எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, July 25, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! திரிபுராந்தகர்!


திரிபுர சம்ஹாரர்: அடுத்து நாம் பார்க்கப் போகிறவர் அநேகமா அனைவரும் அறிந்த ஒருவரே. இந்தத் திரிபுர சம்ஹாரத்தைப் பற்றிப் பேசாத புராணங்களோ, இலக்கியங்களோ இல்லை. சங்க இலக்கியமான பரிபாடலில், புறநானூற்றில், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்றவற்றைத் தவிரத் தேவாரப் பாடல்களிலும் திரிபுர சம்ஹாரம் பற்றிய குறிப்புகளைக் காணலாம். ஜாலந்தர வதத்தில் விஷ்ணுவுக்கே உரிய சக்கரத்தைத் தாங்கிக் கொண்டு காட்சி அளித்த ஈசன் இங்கேயும் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீராமாவதாரத்தின் முக்கிய ஆயுதமான வில்லைத் தாங்கிக் காட்சி அளிக்கிறார். முதலில் திரிபுரர்களான மூன்று அசுரர்களையும் பற்றிப் பார்ப்போமா?

தாரகன் என்னும் அசுரனின் மகன் தாரகாசுரன். தாரகாசுரன் கடுமையாகத் தவம் செய்து பெற்ற வரங்களைச் சரியான முறையில் பிரயோகிக்காமல் தேவர்களைத் துன்புறுத்துவதிலேயே இன்பம் கண்டு தன் வரங்களைப் பிரயோகிக்க, ஆறுமுகனால் அழிக்கப் பட்டான். அவனுக்கு மூன்று புதல்வர்கள். வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியோர் மூவரும் தங்கள் தகப்பனைப் போலவே கடும் தவம் செய்தனர். அதன் மூலம் பிரம்மனிடம் பல வரங்களை வேண்டினார்கள். தவம் செய்தால் வரங்கள் கேட்கும்போது கொடுத்தே ஆகவேண்டும். தவத்தின் பலன் அது. மறுக்க முடியாது. ஆகவே பிரம்மனும் வரங்களைக் கொடுத்தான். ஈசன் ஒருவனைத் தவிர மற்ற எவராலும் தங்களை அழிக்க முடியாது எனவும் பெருமை கொண்டனர். மேலும் மேலும் வரங்களைப் பெறும் ஆசையில் கொஞ்சம் வித்தியாசமான ஒரு வரத்தையும் கேட்டனர். அதுதான் எவராலும் அழிக்க முடியாத மூன்று நகரங்களைத் தங்களுக்குத் தர வேண்டும் என்பது. அந்த நகரம் பூமியில் இருக்கக் கூடாது என்றும், தாங்கள் விரும்பும்போது பறந்து வேறு இடத்திற்குச் சென்றுவிடவேண்டும் என்றும் வேண்டினார்கள்.

அவ்வாறே மூன்று கோட்டைகள் கிடைத்தன அவர்களுக்கு. மூன்றும் பறக்கும் வல்லமை கொண்டது. இந்த மூன்று கோட்டைகளின் அதிசயம் என்னவெனில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே மூன்றும் ஒரே இடத்தில் வந்து சேர்ந்து கொள்ளும். அது வரையிலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருக்கும், அல்லது பறந்து கொண்டிருக்கும். ஒரே இடத்தில் சேரும்போது தான் அந்தக் கோட்டைகளை அழிக்க முடியும். அதுவும் சாமானியர் எவராலும் முடியாது. அனைத்துத் தேவர்களின் பலத்திலும், அனைத்து மூர்த்திகளின் பலத்திலும் சரிபாதியைத் தன்னில் கொண்டவர் எவரோ அவரே அழிக்க முடியும். அதுவும் ஒரே அம்பினால். மற்றொரு அம்பைப் போட முடியாது. முதல் அம்பிலேயே அழித்துவிடவேண்டும். இத்தனையும் கேட்டுப் பெற்றுக் கொண்டனர் மூவரும். இதில் பொன்னாலான கோட்டை தாரகாட்சனுக்கும், வெள்ளிக்கோட்டை கமலாட்சனுக்கும், இரும்புக் கோட்டை வித்யுன்மாலியும் பெற்றதாய்ச் சொல்வார்கள். இந்தக் கோட்டைகள் சகல வசதிகளும் நிரம்பி இருந்தது. அவர்களுக்குத் தேவையான வீடுகள், மாளிகைகள், கோயில்கள் என அனைத்தும் இருக்க, மூவரும் மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர். மூவரும் சிறந்த சிவபக்தர்களாகவும் இருந்தனர். தேவைப்பட்ட போது கோட்டையோடு பறந்து வேறிடத்திற்குச் சென்றனர்.

பறக்கும் கோட்டைகள் மூன்றும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தன. அவை பறக்கும்போது விண்ணிலும் மண்ணிலும் பலருக்கும் அவதி. பூமியில் இறங்கினாலோ மானிடருக்குக் கஷ்டம். மூவராலும் அழிக்கப் படுவார்கள். விண்ணில் இறங்கினாலோ தேவர்கள் அனைவரும் படாத பாடு படுவார்கள். எவராலும் எதுவும் செய்யமுடியவில்லை. பிரம்மனையே தஞ்சமடைந்தனர் அனைவரும். பிரம்மாவோ மஹாவிஷ்ணுவைக் கேட்க, இருவரும் ஈசனைத் தவிர வேறு எவராலும் இது இயலாத ஒன்று என்று கூறினார்கள்.


படங்கள் நன்றி கூகிளார்: திரு நடராஜ தீக்ஷிதரும் ஜாலந்தரர் படமும் மற்றப் படங்களும் அனுப்பி இருக்கார். அவருக்கும் எனது நன்றி.

திரிபுர சம்ஹாரம் தொடரும்!

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing, nice article

aandon ganesh said...

thanks.
love& grace