எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, March 20, 2022

கொடவர்களைத் துரத்தும் துருக்க வீரர்கள்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

 சிங்கழகர் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த வல்லபனுக்கு ஆச்சரியமும் வருத்தமும் ஒரு சேரத் தோன்றிக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அரங்க நகரிலிருந்து அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பிய அறுபது பேரில் இன்று மீதம் இருப்பவர்கள் சொல்பமே. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  நம்பிக்கை அவர்களைக் கைவிடவில்லை. அரங்கனை எப்படியானும் காப்பாற்றியே ஆகவேண்டும் என்னும் அவர்களுடைய தீவிரமான முடிவு ஓர்  சமுதாயத்தின் நம்பிக்கையையே கட்டிக் காத்துக் கொண்டிருந்தது.  ஓர் அருமையான சமுதாயத்தின் நம்பிக்கையாக ஒளிர்ந்து கொண்டிருந்தவன் அந்த அரங்கன். இவனைக் காப்பாற்ற எத்தனை பேர் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்! இதை நீனைக்க நினைக்க வல்லபன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சிங்கழகரைப் பார்த்துக் கண்கள் கலங்கிய வண்ணம் தன் மனம் எவ்விதம் துன்பத்தால் குமுறுகிறது என்பதைச் சொன்னான் வல்லபன். அதற்குச் சிங்கழகர் வல்லபனின் நல்ல உள்ளத்தையும் நேர்மையான நடத்தையையுமே அது குறிப்பதாகச் சொன்னார்.  நல்ல ஆத்மாக்களுக்கே இப்படி எல்லாம் தோன்றும் எனவும் அரங்கனைத் தேடிக் கண்டு பிடிப்பாரில்லாமல் தாம் இத்தனை ஆண்டுகளாக வருந்திக் கொண்டிருந்ததையும் சொன்னார். இப்போது இவர்கள் இருவரையும் பார்த்ததும் தம் மனம் கொண்ட ஆறுதலையும் எடுத்துச் சொன்னார். பின்னர் அவர் அவர்கள் இருவரிடமும் மேலே நடந்தனவற்றையும் தாம் சொல்லப் போவதாகவும் அதையும் கேட்கும்படியும் சொல்லிவிட்டு மேலே தொடர்ந்தார்.

அஞ்சனாத்ரி மலையடிவாரத்தில் உள்ள காட்டில் அடர்ந்து வளர்ந்து கிடந்த புதர்களின் மறைவிலே நின்றவண்ணம் சிங்கழகர் பரிதவித்துக் கொண்டிருந்தார். துருக்கிப் படைகள் பேர் ஆரவாரத்தோடு காட்டை ஊடுருவிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தன. காட்டில் தோன்றிய பேர் ஆரவாரத்தால் கலங்கிய பக்ஷிகளும், மிருகங்களும் அங்கும், இங்குமாக ஓடி அலைக்கழிக்கப்பட்டன.  இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிங்கழகருக்கோ செய்வது என்ன என்று தெரியாமல் கலக்கம் ஏற்பட்டது.  கண்ணீர் பெருக்கிய வண்ணம் இனி தாம் செய்வது எதுவும் இல்லை; என்ன நடக்கப் போகிறதோ நடக்கட்டும். வேறே வ்ழி இல்லை என நினைத்தவராய் அந்தப் புதர்களிலேயே மறைந்து அமர்ந்து கொண்டு விட்டார்.

படை வீரர்கள் அடிவாரக்காட்டை அடைந்து சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அவர்கள் அங்கும் இங்குமாகத் தங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டு ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அடிவாரத்தைச் சூழ்ந்து கொண்டிருப்பதையும்  தங்களைத் தேடிக் கொண்டிருப்பதையும் மேலே ஏறிக் கொண்டிருந்த மூன்று கொடவர்களுக்கும் தெரியாது.  ஆபத்து இனித் தொடரப் போவதில்லை என்று நினைத்த வண்ணம் கவலை இல்லாமல் ஆனால் வேகமாக மலை மேல் ஏறிக் கொண்டிருந்தனர். போகும் வழியெல்லாம் புதர்கள் நிறைந்து காணப்பட்டது. ஆனால் மேலே ஏற ஏற ஆங்காங்கே பாறைக்கற்களும், தரையெல்லாம் கற்கள் நிரம்பியனவாகவும் காணப்பட்டன. கொஞ்ச தூரத்துக்கு ஒரே வெட்டவெளியாகவும் இருந்தது. அந்த வெட்டவெளியிலே அரங்கனைத் தூக்கிக் கொண்டு அவர்கள் சென்றதைக் கீழே இருந்த வீரர்களில் சிலர் பார்த்துவிடவே ஒரே கூக்குரல். கோஷம். திடீரென எழுந்த பெரிய ஆரவாரத்தைக் கேட்ட கொடவர்களும் திரும்பிப் பார்க்க மேலிருந்து கீழே படைவீரர்கள் அடிவாரத்தைச் சூழ்ந்து கொண்டுஇருப்பதைக் கவனித்து விட்டார்கள். 

உடனே அரங்கனைத் தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக அந்தப் பெரிய பரந்த வெளியைக் கடக்கத் தொடங்கினார்கள். மீண்டும் வெகு விரைவில் மறுபடி புதர்கள் சூழ்ந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்ததும்  இனி திருப்பதி மலை மேல் ஏறி அரங்கனைக் காப்பாற்றுவது கஷ்டம் என்பதோடு கோயிலுக்கும் அவர்களால் தீங்கு ஏற்பட்டுவிடும் எனப் பயந்த கொடவர்கள் அருகிலுள்ள மலை முகட்டின் மேலே ஏறி எங்கானும் மறைந்து கொள்ளலாம் என நினைத்தனர். அதற்குள்ளாகக் கீழே என்ன நடக்கிறது எனக் கவனித்த கொடவர்களுக்குப் படை வீரர்கள் தங்களில் ஒரு பிரிவினரை மலை மேல் ஏறிக் கொடவர்களைத் தொடரும்படி ஆணை இட்டுக் கொண்டிருந்ததையும் அதன்படி வீரர்கள் மலைமேல் ஏறத் தொடங்குவதையும் கண்டனர்.  இனி என்ன செய்யலாம் எனக் கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்தனர். 

மலை முகடுகளைக் கூர்ந்து சுற்றிச் சுற்றிப்பார்த்தனர் மூவரும். மூவரின் பெயர்களும் முறையே திருக்குருகூர் தாசர், திருவில்லிபுத்தூர் தாசர், சீராம தாசர் ஆகியோர் ஆகும். திருக்குருகூராரின் மைத்துனர் திருவில்லிபுத்தூர் தாசர் ஆவார். குருகூர் தாசரின் மகன் சீராம தாசர் ஆவார். இப்போது மேலே ஏறிக்கொண்டிருக்கும் படை விரைவில் அவர்கள் இருக்குமிடம் வருவதற்குள்ளாக ஏதேனும் செய்ய வேண்டுமே. ஆகவே மூத்தவரான திருக்குருகூர் தாசர் (அரங்கத்தை விட்டுக் கிளம்புகையில் அறுபத்திரண்டு வயசில் இருந்தவருக்கு இப்போது எண்பத்தி இரண்டு வயது ஆகிவிட்டது. நல்ல மூப்பு) அவர் மற்ற இருவரையும் பார்த்துத் தப்புவதற்கு எப்படியேனும் வழி தேடவேண்டும் என்று சொல்லிச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.  அந்த மலை முகடு மூன்று பக்கங்களிலும் சரிவாகக் காணப்பட்டது. நான்காவது பக்கம் செங்குத்தாகப் பாம்பு படமெடுத்தாற்போல் காணப்பட்டதையும் கவனித்தவருக்கு அந்தச் செங்குத்தான மலைமுகட்டில் ஏறுவது கஷ்டம் என்பதால் படை வீரர்கள் அந்தப் பக்கம் யாரையும் ஏவவில்லை என்பதையும் கண்டு கொண்டார். 


No comments: