எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, July 08, 2019

சத்திரத்தில் புது வரவு! நண்பனா? துரோகியா?

விசித்திரமான குரல் ஒலியைக் கேட்டுத்திகைத்திருந்த வீரர் தலைவனும் சேவகர்களும் வெளியே சாலையை நோக்கிப் பார்வையைத் திருப்பினார்கள். வெகு தூரத்தில் கருங்கும்மென்றிருந்த இருட்டில் ஏதோ பிரகாசமாக ஜொலிப்பது தெரிந்தது. வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சற்று நேரத்தில் அது ஐந்தாறு தீவர்த்திகள் ஒளி காட்டிக்கொண்டு வரும் வெளிச்சம் என்பதைப் புரிந்து கொண்டனர். எனவே வீரர்களில் ஒருவன் சற்றே குதூகலத்தோடு தலைவனைப் பார்த்துத் தங்கள் படையாட்கள் தான் வருகின்றனர் எனத் தான் நினைப்பதாய்க் கூறினான். வீரர் தலைவனும் அப்படியே நினைத்துத் தலையை ஆட்டிக் கொண்டு, "வரட்டும், வரட்டும்! வந்து அவர்களும் இந்த இளைஞனின் இறுதி நேரத்தைப் பார்க்கட்டும்!" என்று கூறிக் கொண்டே தன் தலையையும் ஆட்டிக் கொண்டான். உன்னிப்பாகப் பார்த்தவண்ணம் அங்கேயே நின்று கொண்டிருந்த வீரர் தலைவனுக்கு ஏதோ சந்தேகம் மனதில் ஜனித்தது. தீவர்த்திகள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. குதிரைகளும் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஓர் படைவீரர்களின் குதிரைகள் போல் நடக்கவில்லை எவையும். ஒரே தாளகதியில் வரவேண்டிய குதிரைகள் சோர்ந்து போய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இது வீரர் படையே இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டான் வீரர் தலைவன்.

வல்லபனுக்கு இவ்வளவு தூரம் யோசித்துப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை. ஆனாலும் வருபவர்கள் மூலம் தனக்கு விமோசனம் கிட்டுமோ என எதிர்பார்த்துக் காத்திருந்தான்.  வீரர் தலைவனுக்குச் சற்று நேரத்திலேயே வருவது தன் ஆட்கள் இல்லை என்பது புரிந்து விட்டது. உடனேயே தன் வீரர்களுக்கு எச்சரிக்கை செய்தான். அவர்களுக்கும் இதற்குள்ளாக சந்தேகம் வந்துவிடவே எச்சரிக்கையுடனேயே காத்திருந்தனர். அதற்குள்ளாக எட்டு ஆட்கள் பரிவாரமாக வர அங்கே வந்து சேர்ந்த அந்தக்கூட்டம் சத்திரத்து வாசலில் வந்ததும் நின்றது. குதிரைகள் சோர்வுடன் நின்றன. மனிதர்கள் அவற்றின் மீதிருந்து குதித்துக் குதிரைகள் மேல் இருந்த பெரிய பெரிய மூட்டைகளையும் கீழே இறக்கினார்கள். தலையில் பாகையை வரிந்து கட்டி இருந்தான் ஆஹானுபாகுவான ஒருவன். அவன் நீளமானதொரு அங்கியைப் பட்டினால் தயாரிக்கப்பட்டுக் கட்டி இருந்தான். கையிலும் ஒரு பட்டுப் பையை வைத்துக் கொண்டிருந்தான். அவன் பாதரட்சைகள் வளைந்து காணப்பட்டன.  சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம் வந்த அவன், பொதுவாக யாரையும் கேட்காமல், "ஹே, ஹே! யாரது அங்கே! சத்திரம் இது தானா? நாம் தங்க வேண்டிய இடம் இது தானா?" என்று கேட்டவண்ணம் உரத்துச் சிரித்தபடி சத்திரத்துக்குள் நுழைந்தான்.

கூடத்திற்கு வந்தவன் மேலிருந்து தொங்கும் தூக்குக்கயிறையும் அதில் வல்லபனை ஏற்றிவிடத் தயாராக இருந்த கணபதி என்னும் வீரனையும், அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த வீரர் தலைவனையும் பார்த்துவிட்டுத் திடுக்கிட்டவன் போல் பாசாங்கு செய்து கொண்டு, "இதென்ன, இந்தச் சிறுவனைத் தூக்கில் போடப் போகிறீர்களா? இப்படி ஒரு காரியத்தை நீங்கள் செய்யலாமா?" என்று வீரர் தலைவனை ஏற்கெனவே அறிந்தவன் போல் மிக உரிமை எடுத்துக் கொண்டு கேட்டான். வீரர் தலைவனுக்கு அவன் வந்ததே பிடிக்கவில்லை. அதோடு இல்லாமல் சத்திரத்துக்குள்ளும் தங்க வந்தது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. இப்போது இந்தக் கேள்வியை எல்லாம் கேட்க இவன் யார் என நினைத்தவண்ணம், முகத்தில் வெற்றுச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு வல்லபனும் அவன் நண்பன் காலதத்தன் என்பவனும் அவர்களுடைய உடைமைகள், விலைபெற்ற பொருட்களை எல்லாம் திருடிவிட்டதாகச் சொன்னான். உடனேயே அந்த ஆஜானுபாகுவான மனிதன் வீரர் தலைவன் பக்கம் சேர்ந்து கொண்டான். "ஆம், ஆம்! இப்படியான திருடர்களுக்கெல்லாம் இதுதான் தண்டனை. தக்க தண்டனை கொடுத்தீர்கள்!" என்று வீரர் தலைவன் பக்கம் பேசினான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த வல்லபனுக்குக் கோபம் கொந்தளித்தது. "இல்லை, இல்லை! நாங்கள் எதையும் திருடவே இல்லை. இந்த வீரர் தலைவர் பொய் சொல்கிறார். உங்களை எல்லாம் போல் நாங்களும் இங்கே சத்திரத்தில் இரவைக் கழிக்கத் தான் வந்தோம். ஆனால் இவர் எங்கள் மேல் அநியாயமாய்ப் பழி போடுவதோடு இல்லாமல் என்னைக் கொலை செய்யவும் துணிந்து விட்டார். என் நண்பன் போன இடமும் தெரியவில்லை!" என்று ஆவேசமாகக் கூறினான். உடனே புதிதாக வந்த அந்த ஆள் வல்லபன் பக்கம் சேர்ந்து விட்டான். "ஆஹா! இவன் திருடவே இல்லையா? அநியாயம்! அநியாயம்! நீங்கள் எப்படி இவனைத் தூக்கில் போடலாம்? இவன் தான் திருடவே இல்லையே!" என வீரர் தலைவன் மேல் பாய்ந்தான். வீரர் தலைவனுக்கு ஆத்திரம் மேலிட்டது. முதலில் தன் பக்கம் பேசியவன் இப்போது வல்லபன் பக்கம் பேசுகிறானே என நினைத்தவண்ணம், "ஐயா, நீதிமானே! இந்த இளைஞன் சொல்வதைக் கேட்டதும் அவன் பக்கம் சாய்ந்து விட்டீரே! இவன் எதையும் திருடவில்லை எனில் ஏன் கூடத்தில் இருந்த விளக்கை அணைக்கவேண்டும்? அதைக் கேளுங்கள் இவனிடம்!" என்று கோபமாகக் கூறினான்.

2 comments:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

கடைசி சொற்றொடரைப் படித்ததும், ஈராக் அதிபர் சதாம் உசேன் நீதிமன்றத்தில் நான் உங்களைக் குற்றம் சாட்டுகிறேன் என்று நீதிபதியைப் பார்த்து கூறியது நினைவிற்கு வந்தது.

Geetha Sambasivam said...

நன்றி முனைவரே! அவரவருக்கு அவரவர் நியாயம்.