எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, November 17, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் துயரம்!

ஒரு பெருமூச்சுடன் தன்னை அடக்கிக் கொண்டான் குலசேகரன். அவனுக்கு உண்மை புரிந்து ஒரு பக்கம் தன் மகன் என்னும் பாசம் வந்தாலும் ஆழ் மனதின் வெறுப்பே மேலே தலை தூக்கியது. தன்னை எப்படிப் பயன்படுத்திக் கொண்டாள் கிருஷ்ணாயி என்பதை அவனால் மறக்கவே முடியவில்லை. எதுவும் பேசாமல் சத்திரத்துக்குத் திரும்பிப் படுத்தவனுக்குத் தூக்கம் வரவில்லை. திரும்பத் திரும்பக் கிருஷ்ணாயியின் மகன் முகமே அவன் நினைவில் வந்தது. அவனைப் பார்க்கும் எவருக்கும் அந்தச் சிறுவனைப் பிடித்து விடும். அவ்வளவு சுறுசுறுப்பும் துடிதுடிப்பும். ஆனால் இது என்ன முறைப்படியாகப் பிறந்த குழந்தையா? அவனைக் கிருஷ்ணாயி பயமுறுத்தி மிரட்டி ஹேமலேகாவின் உயிரைப் பலி வாங்குவதாகச் சொல்லி அல்லவோ அவனைச் சம்மதிக்க வைத்தாள். அவள் பிறந்த துளுவ நாட்டில் இது பழக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில்! அதுவும் என்னை எப்படியேனும் அடையவேண்டி அவள் செய்த சாகசங்கள்!

ஹேமலேகாவை எப்படி எல்லாம் வஞ்சித்திருக்கிறாள். அவள் அழகு, இளமை அனைத்தும் பலி கொடுக்கப்பட்டு அன்றோ இந்தக் குமாரனை அவள் பெற்றெடுத்திருக்கிறாள். அவளுக்கு மனசாட்சி என்பதே இல்லையா? இன்னொருவன் மனைவியைத் தான் தொட்டுக் கொஞ்சி, அந்த இறைவனுக்கும் கண்ணில்லாமல் போயிற்றே! நான் எவ்வளவு பெரிய பாவியாகி விட்டேன். இப்படி எல்லாம் யோசித்துத் தன்னை மறந்த நிலையில் இருந்த குலசேகரன் காதுகளில் ஹேமலேகா அழைப்பது போன்ற மயக்கம் ஏற்பட்டது. அவள் இங்கே இல்லை. அவள் அழைக்கவில்லை. ஆனாலும் அவன் மனம் அவளையே நினைத்தது. எவ்வளவு ஆதுரத்துடன் தன்னைக் கனிவு பொங்கப் பார்ப்பாள். அவள் அழகிய புன்னகை சிந்தும் முகம் அவன் கண்ணெதிரே தோன்றியது. இவ்வுலகில் ஹேமலேகாவின் முகமும் குரலும் மட்டுமே அவனுக்குள் இன்பத்தைத் தந்து கொண்டிருந்தது. ஆனால் இன்றோ!

ஹேமலேகா!ஹேமலேகா! அவளைப் பார்த்து நீண்ட நேரம் பேசித் தன் துயரங்களை எல்லாம் சொல்லிக் கிருஷ்ணாயி தன்னைப் படுத்திய பாட்டை எல்லாம் சொல்லி ஆறுதல் பெற வேண்டும் போல இருந்தது குலசேகரனுக்கு. ஆனால் அவன் விதியோ அல்லது அவன் கொண்ட லக்ஷியமோ அல்லது அவன் மேற்கொண்டிருக்கும் வேலை காரணமாகவோ எப்போது அவளைப் பார்த்தாலும் நின்று பேச முடியாமல் அவசரமாகக் கிளம்பும்படியே ஆயிற்று.
அவளுக்கும் என்னிடம் நேசம் இருந்திருக்க வேண்டும். ஆம், ஆம் அது தெரிந்ததால் தான் கிருஷ்ணாயி அவளை ராணி வாசம் செய்யச் சொல்லி இருக்கிறாள். பேசும்போது குழைவான குரலில் இனிமை பொங்கப் பேசுவாளே! பார்க்கையில் கனிவு சொட்டுமே!என் மீது எவ்வளவு அக்கறை கொண்டிருந்தாள். எனக்காக எவ்வளவெல்லாம் உதவிகள் செய்தாள். ஆலோசனைகள் கொடுத்தாள். இத்தனைக்கும் அவள் என்னைவிடப் படித்தவள். அழகானவள். தன் பாண்டித்தியத்தின் திறமையால் அரச சபைகளில் முக்கிய இடம் பெற்றவள். படிப்பில்லாத என்னிடம் அவள் கொண்டிருந்த ஈடுபாடு எவ்வளவு வலிமையானது! எப்படி அவளுக்குத் தன் மேல் இவ்வளவு ஈடுபாடு, நேசம் ஏற்பட்டது? தூக்கம் வராமல் தவித்தான் குலசேகரன்.

மறுநாள் குலசேகரன் மாறுவேடம் தரித்த ஹொய்சளக் குதிரைவீரர்களுடன் தெற்கு நோக்கிக் கிளம்பினான். அரச சபை கூடி அவனுக்கு வழியனுப்பியது. அரசர் மாபெரும் திரவியங்கள் அடங்கிய பொதியைக் குலசேகரனிடம் கொடுத்தார். அரசர் வைணவராக  இருந்ததால் அந்தக் கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் குலசேகரனுக்கும் அளிக்கப்பட்டன. பிரசாதத்தைத் தலை குனிந்து ஏற்ற குலசேகரன் நிமிரும்போது எதிரே கிருஷ்ணாயியும் அவள் மகனும் வந்து கொண்டிருந்ததை அதுவும் தன்னை நோக்கி வந்ததைக் குலசேக்ரன் பார்த்துத் திடுக்கிட்டான். மன்னரைப் பார்த்தால் அவர் புன்னகையுடன் இதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அரசகுமாரனான ராஜவர்த்தனன் தன் கையில் வைத்திருந்த பளபளக்கும் வாள் ஒன்றைப் பட்டுத் துணி ஒன்றின் மேல் வைத்து மிக மரியாதையுடன் குலசேகரனிடம் நீட்டினான். குலசேகரனுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அவன் அரசகுமாரன் என்னும் பெயரில் இருப்பதால் தலை தாழ்த்தி வணக்கம் சொல்லிவிட்டு அந்த வாளைத் தன் இரு கரங்களாலும் பெற்றுக் கொண்டான். ஒரு கணம் அவன் நெஞ்சம் விம்மியது. கண்களில் நீர்க் கோர்த்தது. அதைப் பார்த்துக் கிருஷ்ணாயியின் முகம் மலர்ந்தது. குலசேகரன் மனம் நிறைய விரக்தியோடு கிருஷ்ணாயியைப் பார்த்தான். ஆனால் அவள் கண்களில் கனிவு தெரியவே எதுவும் பேசாமல் தலையைத் தாழ்த்தி அவளையும் வணங்கிவிட்டுக் குலசேகரன் அங்கிருந்து கிளம்பினான்.

No comments: