எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 28, 2018

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் சிறைப்பட்டான்!

குலசேகரன் எதிரே வந்து கொண்டிருந்த குழுவை உற்றுக் கவனித்தான்.  இரு பல்லக்குகள் வந்தன. அவற்றோடு நூறு வீரர்கள் பல்லக்குகளுக்குத் துணையாக வந்து கொண்டிருந்தனர். வீரர்கள் அனைவரும் துருக்கர்கள் அல்ல. பாதிப்பேர் துருக்கர்களாக இருக்கலாம். மற்றவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட தமிழர், கன்னடியர் ஆகியோர். அனைவருமாகப் பல்லக்குகளுக்குப் பாதுகாவலாக வருகிறார்கள் போலும். ஆனால் வருவது யார் எனத் தெரியவில்லை. சுல்தானின் ஆட்களில் யாரோ, எவரோ வடக்கே பயணப்படுகிறார்கள் எனத் தோன்றியது குலசேகரனுக்கு. இன்னும் சிறிது நேரத்தில் இந்தத் தங்கும் மண்டபத்துக்கு வந்து அவர்களும் தங்க வேண்டும். ஏனெனில் ஏற்கெனவே இருட்டி விட்டது. இனி பயணம் செய்ய மாட்டார்கள். இங்கே தங்கி விட்டு அதிகாலையில் பயணத்தைத் தொடரலாம்.

இங்கே வந்து அவர்கள் இங்குள்ள சூழ்நிலையைத் தெரிந்து கொண்டு விட்டால் என்ன செய்வது? இங்குள்ள செய்திப் பரிமாற்றம் செய்யும் வீரர்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதையும் பார்த்தார்களானால் உடனடியாக மதுரைக்குத் தகவல் போய்விடும். பின்னர் நாம் போட்டிருக்கும் திட்டமெல்லாம் ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். அதற்குள் நிலைமையைப்புரிந்து கொண்ட மற்ற வீரர்களும் குலசேகரன் அருகே வந்தனர். அவர்களில் ஒருவன், "ஸ்வாமி! நாம் மறைந்து கொள்வதே நல்லது. தாக்கினாலும் நேரிடையாகத் தாக்குவதை விட மறைந்திருந்து தாக்குவோம்!" என்றான். மற்றவர்களும் அதை ஆமோதிக்கக் குலசேகரன் கடைசியில் தாங்கள் அதிகம் பேர் இல்லை என்பதால் நேருக்கு நேர் மோதினால் தங்கள் பக்கமே அதிகம் பாதிப்பு ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டான். ஆகவே மற்ற வீரர்களிடம் மறைந்து தாக்குவதற்கு ஒத்துக் கொண்டான். மேலும் குதிரைகளை இங்கேயே விட்டு வைத்தால் அவர்களுக்குத் தெரிந்து விடும் என்பதால் அவற்றைப் பின்னால் கட்டிவிட்டு மறைந்து கொள்ளுமாறு கூறினான். குலசேகரன் மட்டும் அங்கேயே தங்கி நடப்பனவற்றைப் பார்த்து சமயத்துக்கு ஏற்றாற்போல் எச்சரிக்கைக் குரல் கொடுத்ததும் தாக்க ஆரம்பிக்கலாம் என்றும் கூறினான்.

அதன்படி அனைவருமாகச் சேர்ந்து இறந்த வீரர்களின் உடல்களைக் கிணற்றில் தள்ளினார்கள். சுற்றிலும் காணப்பட்ட உயரமான மரங்கள் மீது சிலரும், தங்கும் மண்டபத்தின் பரண், கூரை போன்றவற்றில் சிலரும் ஏறி மறைந்து கொண்டனர். குதிரைக்கொட்டடியில் சிலர் ஆயத்தமான நிலையில் மறைந்து கொண்டனர். குலசேகரன் மட்டும் ஓர் வழிப்போக்கன் போல் அங்கேயே நின்றிருந்தான். மெல்ல மெல்லக் கூட்டம் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது. பல்லக்குகள் மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டதும் அதிலிருந்த பெண்கள் இறங்கி நேரே மண்டபத்தினுள் நுழைந்து கொண்டார்கள். மற்றவர்கள் அங்கிருந்த மண்பானைகளின் நீரை எடுத்து தாகசாந்தி செய்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அந்த கோஷ்டி வீரர்களின் தலைவனாகக் காணப்பட்டவன் அங்கே சுல்தானிய வீரர்களின் உடையில் இருந்த குலசேகரனிடம் போய்ச் சில வார்த்தைகள் பேசினான். பின்னர் மண்டபத்திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டு இளைப்பாற ஆரம்பித்தான்.

அனைவருமே ஆயுதங்களை எடுத்துவிட்டு இளைப்பாறுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட குலசேகரன் இதுதான் சரியான தருணம் என நினைத்து, "ஹோ! ஹோ!" என்று கூக்குரலிட்டான். ஒளிந்திருந்த வீரர்கள் அனைவரும் ஓடோடி வந்து வீராவேசமாய் கோஷங்களை முழக்கிக் கொண்டு எதிரிகள் மேல் பாய்ந்தார்கள். சட் சட்டென்று சுல்தானிய வீரர்கள் சிலர் கீழே விழுந்து மடிந்தனர். முதலில் திகைத்த சுல்தானிய வீரர்கள் சடுதியில் நிலைமையைப் புரிந்து கொண்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தாங்களும் தாக்க ஆரம்பித்தனர்.  வாள்களும், கத்திகளும் ஒன்றோடொன்று உராயும் சப்தம் பலமாகக் கேட்டது. பயங்கரமான யுத்தம் நடந்தது.  சுல்தானிய வீரர்கள் வெறியுடன் தாக்கினார்கள். ஆகவே ஆரம்பத்தில் சுல்தானிய வீரர்கள் பலர் இறந்தாலும் யுத்தம் முடிவடையும்போது முற்றிலும் நிலைமை மாறி விட்டது. ஹொய்சள வீரர்கள் பனிரண்டு பேர் இறந்துவிட மீதி எட்டுப்பேரையும் குலசேகரனோடு சேர்த்து சுல்தானிய வீரர்கள் சிறைப்பிடித்தார்கள். அவர்கள் கையையும் காலையும் கட்டிப்போட்டு ஓர் அறையில் அடைத்தனர். அவர்களைக் காலையில் கண்ணனூர் அரண்மனையில் தளபதிக்கு முன்னால் நிறுத்தித் தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் நடந்தது வேறே!

அந்தத் தங்குமிடத்தில் இருந்து கண்ணனூர் நோக்கிப் பயணப்பட்ட அந்தக் குழுவில் சுல்தானிய ராணி ஒருத்தியும் அவளுக்குச் சேடிகளான மூவரும் பயணித்து வந்தார்கள். அவர்களுக்கு யாரோ எதிரிகள் தாக்கியதும் சுல்தானின் வீரர்கள் அவர்களை முறியடித்துச் சிறைப்படுத்தியது வரை தான் தெரியும். மறுநாள் பயணம் மேலே தொடர்ந்தது. அன்று மாலைக்குள்ளாக அவர்கள் கடந்த இரண்டு தங்குமிடங்களிலும் செய்திப் பரிமாற்றம் செய்யும் வீரர்கள் இறந்து கிடப்பதைக்கண்டனர் சுல்தானிய வீரர்கள். இத்தகைய கொடிய செயலைச் செய்தது குலசேகரனும் அவன் தலைமையில் வந்த வீரர்களும் தான் என்பதைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு வெகு நேரம் ஆகவில்லை. ஆகவே சுல்தானிய வீரர்களின் தலைவனுக்குக் கோபம் பொங்கி வந்தது. ஆத்திரப்பட்ட அவன் சிறைப்பிடித்த வீரர்களைக் கீழே தள்ளி மண்ணில் புரட்டித் தள்ளி அவர்களைச் சவுக்குகள் அல்லது விளாறுகளால் அடித்துத் துன்புறுத்தும்படி ஆணையிட்டான்.

அவ்வாறே அந்த வீரர்கள் குலசேகரனையும் எஞ்சி இருந்த ஹொய்சள வீரர்களையும் கீழே தள்ளிப் புரட்டிப் போட்டு விட்டு விளாறுகளால் கண்மண் தெரியாதபடி அடித்து விளாசினார்கள். வெகு விரைவில் அவர்கள் அனைவரும் குற்றுயிரும் குலை உயிருமாக ஆனார்கள். அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீரோ, உண்ண உணவோ கொடுக்கப்படவில்லை. அப்படியே விழுந்து கிடந்தார்கள். மறுநாள் காலையில் அவர்களை மீண்டும் குதிரைகளில் தூக்கிப் போட்டுக் கட்டி விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அன்று இருட்டும் நேரம் ஆனபோது அவர்கள் காவிரிக்கரையை அடந்திருந்தனர். அன்றிரவை அங்கே கழிக்க எண்ணம் கொண்டனர். அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த தங்குமிடமும் நல்ல விஸ்தாரமாகக் காணப்பட்டது. அங்கே ஓர் அறைக்குள் குலசேகரனையும் மற்ற வீரர்களையும் அடைத்தார்கள். அந்த வீரர்கள் அனைவருக்குமே நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. புலம்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே குலசேகரன் குரல் மட்டும், "ஹேமலேகா! ஹேமலேகா!" என்று புலம்பிக் கொண்டிருந்தது வெளியே இருந்தவர்களுக்குக் கேட்டது. 

No comments: