரு நடையில் வந்தன. அவற்றின் நெற்றியில் வெண் சங்கால் அலங்கரிக்கப்பட்டுக் காட்சி அளித்தது. கழுத்தில் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் பட்டு நூலால் ஆன மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது.  வண்டிக்கூட்டின் மேலேயோ பெரிய தாமரைப்பூ வரையப் பட்டிருந்த துணியால் போர்த்தப்பட்டிருந்தது. வண்டியின் கைப்பிடிகள் அனைத்தும் நன்றாகத் துடைக்கப்பட்டுப் பளபளவெனக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. வண்டியின் முன்னே ஓட்டுபவருக்குப் பின்னால் வண்டியின் உள்ளே அமர்ந்திருப்பவர்  தெரியா வண்ணம் பட்டுத் திரைச்சீலை இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. வண்டியில் இருந்து இறங்கும் இடத்தில் பார்க்கலாம் எனில் அங்கேயும் ஓர் பட்டுத் திரைச்சீலை இழுத்துக் கட்டப்பட்டு உள்ளே இருப்பவர் யாராக இருக்கும் என யூகங்களைக் கிளப்பி விட்டிருந்தது.

சேவகர்கள் வண்டியின் முன்னும், பின்னும் மட்டும் இல்லாமல் இரு பக்கவாட்டுக்களிலும் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு வந்தனர். எல்லோர் கைகளிலும் வேல்கள் நுனி தீட்டப்பட்டு பளபளத்துக் கொண்டிருந்தன.  இளைஞர்களைப் பார்த்ததும் வண்டி அங்கேயே நின்று விட்டது. சேவகர்களில் ஒருவன் வல்லபனைப் பார்த்து அருகே ஏதேனும் பெரிய ஊரோ அல்லது சத்திரமோ இரவு தங்கிச் செல்லும்படி இருக்கிறதா எனக் கேட்டான். வல்லபன் அவனை நிமிர்ந்து பார்த்தான்!

No comments: