எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 25, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பவித்ரோத்ஸவம், பூச்சாண்டி சேவை!

ஜ்யேஷ்டாபிஷேஹம்பூச்சாண்டி சேவை பத்தி நெல்லைத் தமிழன் வாட்சப்பில் கேட்டிருந்தார். இரண்டு நாட்களாகவே கொஞ்சம் அலைச்சல், வேலை மும்முரம். ஆகவே தகவல் சேகரிக்க முடியலை. இன்று தான் தகவல் சேகரித்தேன். ஆண்டு தோறும் ஜேய்ஷ்டாபிஷேஹம், பவித்ரோத்சவம் போன்றவை நடைபெறும். இதிலே ஜ்யேஷ்டாபிஷேஹம் ஆனி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தன்று நடைபெறும் அப்போது பெரிய பெருமாளுக்கு நடைபெறும் எண்ணைக்காப்பின் போது மூலவரை மெல்லிய வஸ்திரத்தால் போர்த்தி இருப்பார்கள். சுமார் 48 நாட்கள் மூலவரின் முக தரிசனம் மட்டுமே கிடைக்கும். ஆடி மாதம்பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி மாதம் இருபத்தெட்டாம் நாள் இரண்டில் என்று 48 நாட்கள் முடிகிறதோ அதன் மறுநாள் எண்ணைக்காப்புக் களையப்பட்டு எம்பெருமாளின் பாத தரிசனம் சேவார்த்திகளுக்குக் கிட்டும். இதன் பின்னர் ஆவணி மாதம் வருவதே பவித்ரோத்ஸவம்.  எம்பெருமானுக்குச் செய்யும் அமுதுபடிகள், வஸ்திரங்கள், திருவாராதனங்கள், மந்திர உச்சாடனம் ஆகியவற்றில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.  அப்போது சாந்நித்தியம் குறையலாம்.
பூச்சாண்டி சேவை க்கான பட முடிவு!


ஆகவே மூலவர், உற்சவர் இருவரின் சாந்நித்தியம் குறையாமல் இருக்க வேண்டி அவற்றுக்குப் பிராயச்சித்தமாகப் பல உத்சவங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. மூலவரின் மேனிப் பாதுகாப்புக்காக ஜ்யேஷ்டாபிஷேஹம் எனில் மற்றவற்றுக்காகப் பவித்ரோத்ஸவம்.  ஜ்யேஷ்டாபிஷேஹத்துக்கு மறு நாள் பெரிய திருப்பாவாடை என்னும் நிகழ்வு நடைபெறும் அது போலவே  திருவாராதனம் மற்றும் மந்திர உச்சாடனங்களின் குறைவைச் சரி செய்யும் முகமாகப் பவித்ரோத்சவம் நடைபெறுகிறது.  இந்தப் பவித்ரோத்சவம் நீண்ட நேரம் நடைபெறும் ஒன்றாகும். உள்ளே ஒவ்வொரு மூர்த்திக்கும் 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு திருவாராதனம் முடிந்ததும் மூலவரான பெரிய ரங்குவுக்குத் திருமுடி முதல் திருவடி வரை பவித்ரம் சாற்றுவார்கள். வேத பாராயணத்தில் காடக பாராயணம் என்பது இடம் பெறும்.

இப்படியே மற்ற மூர்த்திகளுக்கும் பவித்ரம் சாற்றப்படும். பின்னர் மேள, தாளத்தோடு தாயார் சந்நிதிக்குப் பவித்ரம் கொண்டு செல்லப்பட்டு அங்கே உள்ள மூன்று தாயார்களுக்கும் பவித்ரம் சாற்றப்படும். அதுவரையிலும் பெரிய ரங்குவும் நம்பெருமாளும் பல பவித்திரங்களோடு சேவார்த்திகளுக்கு சேவை சாதிப்பார்கள்.  பெரிய பெருமாளுக்கு வனமாலை, அங்கோபாங்கம் முதலிய பவித்திரங்கள் சாற்றப்பட்டு சேவை சாதிப்பார். பெரிய பெருமாளின் திருமேனி முழுதும் புனிதத்தன்மையை ஏற்படுத்தும் பவித்திரம் சாற்றப்படும். இந்தப் பவித்ரத்தில் ஆங்காங்கே முடிச்சுகள் காணப்படும்.  இவை முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள் ஆகும். இந்தக் கோலத்தில் பெருமாளைப் பார்க்கையில் சிறு குழந்தைகள் விசித்திரமான உடை அணிந்தவரைப் பூச்சாண்டி என்று சொல்வதைப் போல் இருப்பதால் இதைப் பூச்சாண்டி சேவை என அழைக்கின்றனர். பெரிய பெருமாளின் திருமுடி தொடங்கி திருப்பாதம் வரையிலும் நூற்றுக்கணக்கான பவித்ரங்கள் சாற்றப்பட்டிருப்பதோடு அல்லாமல் பெரிய பெருமாளும் நம்பெருமாளும் பல வண்ணங்கள் நிறைந்த பட்டினால் ஆன பவித்ர மாலையும் சாற்றிக் கொண்டிருப்பார்கள்.

பின்னர் கும்ப ஹாரத்தி செய்வதற்கான தீபம் திருமடப்பள்ளியிலிருந்து வரும். இதைத் "தட்டி" என்பார்கள். இரண்டு தீபங்கள் கொண்டு வருவார்கள். ஒன்று அணைந்து விட்டால் என்ன செய்வது என்பதற்காக இன்னொன்று என்றாலும் அணைவதில்லை. ஒரு தீபமே பயன்பாட்டில் இருந்து வருகிறது.  பின்னர் பெரிய அவசரத் தளிகை எழுந்தருளப்படும். அதன் பின்னர் பெருமாளின் அங்கோபாங்கப் பவித்ரங்கள்  களையப்பட்டு ஆழ்வாராதிகள் சந்நிதிகளுக்குக்கொடுக்கப்பட்டு அங்கும் திருவமுது செய்யப்படும்.  அதன் பின்னர் நம்பெருமாள் பட்டுப் பவித்திரம் சாற்றிக் கொண்டு தோளுக்கினியான் பல்லக்கில் புறப்பாடு கண்டருளிப் பவித்ரோத்சவ மண்டபம் எழுந்தருளுவார். பின்னர் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையிலே எழுந்தருளி சூர்ணாபிஷேஹம் கண்டருளித் திருக்கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுவார்.  பின்னர் ரங்கநாயகி நாச்சியார் சந்நிதியில்  திருவந்திக்காப்பு முடிந்து பிரதக்ஷிணமாய் வந்தருளுவார்.  நம்பெருமாள் மண்டபம் எழுந்தருள மாட்டார். பவித்ரோத்ஸவ  மண்டபத்திலிருந்து எட்டாம் நாள் நம்பெருமாள் உள்ளே எழுந்தருளுவார். பவித்ரங்களைக் களைந்து சயன மூர்த்திக்கு சயன உபசாரம் நடைபெறும்.

ஒன்பதாம் நாள் தீர்த்தவாரி மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி நம்பெருமாள் உள்ளே எழுந்தருளுவார். அதன் பின்னர் யாகசாலையிலிருந்து திருவரங்க மாளிகையார் எனப்படும் யாகபேரர் உள்ளே எழுந்தருளுவார். இவர் நம்பெருமாள் அரங்கத்திலிருந்து இரண்டாம்முறையாக வெளியேறிய காலத்தின் பின்னாட்களில் அவருக்குப் பதிலாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இப்போதும் இவரைப் பெரிய பெருமாளின் திருவடிக்கு அருகே பார்க்கலாம்.  இத்தனையும் நடந்த பின்னர் வாதூல தேசிகரை மஹா வைபவத்தோடு திருமாளிகையிலிருந்து எழுந்தருளப் பண்ணிக் கொண்டு மூலஸ்தான வாசலில் அவருக்குப் பவித்திரம் விநியோகம் ஆகும். அதன் பின்னர் கோஷ்டி ஜனங்களுக்கும் பவித்திரம் விநியோகம் செய்யப்பட்டு வாதூல தேசிகர் பெரிய பெருமாளின் அனைத்துக் கொத்து ஜனங்களாலும் விமரிசையாக அவர்கள் துணையுடன் வழி அனுப்பி வைக்கப்படுவார்.  திருமாளிகையில் சந்தன தாம்பூல மரியாதை முடிந்ததும் புஷ்கரிணிக்கரையில் குலசேகர ஆழ்வாரால் சொல்லப்பட்ட மங்களாசாசனம் ஓதப்படும். சக்கரவர்த்திக்குப் பெரிய பெருமாள் தம்முடைய பிரஸாதமாகப் பவித்திரத்தை மேள, தாளத்துடன் அனுப்பி வைப்பார். இத்துடன் பவித்ரோத்சவம் முடிவுக்கு வரும். 

7 comments:

நெல்லைத்தமிழன் said...

எனக்கு ரொம்பப் பிடித்தது உங்க சின்சியாரிட்டிதான் கீதா சாம்பசிவம் மேடம். மேம்போக்காக நான் கேட்டதுக்கு பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் ரொம்ப விளக்கமா சொல்லியிருக்கீங்க. முழுவதும் படித்துவிட்டு எழுதுகிறேன். மிக்க நன்றி மற்றும் என் வணக்கங்கள்.

நெல்லைத்தமிழன் said...

நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது கீதா சாம்பசிவம் மேடம். பாராட்டுகள். அங்கோபாங்க சேவை இதுவா. மிக்க நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பூச்சாண்டி சேவையைப் பற்றி இப்போதுதான் முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன். அரிய பல செய்திகளை அறிந்தேன். நன்றி.

துரை செல்வராஜூ said...

பவித்ரோத்சவம் பற்றிய தகவல்களை விரிவாக அறிந்து கொண்டேன்...

பெருமாள் பயிற்றுவித்ததாகக் கொண்டு
தங்களுக்கு வணக்கங்கள் பல!..

அரங்க மாநகருளானே போற்றி.. போற்றி!..

Geetha Sambasivam said...

கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இதிலே தனித்தனியாக பதில் சொல்ல இது ஒண்ணும் என்னோட சொந்தப் பதிவு இல்லை அல்லவா? அதான் சொல்வதில்லை. ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டு முறைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு சொல்லி வருகிறேன். அதற்கு நன்றி சொல்ல வேண்டியது இந்தக் கோயில் வழிபாட்டு முறைகள்பற்றிய புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் அறநிலையத் துறை மற்றும் சில பதிப்பகங்கள்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி கீதாமா. ஸ்ரீனிவாசர் கோவிலில் இருந்து ,நம் வீட்டுக்குத் திருமஞ்சன நீரும், பவித்ரங்களும் வரும். அப்போதெல்லாம் விளக்கிச் சொல்ல ஆள் கிடையாது. இப்போது நானும் அங்கில்லை. உங்கள் பதிவுதான் பெருமாள் அனுப்பிய பிரசாதமாகப் படிக்கிறேன்.
புத்தகங்கள் சொல்லி இருந்தாலும் நீங்கள் எடுத்துப் பதிவிடுவதால் தான் எல்லோருக்க்ம் தெரிய வருகிறது.நன்றி மா.

Anuprem said...

பூச்சாண்டி சேவை பற்றி ஏற்கனவே அறிந்து இருந்தாலும் இன்னும் பல செய்திகள் இங்கு தெரிந்துக் கொண்டேன்..


அற்புதம் மா..