எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, May 10, 2021

மஞ்சரியின் கலக்கம்! ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 வல்லபனைத் தேடிக் கொண்டு சத்திரத்தை நோக்கி நடந்தாலும் மஞ்சரிக்குத் தன்னை யாரோ பின் தொடருவதாகவே தோன்றியது. இருந்தாலும் அங்கும் இங்குமாகச் சிறிது சுற்றி விட்டுச் சந்துகளுக்குள் புகுந்து சத்திரத்தை அடைந்தாள். கூடத்துக்குள் நுழைந்தாளோ இல்லையோ! யாரோ அவள் கைகளைப் பிடித்து இழுத்தார்கள். திடுக்கிட்ட மஞ்சரி திகைத்துத் திரும்பிப் பார்த்தால் ஏற்கெனவே அறிமுகம் ஆன சேவகர்களில் ஒருவன். சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். திகைத்த மஞ்சரி நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டாள். அவனைப்பார்த்துத் தன்னைத் தொடக் கூடாது எனவும் தொட்டால் சம்புவராயரிடம் புகார் கொடுப்பேன் என்றும் எச்சரித்தாள். சம்புவராயர் பெயரைக் கேட்ட அந்த சேவகன் கொஞ்சம் தயங்கினான். பின்னர் இந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்குப் பயப்படுவதாவது என்று தோன்றியோ என்னமோ அவளைப் பார்த்து, "ஆமாம், ஆமாம்! உனக்குத் தான் அவரை நன்றாகத் தெரியுமே!" என்று கேலி செய்தான்.

ஆனால் மஞ்சரியோ அசராமல், "ஆமாம்! நானும் என் தாத்தாவும் அவரைப் பார்க்கவே இங்கே வந்தோம். போகப்போகிறோம் அவரைப் பார்த்துப் பேச!" என்றாள். சேவகன் திகைப்புடன் அவளைப் பார்த்து அவள் சத்திரத்துக்கு வந்த காரணம் என்னவெனக் கேட்க சத்திரத்துப் பாட்டியைப் பார்த்துப் பேச வந்ததாய் மஞ்சரி பொய் சொன்னாள்.  சேவகனோ இன்னமும் திகைத்துப் பாட்டி ஒருத்தி இங்கே எங்கே வந்தாள் என்ற யோசனையில் ஆழ்ந்தான். அதை அவளிடம் கேட்கவும் கேட்டான். அவளோ அவன் சொன்னதையே அவனிடம் திருப்பிக் கேட்டுவிட்டு அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துவிட்டுச்சத்திரத்தை விட்டு வெளியேறி வீதிகளில் நடக்க ஆரம்பித்தாள். மஞ்சரி மருத்துவசாலைக்கூ வரும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தாள்.

தாத்தா தன்னிடம் மற்றவர்களுக்கு அதிலும் முகம் தெரியாதவர்களுக்கு எல்லாம் உதவி செய்ய வேண்டாம். நமக்கே ஆபத்து வரும் என்று சொன்னதை நினைத்துப் பார்த்து அதே போல் இப்போது ஆகிவிட்டதே என நினைத்துக் கொண்டாள். பின்னர் அவள் மனம் வல்லபன் எங்கே போயிருப்பான்? தான் தத்தனுக்கு என்ன பதில் சொல்லுவது என்றெல்லாம் யோசனையில் ஆழ்ந்தது. மெதுவாக நடந்து மருத்துவசாலைக்கு வந்து படி ஏறினாளோ இல்லையோ குதிரைகளில் ஐந்து நபர்கள் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு சத்தம் போட ஆரம்பித்தார்கள். "சம்புவராயரிடம் புகார் செய்வேன் என்றாயாமே! உனக்கு அவ்வளவு தைரியமா? சம்புவராயரிடம் அவ்வளவு செல்வாக்கா?" என்றெல்லாம் கேட்டுக் கொண்டு அவள் சத்திரத்தில் பார்த்த அந்தச் சேவகன் குதிரையிலிருந்து குதித்தான்.

மஞ்சரி ஆத்திரத்துடன் திரும்பினாள். "சொல்லமாட்டேன் என்றெல்லாம் நினைக்காதே! நிச்சயம் சொல்லுவேன்." என்றாள் படபடப்புடன். அதற்கு அவர்கள் இன்னமும் கேலியாக, "சொல்லு!சொல்லு! நிறையப் புகார்களைக் கொடு! நாங்கள் அந்தச் செத்துப் போனவன் பிழைத்துவிட்டான் எனக் கேள்விப் பட்டோம். அதைப் பார்க்கிறோம்!" என்று சொல்லிக் கொண்டே வைத்தியசாலைக்குள் நுழைந்தார்கள்.  மஞ்சரிக்கு இவர்களுக்கு எப்படித் தெரியும் என்னும் எண்ணம் மனதில் வந்தது. இந்த இருவரையும் இந்தச் சேவகர்கள் எதற்காக இப்படித் தீவிரமாகத் தேடுகிறார்கள். உண்மையில் குற்றம் செய்தவர்கள் யார்? அந்த இளைஞர்களா? அல்லது இவர்களா?  என்றெல்லாம் குழம்பிப் போனாலும் உள்ளூர தத்தனைக் காப்பாற்றும்படி அரங்கனை வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.  அந்த மருத்துவசாலை முழுவதும் போய் அவர்கள் தேடினார்கள். உரத்த குரலில் சப்தம் போட்டுக் கொண்டு அவர்கள் தேடியது மற்ற நோயாளிகளுக்குச் சிரமங்களை உண்டாக்கிற்று. 

உக்கிராண அறையைப் பார்த்துத் தேடிவிட்டு வெளியே வந்தவர்களைப் பார்த்து மஞ்சரி, "ஐயா, சேவகர்களே!" என்று மிக மரியாதையாக அழைத்தாள். அவர்கள் திரும்பவும் அவர்களைப் பார்த்து, "ஐயாமார்களே! இங்கெல்லாம் நீங்கள் அழைப்பில்லாமலோ, உள்ளே நுழைய உத்தரவில்லாமலோ செல்லலாமோ? உள்ளே பல்வேறுவிதமான மூலிகைகள், மருந்துகள் இருக்கின்றன. சில மிகவும் விஷத்தன்மை வாய்ந்தவை. அவற்றை நீங்கள் காரணமில்லாமல் தொட்டு வைத்தால் உங்களைத் தான் பாதிக்கும். அதோடு துர் தேவதைகளை மந்திர சக்தியால் கட்டிக் குடங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். நீங்கள் பாட்டுக்குக் குடங்களைத் திறந்து பார்த்தால் என்ன ஆகும்?" என்றாள். ஆனால் அந்த சேவகர்களோ கொஞ்சம் தயங்கினாலும் எதற்கும் கவலைப்படாமல் உள்ளேயும் சென்று தேடிவிட்டே திரும்பினார்கள்.  மஞ்சரி திகிலோடு வெளியேயே காத்திருந்தாள். நீண்ட நேரம் தேடினார்கள் போல! போனவர்கள் திரும்பவில்லை! என்ன ஆயிற்றோ என்னும் கவலையோடு மஞ்சரி உள்ளே இருந்து அவர்கள் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

No comments: