எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, July 21, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ஜாலந்தரர்!

திரிபுர சம்ஹாரத்தின் போது ஈசனின் நெற்றிக்கண்ணின் நெருப்புப்பொறியில் தோன்றியவன் ஜாலந்திரன். அந்த நெருப்புப் பொறியின் உக்கிரம் தாங்காமல் கடலில் விட, அந்த அக்கினியில் தோன்றிய குமாரனை சமுத்திர ராஜன் தன் அருமை மகனாய் வளர்த்து வந்தான். இன்னும் சில புராணங்களில் வேறு விதமாய்ச் சொல்லப் படுகிறது. தேவேந்திரன் ஈசனைக்கண்டு வணங்கிச் செல்ல திருக்கயிலைக்கு வர, தேவேந்திரனைச் சோதிக்கும் எண்ணத்தோடு ஈசன் வேறு உருவில் நின்றார். அவர் யாரோ என எண்ணிய இந்திரன் அவரைப் பார்த்து அலட்சியமாகத் தன் வஜ்ராயுதத்தை வீசினான். உடனே ஈசனின் ருத்திர சொரூபம் வெளிப்பட நடுங்கிப்போனான் இந்திரன். அவர் உடலில் இருந்து அப்போது தோன்றினான் ஒரு பாலகன். அவனுக்கு ஜாலந்தரன் என்று பெயரிட்டு சமுத்திர ராஜனிடம் அளித்து அவனை வளர்த்துவரச் சொன்னார் ஈசன். அவனும் சீரோடும், சிறப்போடும் தனக்கென அளிக்கப் பட்ட செல்வ மகனை வளர்த்து சகல கலைகளும் கற்பித்து, காலநேமி என்னும் அசுரனின் மகள் பிருந்தையை மணம் முடித்து வைத்தா ன். பிருந்தை கற்புக்கரசி என்பதோடு சிவ பூஜையும்செய்து வந்தாள். ஜாலந்தரன் மஹா வீரனாகத் திகழ்ந்த்தோடு எவராலும் வெல்லமுடியாதவனாகவும் இருந்தான். மேலும் பிருந்தையின் கற்பின் கனலும் அவன் போர் செய்யும் போதெல்லாம் அவனுக்கு வெற்றியை அளித்து வந்தது. சமுத்திர ராஜனால் வளர்க்கப் பட்டாலும் காலப்போக்கில் அசுரர்களோடு சேர்ந்த ஜாலந்திரன் தேவர்களோடு சண்டையிட்டு வந்தான்.

ஜாலந்திரனை வெல்லமுடியாத தேவேந்திரன் மஹாவிஷ்ணுவின் துணையை நாட அவரும் பல்லாண்டுகள் அவனோடு போரிடுகிறார். ஆனால் பிருந்தையின் கற்பின் கனல் அவனைக் காத்து வருகிறது. ஈசன் ஒருவரால் மட்டுமே வெல்லமுடியும் என்பதைப் புரிந்து கொள்கின்றார் மஹாவிஷ்ணு. மேலும் அவனைக் காப்பது பிருந்தையின் கற்பு. ஜாலந்தரனை அழிப்பதென்றால் பிருந்தையிடம் இருந்து அவனைப் பிரிக்க வேண்டும். மஹா விஷ்ணுவானவர் ஜாலந்தரனின் உருவில் பிருந்தையிடம் செல்ல, இங்கே ஜாலந்தரனோ ஈசனையும் தோற்கடிக்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் கைலை மலையை ஜாலந்தரன் அடைந்தான் இந்திரனைப்பிடிக்க. அங்கே சிவன் ஒரு வயோதிகர் உருவில் அவனுக்குக் காட்சி கொடுது நீ யார் என வினவ, தான் ஜலந்தரன், சமுத்திரராஜனின் மகன் எனவும், ஈசனுடன் போரிட வந்ததாயும் கூறுகின்றான் ஜாலந்தரன். அதற்குள் அங்கே விஷ்ணு, பிருந்தையிடம் தான் ஜாலந்தரனே என நம்ப வைக்க, அவளும் வந்திருப்பது தன் கணவனே என எண்ணுகின்றாள். ஈசனோ ஜாலந்தரனிடம் ஈசனோடு போரிட்டு வெல்வது கடினம் என்றும் திரும்பிப் போகும் வண்ணமும் கூறுகின்றார். ஜாலந்தரன் பிடிவாதமாய் அங்கேயே நின்று, தன் ஆற்றலைக் காணும்படிச் சவால் விடுகின்றான். உடனே முனிவராக வந்த ஈசன் தன் காலால் தரையில் கீறி ஒரு சக்கரத்தை வரைகின்றார். பிறகு அந்தச் சக்கரத்தைப் பெயர்த்தெடுக்கின்றார். இதை உன் தலைமேல் தூக்கி எறியப் போகின்றேன். தாங்குகின்றாயா பார்க்கலாம் என்று சொல்லி அதை ஏவுகின்றார். ஜாலந்தரன் நகைத்தவண்ணம் அதை எடுத்துத் தன் மார்பிலும், புஜத்திலும் தாங்கிக் கொண்டு பின்னர் தன் தலையிலும் தாங்கிக் கொள்ளுமாறு வைக்கின்றான்.
சக்கரம் அவனை இரண்டாய்ப் பிளக்கின்றது. பின்னர் திரும்ப ஈசனிடமே சென்று விடுகின்றது. பின்னர் ஈசன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஜாலந்தரனின் சேனையையும் சாம்பலாக்குகின்றார். கணவன் இறந்த்துமே கற்பின் கனலான பிருந்தையால் வந்திருப்பது கணவன் அல்ல என்று புரிகிறது. வந்திருப்பது தன் கணவன் அல்லவென்றும் புரிகின்றது அவளுக்கு. மஹாவிஷ்ணுவிடம் தன்னை ஏமாற்றியதைப் பற்றிக் கேட்டு கோபம் கொள்கிறாள். மஹாவிஷ்ணுவோ அவள் என்றென்றும் கற்புக்கரசியாக மதிக்கப் படுவாள் என்றும், அவளைத் தான் மாலையாகச் சூடிக்கொள்வதாயும் வாக்களிக்கிறார். ஆனால் பிருந்தையோ தன் கணவன் உயிரை விட்ட இடம் தேடி வந்து அவன் உடலோடு அவளும் சேர்ந்து தீக்குளிக்கின்றாள். அவள் சாம்பலில் இருந்து பிறந்ததே துளசிச் செடி என்று சொல்லுவார்கள்.

அன்றிலிருந்து மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் பிரீதியானதாக துளசி மாறியது. ஈசனுக்கும் சோமவாரத்தில் துளசியால் அர்ச்சனை செய்வது நன்மை பயக்கும் எனவும் அன்று சந்திரனின் அமுதம் கலந்திருக்கும் என்றும் கூறுவார்கள். அட்டவீரட்டான்ங்களில் ஒன்றான திருவிற்குடியில் ஜாலந்தரனை வதம் செய்த கோலத்தில் ஈசனைக் காண முடியும். இங்கே மட்டும் ஈசனின் கைகளில் வலக்கரத்தில் சக்கரம் தாங்கி இருப்பதாயும் சொல்லப் படுகிறது. இந்தச் சக்கரமே பின்னர் ஈசனால் மஹாவிஷ்ணுவுக்கு அளிக்கப் பட்டதாயும் சொல்லுவார்கள். ஈசனின் சக்கரத்தைத் தாங்கியதால் ஜாலந்தரனின் ஆன்மா ஒளி வடிவம் பெற்றுத் திகழ்ந்தது என்று சொல்கின்றனர். காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு மேற்கே ஜலந்தரேசம் என்னும் பெயரில் ஜாலந்தரன் பூஜித்த சிவலிங்கம் உள்ளதாயும் கேள்விப் படுகிறோம். (அடுத்த முறை காஞ்சி போறச்சே பார்த்துட்டு வரணும்.)


வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு
ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையுறு
வித்த ளித்தமதி பெற்ற தத்தைமண ...... முண்டவேலா

வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி
யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்
விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ் ...... தம்பிரானே. //

நாவுக்கரசர் தேவாரம் ஒன்றே ஒன்று திருவிற்குடிக்கு இருப்பதாய்த் தெரிய வருகிறது. ஆனால் அது தேடலில் கிடைக்கவில்லை. அருணகிரிநாதரின் திருப்புகழில் இருந்து சில வரிகள் மேலே. அதேபோல் ஜாலந்தரனை வதம் செய்யும் கோலத்தில் சக்கரத்தோடு உள்ள படமும் கிடைக்கவில்லை. ஜாலந்தரன் ஈசன் ஏவிய சக்கரத்தைத் தன் மார்பில் தாங்கியவண்ணம் ஈசனை இரு கை கூப்பி வணங்கிக் கொண்டு இருக்கும் கோலத்தில் சிற்பம் இருப்பதாய்த் தெரிய வருகிறது. அதுவும் எங்கேன்னு தெரியலை.

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.
ஜாலந்திரர் புகைப்படம் இணையத்திலும் கிடைக்க வில்லை. ஆனால் ஜாலந்திரர் என்ற ஒரு பாடல் கிடைத்தது, கம்பீர நாட்டை ராகம், ஆதி தாளம்.

http://www.musicindiaonline.com/list_albums/i/11-Classical_Carnatic_Instrumental/599-Gambhira_Nattai/#/list_albums/i/11-Classical_Carnatic_Instrumental/599-Gambhira_Nattai/

artist=Ranganayaki Raajgopalan.

Jayashree said...

appo "jaya jaalanhtharasthithaa " ethai/enna sollarathu Sri lalitha sahasranaamam?

aandon ganesh said...

rombha nanri amma.