எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, March 15, 2022

சிங்கழகரின் அனுபவங்கள்! தொடர்ச்சி 3!

 கிட்டத்தட்டப் பத்து மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது தொடர்ந்து எழுத.  போன வருஷம் ஜூன் மாதம் உடம்பு முடியாமல் போனதில் இருந்து எத்தனையோ முறை முயன்றும் இதை எழுத முடியவில்லை. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும் எனக் காலையிலிருந்தே முயன்று பார்த்துவிட்டு ஒரு வழியாக இப்போ உட்கார்ந்திருக்கேன். நல்லபடியாகத் தொடர அந்த அரங்கன் தான் அருள் செய்யணும். பங்குனித் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. அரங்கன் உறையூருக்குப் போயிருக்கான். கமலவல்லியைத் திருமணம் செய்து  கொள்ள. நேற்று எங்க தெருவழியாகத் தான் போயிருக்கான். ஆனால் முன் அறிவிப்பு இல்லாததால் எங்களுக்கெல்லாம் தெரியலை. நான் அரங்கனைப் பார்த்தே சுமார் இரண்டரை வருஷங்கள் ஆகின்றன. :(

*************************************************************************************

துருக்கியர் எங்களைப் பார்த்துவிட்டனர் என்பது அவர்கள் கூக்குரலில் இருந்தும் அவர்கள் ஓடி வருவதில் இருந்தும் புரிந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்த எங்களை மாலழகர் என்பார் பார்த்துவிட்டு," எனக்கு மல் யுத்தமும் தெரியும், சிலம்பமும் தெரியும்.  ஆகவே வருபவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்கள் உங்களைத் தொடராமல் நான் இங்கேயே தடுத்து நிறுத்துகிறேன். நீங்கள் அனைவரும் அரங்கனைத் தூக்கிக் கொண்டு விரைவில் வெகுதூரம் போய்விடுங்கள்!:" என்றார். அது தானே ஒரே வழி. ஆகவே நாங்களும் மாலழகரை அங்கே தனியாக விட்டுவிட்டு அரங்கனைத் தூக்கிக் கொண்டு காட்டு வழியில் விரைந்தோம். இங்கே மாலழகருக்கும் வீரர்களுக்கும் கடுமையான போர். என்றாலும் தனக்குத் தெரிந்த சிலம்ப வித்தையை வைத்துக் கொண்டு மாலழகர் அவர்கள் தன் மேல் வாள் வீசுவதைக் கூடியவரை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்.  என்றாலும் ஆயுதங்கள் இருந்தமையால் அவர்கள் விரைவில் மாலழகரைக் குற்றுயிராகக் கீழே தள்ளினார்கள்.

பின்னர் அவர்கள் மாலழகரிடம் அவர் யார் எனவும், எங்கே போய்க் கொண்டிருக்கிறார் எனவும் விசாரித்தார்கள்.  உடல் உபாதை பொறுக்க முடியாத மாலழகர் "அரங்கா! அரங்கா!" எனப் புலம்ப ஆரம்பிக்க அவர்களோ இவர்கள் அந்த அரங்க விக்ரஹத்தைத் தான் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள் போலும். கூடவே கையில் வைத்திருந்த மூட்டைகளில் அரங்கனின் ஆபரணங்களும், வைர, வைடூரியங்களும், ரத்தினங்களுமாக இருக்க வேண்டும். வாருங்கள் விரைவில் சென்று அவர்களைப் பிடிப்போம் என அவர்களில் ஒருவன்மற்றவர்களைத் துரிதப்படுத்த  இன்னொருவன் நாம் தனியாகப் போவதை விடக் கோட்டைக்குள் சென்று மற்றப்படை வீரர்களையும் அழைத்துச் சென்றால் விரைவில் அவர்களைப் பிடித்துவிடலாம் என்று யோசனை சொல்ல அதன் பேரில் அவர்கள் அனைவரும் கோட்டைக்குச் செல்ல ஆயத்தம் செய்தார்கள். போகிற போக்கில் ஏற்கெனவே காயங்களால் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த மாலழகரின் கால்களையும்  வெட்டி விட்டார்கள்.

அப்போது சிங்கழகர் மேலும் தொடர்ந்து, "மேற்சொன்ன சம்பவம் நடந்த போது நான் மற்ற இருவருடனும் அரங்கனைத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். அரங்க விக்ரஹம் ரொம்பக் கனமாக இருந்தபடியால் மாறி மாறித்தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு சென்றோம். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் நான் மற்றவர்களைப் பார்த்து அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும் போய் மாலழகர் கதி என்ன எனப் பார்த்து வருவதாகச் சொன்னேன். பின்னர் நான் விரைந்து வந்து மாலழகரைத் தேடிக் கொண்டு அவர் கீழே விழுந்து கிடக்கும் இடம் வந்து அவரைப் பார்த்து மனம் நொந்து போனேன். இரண்டு கால்களும் வெட்டப்பட்டுக் குற்றுயிராக இருந்த மாலழகரின் உயிர் பிரியும் தருவாயில் இருந்தார்.  கண்ணீருடன் அவரருகே சென்று அவர் தலையைத் தூக்கி என் மடியில் வைத்துக்கொண்டு அவரை அழைத்தேன். மிகச் சிரமப்பட்டுக் கண் திறந்து பார்த்த அவர் என்னிடம்,"சீக்கிரம், சீக்கிரம் விரைந்து செல்லுங்கள். அந்தப் போக்கிரிகள் அரங்கன் உங்களிடம் இருப்பதை எப்படியோ கண்டு கொண்டார்கள். படை வீரர்களை அழைத்துக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்தி உங்களைக் கண்டு பிடித்துவிடப் போகிறார்கள். விரைந்து சென்று அரங்கனையும் மற்றவர்களையும் காப்பாற்றுங்கள்!" எனக் கை கூப்பி வேண்டிக் கொண்டார்.  உடனே அவர் உயிர் உடலில் இருந்து பிரிந்து சென்றது.

அவர் உடலை அங்கே இருந்த பள்ளத்தில் விட்டுவிட்டுச் செடி, கொடி, கம்புகள், இலைகள், தழைகளால் மூடினேன். பின்னர் விரைவாக மற்ற இருவரையும் அரங்கனோடு விட்டு விட்டு வந்த இடம் நோக்கி ஓடினேன். அவர்களிடம் மாலழகர் கூறிய விஷயத்தைக் கூறிவிட்டு படை வீரர்கள் அங்கே அவர்களைத் தேடிக் கொண்டு வந்து சேர்வதற்குள்ளாக நாம் வெகு தூரம் போய்விட வேண்டும் என்றும் சொன்னேன். இம்மாதிரித் திக்குத் தெரியாமல் பல காத தூரம் ஓடிய எங்கள் கண்களில் பட்ட அஞ்சனாத்ரி மலை மனதில் ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது. மலை மேல் ஏறி மேலே போய்விட்டால் இந்த வீரர்களிடமிருந்து தப்பிக்கலாம் என நினைத்து அதைச் சொல்வதற்குள் மற்றக் கொடவர்கள் என்னிடம்,  அவர்கள் அரங்கனைத் தூக்கிக் கொண்டு மலை மேல் ஏறுவதாகவும் என்னைக் கீழேயே இருந்து வீரர்கள் வருவதைக் கண்காணிக்கும்படியும் சொன்னார்கள்.  சுமார் 3 நாட்கள் வரை பார்த்துவிட்டு எவராலும் தொந்திரவு நேராது என்பது உறுதியானதும் என்னையும் மேலே வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்ளச் சொன்னார்கள்.  சரி என ஒத்துக்கொண்டு அவர்களை மலை மேல் ஏறச் சொல்லிவிட்டு நான் மட்டும் பாறைகளுக்கும் புதர்களுக்கும் நடுவில் இருந்த குகை போன்ற இடத்தில் மறைந்து கொண்டேன். சில நாழிகைகளிலேயே பேரிரைச்சல் கேட்டது.  சற்று வெளியே வந்து எட்டிப்பார்த்தால் துருக்க வீரர்கள் காட்டிலிருந்து வெளியே ஓடி வந்து அஞ்சனாத்ரி மலையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். திடுகிட்ட நான் என்ன செய்வது எனத் தெரியாமல், "அரங்கா! அரங்கா!" எனப் புலம்பத் தொடங்கினேன்.

No comments: