எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, March 26, 2022

கொடவர்களுக்கு நேர்ந்த கதி! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 அங்கும் இங்குமாக அந்த மலைக்காட்டில் அலைந்து திரிந்து தேடியவர்களில் ஒருவர் கண்களில் மூத்த கொடவர் தென்பட அவர் இதோ, இங்கே! என்று கூச்சலிட்டார். உடனே சீராமதாசர் என்னும் மற்றொருவர் ஓடிப் போய்ப் பார்த்தால்! என்னவென்று சொல்வது! மேலிருந்து உருண்டு வருவது வெகு எளிது என நினைத்தாலும் அதைப் போல் சிரமமான ஒன்று இல்லை என்பது மூத்த கொடவரைப் பார்த்ததுமே புரிந்து விட்டது. சங்கு மலர்கள் பூத்திருந்த பூச்செடிகளின் நடுவே காலும், கையும் ஒடிந்து தோள் பட்டையிலிருந்தும் முழங்கால் மூட்டிலிருந்து பிரிந்து தனியாய்த் தொங்க, முகத்திலே கண், வாய், மூக்கு இருந்த இடங்களே தெரியாமல் ரத்தச் சேறாகக் காட்சி அளிக்கக் கீழே கிடந்த மூத்த கொடவரின் உயிர் எப்போவோ பிரிந்து விட்டது என்பது நன்கு தெரிந்தது. மனதில் வேதனை மூள மூத்த கொடவரின் மகனான சீராம தாசர், "அப்பா!" எனக்கூக்குரலிட்டுக் கொண்டு அவர் உடலையும் கைகளையும் தொட்டு அசைத்தார். பலனில்லை என்பது தெரிந்தது தான். ஆனாலும் பெற்ற மகன் ஆச்சே! மனசு கேட்கவில்லை.

வயிற்றின் ஆழத்திலிருந்து பெருக்கெடுத்ததொரு பெரிய கேவலோடு அவர் தன் தகப்பன் உடல் மேல் அப்படியே விழுந்தார். "அப்பா! அப்பா! அப்பா!" எனக் கதறிய வண்ணம் விழுந்து புரண்டார். எத்தனை நேரம் அழுதாரோ, துக்கம் கரையவா போகிறது! அவர் மிகுந்த துக்கத்துடன் தன்னை ஒருவாறு தேற்றிக் கொண்டு தன் மாமன் ஆன வில்லிபுத்தூர் தாசரிடம்  சென்றார். அவரோ நிலை குத்திய பார்வையுடன் ஒரே பக்கம் பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார். அவர் நிலையைக் கண்டு பயந்த சீராமதாசர் அவர் அருகே சென்று அவரிடம், "மாமா!மாமா! இங்கே பாருங்கள் மாமா! அப்பா இறந்துவிட்டாரே! பார்த்தீர்களா?" என அரற்ற வில்லிபுத்தூர் தாசரோ வாயே திறக்காமல் அமர்ந்து இருந்தார். ஏதோ சந்தேகம் மனதில் ஜனிக்க சீராமதாசர் அவரை மாமா, மாமா என அழைத்த வண்ணம் உலுக்க வில்லிபுத்தூர் தாசரின் உடல் அப்படியே கீழே விழுந்து விட்டது.

திகைத்துப் பதைத்துப் போனார் சீராமதாசர். மாமனின் கை நாடியையும் இதயத் துடிப்பையையும் சோதித்தவருக்கு மாமன் உயிருடன் இல்லை என்பது புரிய வர மாமா! எனப் பெருங்கூச்சல் இட்டார்.  பெரிய கொடவர் இறந்து கிடந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் வில்லிபுத்தூர் தாசர் இறந்திருக்கிறார்.  அதை உணர்ந்ததுமே சீராமதாசர் எல்லாமும் இழந்துவிட்டேனே! எனப் புலம்பிக் கொண்டு தன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது புரண்டார். தேற்றக் கூட ஆள் இல்லாக் காட்டு வனாந்தரம்.  சோகத்துடன் அப்படியே படுத்துக் கிடந்தார்.

மேற்சொன்ன கதையை சிங்கழகர் வாய் மூலம் கேட்ட வல்லபனுக்கும் தத்தனுக்கும் அரங்கனைக் காக்கும் வேலையில் எத்தனை பேர்  உயிரிழந்திருக்கிறார்கள் என நினைக்க நினைக்கக் கண்ணீர் பெருகியது!  அப்போது சிங்கழகருக்கும் பேச்சே எழும்பவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட அவர் இளைஞர்களைப் பார்த்து, "சற்றுப் பொறுங்கள்! மேலே சொல்கிறேன். இப்போது துக்கத்தில் எனக்குப் பேச்சு எழும்பவே இல்லை!:" என்று தழுதழுத்த குரலில் சொன்னார். அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் ஆறாகப் பெருகியது. இது எல்லாவற்றையும் உள்ளே கூடத்தில் அமர்ந்து  கேட்டுக் கொண்டிருந்த மஞ்சரியும் துக்கம் தாங்காமல் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ஓர் சிலை அமர்ந்திருப்பது போலவே காட்சி அளித்தாள் அவள். சிங்கழகர் அவளிடம், "அம்மா, மஞ்சரி, குடிக்கக் கொஞ்சம் நீர் கொண்டு வா!" என்று கேட்க இளைஞர்களும், மஞ்சரியும் மேற்கொண்டு அரங்கனைப் பற்றி அவர் என்ன சொல்லப் போகிறாரோ என எண்ணினார்கள். சிங்கழகர் தண்ணீரைக் குடித்த பின்னர் மேலும் ஆரம்பித்தார்.

2 comments:

நெல்லைத் தமிழன் said...

கதை வேகமாகப் போகிறதே... தொடர்ந்து எழுதுங்கள்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இப்போதுதான் பார்த்தேன்.
இத்தனை சோகமாகப் பலர் உயிர் பலி கொடுத்து
அரங்கனைக் காத்திருக்கிறார்கள்.
தொடர்கிறேன் மா. நலமுடன் இருங்கள்.