எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, June 21, 2019

வண்டிக்குள் இளம்பெண்!

அதற்குள்ளாகக் காலதத்தன் அரைக்காத தூரத்தில் ஓடுமானூரில் சத்திரம் ஒன்று இருப்பதாகவும் அங்கே தான் தாங்களும் செல்வதாகவும் சொன்னான். அரைக்காதமா என யோசித்தான் அந்த வீரர் தலைவன். பின்னர் வண்டிக்காரன் வண்டியைக் கிளப்பவும் மற்ற வீரர்கள் கிளம்ப அவர்களுடன் அவனும் கிளம்பினான். வண்டிக்குள்ளிருந்து மகிழம்பூவின் வாசனை அங்கே பரவி நிறைந்தது. அந்தச் சமயம் பார்த்து வாயு பகவான் தன் வேலையைக் காட்டினார். பெருங்காற்று மிக வேகமாகப் புறப்பட்டு அந்தச் சாலையையும் மரங்களையும் மறைத்த வண்ணம் புழுதியைக் கிளப்பிக் கொண்டு போக சேவகர்கள் தலையில் கட்டி இருந்த தலைப்பாகைகள் காற்றின் வேகத்தில் அடித்துக் கொண்டு போய் விட்டன. தலைப்பாகையைப் பிடிக்க வேண்டி வீரர்கள் குதிரையில் இருந்து குதித்தனர்.

அந்தச் சமயம் பார்த்து நாற்புறமும் நெருக்கமாக அடைத்திருந்த வண்டியின் திரைச்சீலைகள் காற்றின் வேகத்தைத்ஹ் தாங்க முடியாமல் பொத்துக் கொண்டு திறந்து கொண்டு விட்டன. திரும்பிப் பார்த்த ராஜவல்லபனின் கண்களில் கூண்டு வண்டிக்குள் அமர்ந்திருந்த ஓர் இளம்பெண் தெரிந்தாள்.  மிக அழகிய அந்தப் பெண்ணின் பரந்து விரிந்திருந்த கண்கள் மட்டும் சோகம் ததும்பியதாய்க் காணப்பட்டன. காரணம் புரியாத அந்த சோகம், அதன் தாக்கம் ராஜவல்லபனிடமும் ஏற்பட்டது. திரைச்சீலைகள் திறந்து கொண்ட வேகத்தில் தலை நிமிர்ந்த அந்தப் பெண் அரைக்கண நேரம் வல்லபனைப் பார்த்திருப்பாள். அதற்குள்ளாக வீரர்கள் தலைவன் பதறிக்கொண்டு ஓடி வந்து திரைச்சீலைகளை மூடுவதற்கு ஆணையிட்டுக் கொண்டே ஒரு பக்கத் திரைச்சீலைகளை இழுத்துப் பிடித்துத் தானே நெருக்கமாக மூடவும் செய்தான்.

அப்போது அந்தப் பெண்ணானவள் தன் முகத்தில் காற்றினால் வந்து பரவிய தூசியைத் துடைப்பவள் போல் தன் கைகளைத் தூக்கி முகத்தைத் துடைக்க முற்பட அவள் கைகளில் பூட்டப்பட்டிருந்த கைவிலங்குகளை வல்லபன் கண்டு அதிர்ச்சி அடைந்தான். இத்தனை அழகிய இளம்பெண்ணின் கைகள் விலங்கால் ஏன் பூட்டப்பட்டிருக்க வேண்டும்? யார் இந்தப் பெண்! எங்கே செல்கிறாள்? இவளுக்கு விலங்கு பூட்டியவர் யார்? என்ன காரணத்தால் விலங்கு பூட்டப்பட்டிருக்கிறாள்? இவற்றை எல்லாம் வல்லபன் யோசிக்கும்போதே வீரர் தலைவன் திரைச்சீலைகளை இழுத்துக் கட்டிக் கொண்டிருந்தான். அப்போது தான் அந்தப் பெண் வண்டிக்குள் தனியாக இருக்கவில்லை என்பதும் நடுத்தர வயதுள்ள ஓர் பெண்மணி வீரர் தலைவனுக்கு உதவியாக திரைச்சீலைகளை இழுத்துக் கட்ட உதவியதையும் வல்லபன் கண்டான்.

அந்தப் பெண்ணிற்கு நாற்பது வயது இருக்கலாம். அவளும் வீரர் தலைவனுடன் சேர்ந்து திரைச்சீலைகளை இழுத்துக் கட்டி உதவி செய்தாள். ஆனாலும் காற்று அப்போதும் நிற்கவில்லை. "உய்"யென்ற சப்தத்துடன் ஓங்கி வீச ஆரம்பித்தது. ஆங்காங்கிருந்த மரங்கள் காற்றின் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு பெரும் சப்தங்களை எழுப்பின. அரசமரம் ஒன்று "விர், விர்" என சப்தித்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாகத் திரைச்சீலைகளை இழுத்துக் கட்டின வீரர் தலைவன் ஒரு பெருமூச்சுடன் தன் அங்கிகளையும் நன்கு சுருக்கிக் கட்டியவண்ணம் அங்கே நின்றிருந்த காலதத்தனையும் வல்லபனையும் பார்த்து முறைத்தான்.  பின்னர் அதே கோபத்தோடு வண்டியை மேலே ஆக்ஞை இட்டான். வண்டியும் புறப்பட்டது.  வண்டி மேட்டிலும் பள்ளத்திலும் இறங்கிச் சென்றதால் பல்லக்குக் குலுங்குவது போல் வண்டியும் குலுங்கியது.  வண்டியின் மணி ஓசை வெகு தூரத்துக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சில காட்சி வர்ணனைகள், கல்கியின் எழுத்தை நினைவுபடுத்துகின்றன.