எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, June 10, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! நடராஜர்!

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே


திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவம் தனித் தன்மை பெற்று விளங்குகிறது. மற்ற ஊர்த்துவ தாண்டவங்களில் நடராஜரின் வலக்கால் உடம்போடு ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி நின்றாடுவார். திருவாலங்காட்டிலோ, இடக்கால் பாதத்தைச் செங்குத்தாகத் தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்துக்கு நேராக வரும்படியான அமைப்பில் உள்ளது. காளியின் செருக்கை அடக்க ஆடப்பட்ட ஆட்டமே ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப் படும். தில்லையிலும் பொன்னம்பலத்தின் எதிரே உள்ள நிருத்த சபையில் ஊர்த்துவ தாண்டவ சிற்பம் தனி சந்நிதியாக உள்ளதைக் காண முடியும். நெற்றிக்கு நேராகத் திலகம் வைக்கும் பாவனையில் காணப்படும். இதை "லலாட திலகா" என்று சொல்வதுண்டு. இன்னும் சிலர் காதில் அணிந்திருந்த குழையைக் கீழே இருந்து இடக்காலால் எடுத்து, காலாலேயே அணிந்ததாகவும் அதைக் கண்ட காளி தன்னால் அப்படிச் செய்ய முடியாது என வெட்கித் தலை குனிந்ததாகவும் சொல்வார்கள்.

காளியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை என்ன தான் பெண்ணாக இருந்தாலும் காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்து ஆட முடியாது அல்லவா? மேலும் இதில் ஆணாதிக்கம் என்பதெல்லாம் கிடையாது. இறைவன் அவளை ஆட வேண்டாம் எனவும் சொல்லவில்லை. உன்னால் முடியுமா என்பது தான் கேள்வி! முடியும் என்றாலும் பெண்களுக்கு என ஒரு எல்லைக் கோடு உண்டு என்பதை அன்னை தானாகவே வகுத்துக் கொண்டாள். பண்பு என்பது எல்லைக் கோட்டைத் தாண்டாது என்பதையும் உணர்த்தினாள். இதில் வெற்றி, தோல்வி என்பதை விட பெண்ணின் பெருமையும், அவள் தன்னிலையை ஒருக்காலும் மறக்கக் கூடாது என்பதுமே உணர்த்தப் படுகிறது. சக்தியானவள் ஆக்கும் சக்தியாக வெளிப்படுவதே அன்றி, தன்னையும் தன்னிலையையும் மறந்து அழிக்கும் சக்தியாக மாறக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துவதாய் என் கருத்து.

அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.


சம்ஹார தாண்டவம்: எட்டுக் கைகளுடனும், மூன்று கண்களுடனும் காணப் படும் இறைவனின் ஊழிக் கூத்தாக வர்ணிக்கப் படும் இது இறைவன் தனக்குள் இந்தப் பிரபஞ்சத்தை அடக்கும் வேளையில் ஆடப் படும் கூத்தாகச் சொல்லப் படுகிறது. அபஸ்மார புருஷனை அடக்கும் இடக்காலுடனும், வலக்கால் தூக்கிய நிலையிலும், வலக்கைகள் அபய ஹஸ்தத்துடனும், மேலும் சூலம், உடுக்கை,போன்றவற்றுடனும், இடக்கைகளில் மண்டை ஓடு, அக்கினியுடனும் கஜஹஸ்த முத்திரையுடனும் காணப் படுகிறது. வலப்பக்கம் நந்தியும், இடப்பக்கம் கெளரியும் காணப் படுகின்றனர். பிரளய காலத்தில் ஏற்படும் இந்த ஊழிக் கூத்தில் இறைவன் தன்னில் தானே அமிழ்ந்து போய், சகலமும் தானே என்பதை உணர்த்தும் வண்ணம் ஆடுவதாயும், இதுவும் ஒரு வகையான ஆனந்தத் தாண்டவம் தான் என்றும் சொல்லப் படுகிறது.

தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.



ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் ஒரு நாமம் இந்தப்பிரளயகால நடேசனின் கூடவே சாக்ஷியாக நிற்பவள் என்ற அர்த்தத்தில் வரும். "மஹேச்வர, மஹாகல்ப, மஹா தாண்டவ சாக்ஷிணி" என்பதற்கு இதுதான் அர்த்தம்னு நினைக்கிறேன். (மெளலி, உதவிக்கு வரவும்.)

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

many thanks nga

Please try to make your posts into a book.

Geetha Sambasivam said...

ரொம்ப நன்றி ராம்ஜி யாஹூ, புத்தகம்போடும் அளவுக்கு ஒண்ணும் இல்லைனே நினைக்கிறேன். என்றாலும் உங்கள் அன்புக்கு நன்றிப்பா.