எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, June 12, 2019

சத்திய மங்கலத்தில் வாசந்திகா தன் மகனுடன்!

இப்போது சொல்லப்படப் போகும் நிகழ்வுகளில் சரித்திர பூர்வமான ஆதாரமான நிகழ்வுகள் அனைத்தையும் கம்பணன் மனைவி தானே நேரில் பார்த்து எழுதியவை ஆகும்! மதுரா விஜயம் புத்தகம் முன்னர் இணையத்தில் காணக் கிடைத்தது. இப்போது கிடைக்கவில்லை. ஆகவே கொஞ்சம் கொஞ்சம் தெரிந்தவற்றை வைத்து மட்டுமே எழுத வேண்டும். கோயிலொழுகுவின் ஆடியோக்களும் இப்போது தடை செய்திருக்கின்றனர் போலும்.புத்தகம் மட்டும் விற்பனைக்கு என வருகிறது. ஶ்ரீரங்கம் பற்றி எழுதியவர்கள் கொடுக்கும் தகவல்கள், ஶ்ரீவேணுகோபாலன் எழுதியவை ஆகியவற்றின் அடிப்படையிலேயே மேற்கொண்டு இந்தச் சரித்திரத்தை நகர்த்தியாக வேண்டும்.

கடைசியாக அரங்கனை மேல்கோட்டைக்கு அனுப்பி விட்டு அங்கேயே அவனை விட்டு விட்டு வந்தோம். அதன் பின்னர் அரங்கன் என்ன ஆனான், அவன் மீண்டும் அரங்கமாநகருக்கு வந்தது எவ்வாறு என்பதையே இனி பார்க்கப் போகிறோம். கடைசியாகப் பார்த்த வரலாற்றிலும் வாசந்திகா என்னும் நாட்டியப் பெண் குலசேகரனைக் காப்பாற்றிப் பிழைக்க வைக்கச் செய்த முயற்சிகளையும், அவனுக்காக மேல்கோட்டையில் இருந்து அரங்க விக்ரஹத்தைத் தூக்கி வந்ததையும் பார்த்தோம். அந்த அரங்கன் சாட்சியாக வாசந்திகாவுடைய விருப்பத்தின் பேரில் குலசேகரன் அவளைக் காந்தர்வ விவாஹம் செய்து கொண்டதாகவும் பார்த்திருந்தோம். அந்த விவாஹம் முடிந்ததும் ஒரு வாரமே இருந்த குலசேகரன் அரங்கன் திருவடிகளைச் சரணம் அடைந்ததையும் பார்த்தோம். அந்த ஒருவாரத்தில் வாசந்திகாவின் இடைவிடாத விருப்பத்தின் பேரில் குலசேகரன் அவளுக்குள் தன்னுடைய அடையாளமாக ஓர் கருவைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தான். அந்தக் கரு ஓர் ஆண் மகன்.

ஆம், வாசந்திகா தன்னுடைய காந்தர்வ விவாஹத்தின் மூலம் குலசேகரன் வழியாக ஓர் பிள்ளையைப் பெற்று எடுத்து விட்டாள். அதன் பின்னர் வருடங்கல் 20 கடந்து விட்டன. விஜயநகர சாம்ராஜ்யம் தலை தூக்க ஆரம்பித்திருந்தது. குலசேகரன் வாசந்திகாவுக்குக் கொடுத்த பிள்ளைக்குப் பிராயம் 19 ஆகி இருந்தது. நல்ல வளர்ந்த வாட்டசாட்டமான வாலிபன் ஆன அவன் பார்க்கவும் குலசேகரன் போலவே இருந்தான். குலசேகரனைப் பறி கொடுத்த அதே சத்தியமங்கலத்திலேயே தொடர்ந்து தன் வாழ்க்கையை நடத்தி வந்திருந்தாள் வாசந்திகா! ஐம்பதுக்கும் மேல் இப்போது பிராயம் உள்ளவளாக இருந்த போதிலும் நடனப் பயிற்சி காரணமாக இன்னமும் கட்டான உடலுடன் 40 பிராயம் ஆனவளைப் போலவே காட்சி அளித்தாள். குலசேகரன் உயிர் பிரிந்ததில் இருந்து அவனைத் தவிர வேறு எவர் நினைவும் இல்லாமல் வாழ்ந்து வந்த வாசந்திகா தன் மகனையும் குலசேகரனின் கனவை நிறைவேற்றும்படியாகச் சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்திருந்தாள். மகனும் தாயின் உணர்வையும் தந்தை விட்டுச் சென்ற பெரியதொரு லட்சியத்தை முடிக்கும் ஆவலுடனும் இருந்தான்.

அப்போது 1360 ஆம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது. அது ஓர் ஐப்பசி மாதத்து மழைக்காலத்தின் இளங்காலை நேரம். காலையிலிருந்து விடாமல் தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. விடிந்தும் விடியாமலும் இருந்த பொழுது. கொங்கு நாட்டுச் சத்தியமங்கலத்தில் ஓர் வீட்டில் இந்த அதிகாலையிலேயே ஓர் இளைஞன் இருபது வயதுக்குள் இருக்கும். பயணத்துக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தான். அவன் தாயைப் போல் காணப்படும் ஓர் அம்மாள் அவனைப் பயணம் செய்யத் தயாராக வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். அந்த இளைஞன் தான் குலசேகரன் மகன். வல்லபன் என்னும் பெயரிட்டு அவனை வளர்த்து வந்திருந்தாள் வாசந்திகா. அந்தப் பெண்மணி வாசந்திகாவேதான். அவள் இயல்பான நடையாக இருந்தாலும் கூட அவள் நடனக்கலையில் பெற்றிருந்த தேர்ச்சி காரணமாக அவள் ஒவ்வொரு அசைவுகளிலும் ஓர் நளினம் காணப்பட்டது.

தன் கைகளில் ஓர் வெள்ளி ரட்சையை வைத்திருந்த அவள் அதை இறைவன் பாதத்தில் வைத்துவிட்டுக் கொண்டு வந்தாள். தன் மகனை அழைத்து அதைக் கட்டிக் கொள்ளச் செய்தாள். அவன் புஜத்தில் அந்த ரட்சையைக் கட்டிவிட்டுப் பின்னர் கண்ணீர் பெருக்கினாள் வாசந்திகா. மகனைப் பார்த்து, "வல்லபா! என் ஆசைகளைப் புரிந்து கொண்டாய் அல்லவா? அவற்றை நிறைவேற்றித் தருவாயா?" என்று கேட்க அவளைப் பார்த்து முறுவலித்த வல்லபன் அவ்வாறே செய்வதாக உறுதி கூறினான். அவனுடைய சிரிக்கும் கண்களிலும் உதடுகளின் சுழிப்பிலும் குலசேகரனையே கண்டாள் வாசந்திகா/  மனதுக்குள் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் குலசேகரன் மறைவு தந்த துக்கம் அவளை விட்டு இன்னமும் அகலவில்லை. மகனை உச்சி முகர்ந்துக் குங்குமம் இட்டு திருஷ்டியும் கழித்தாள்.

பிறகு மகனைப் பார்த்துக் கொண்டே அவன் கைகளைத் தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டாள். "வல்லபா! உனக்குப் பல முறை சொல்லிவிட்டேன். உன் தந்தையின் முடிவுறாக் கனவுகளை உன் மூலம் நிறைவேற்ற வேண்டும்! உன்னை அதற்காகவே நான் பெற்றெடுத்திருக்கிறேன். உன் தந்தை மரணப் படுக்கையில் தான் என்னை மணந்து கொண்டார் என உன்னிடம் பல முறை சொல்லி இருக்கிறேன். தன்னால் செய்ய முடியாத தன் லட்சியக் காரியத்தைத் தன் மகன் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்னும் தாளா ஆவல் காரணமாகவே உன் தந்தை என்னை மணந்து கொண்டார். உன்னை எனக்கும் அளித்தார். "

"மகனே! உன் தந்தையை நான் என் இளமை வாய்ந்த நாட்களிலேயே திருவரங்க மாநகரில் ஓர் சுறுசுறுப்பான கடமை தவறாத போர் வீரராகப் பார்த்திருக்கிறேன். அரங்கமாநகரின் பாதுகாப்பும், அரங்கனின் பாதுகாப்புமே அவர் லட்சியமாக இருந்தது. அதற்கு பங்கம் ஏற்பட்டு அரங்கன் திருவரங்கத்திலிருந்து கிளம்பி அங்கே, இங்கே சுற்றிவிட்டு இப்போது மேல்கோட்டையில் வந்து அங்கிருந்தும் கிளம்பி விட்டான் எனத் தெரிய வருகிறது. அரங்கனைத் திரும்பி அரங்கமாநகருக்குள் கொண்டு சேர்க்க வேண்டும். மறுபடி அவனுக்கு எல்லாவிதமான வழிபாடுகளும் முறை தவறாமல் நடைபெற வேண்டும். இதுவே உன் தந்தையின் லட்சியம். இதற்காகவே அவர் வாழ்ந்தார்! வல்லபா! நானும் உன்னை இந்த லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியே வளர்த்து வந்திருக்கிறேன். உன் தந்தையின் கனவு தான் என் கனவும் கூட! இதில் நான் உன்னைத் தான் நம்பி இருக்கிறேன். இந்தக் கனவு நிறைவேற வேண்டும் எனில் நீ எனக்கு ஓர் சத்தியம் செய்து தர வேண்டும்!" என்று சொல்லி நிறுத்தினாள் வாசந்திகா!

5 comments:

Padma said...

So touching. No words

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

கோயிலொழுகு தடைக்கு என்ன காரணமோ?

Nanjil Siva said...

அருமை ..அருமை.. தொடருங்கள் ..தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

நன்றி பத்மா!

முனைவர் ஐயா, புத்தகம் விற்பனை தடைப்படும். அதோடு அவர்களிடம் அனுமதி பெற வேண்டும். மூன்று வருடங்கள் முன்னர் ஆடியோ காசெட்டாக சொற்பொழிவாகக் கிடைத்தது. இப்போக் கிடைப்பதில்லை.

Geetha Sambasivam said...

நன்றி ஜட்ஜ்மென்ட் சிவா.