எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 19, 2021

மஞ்சரியின் கதை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 வல்லபன் தானும் அந்தப் பெண்ணின் மாமா மூலம் அரங்கன் குறித்த தகவல்கள் கிடைக்கும் என நம்பியே ஒத்துக் கொண்டதாகவும், மேலும் அவர்கள் இருவரும் அந்தச் சேவகர்களின் கொடுமையிலிருந்து தப்பிக்கவும் இந்தப் பெண் உதவியதாலும் அவளைக் கூட அழைத்துவரச் சம்மதித்ததாகச் சொன்னான். அதை தத்தனும் ஒத்துக் கொண்டான். மேலும் சொன்னான். அந்தச் சேவகர்கள் இவர்களைத் தேடிக் கொண்டு வைத்தியர் வீட்டில் சோதனை போட்டபோது தான் மட்டும் புழக்கடைக் கிணற்றுக்குள் இறங்கி ஒளியவில்லை எனில் அவர்களிடம் மாட்டிக் கொண்டிருப்போம் எனவும் உயிருடன் தப்பி இருக்க முடியுமா என்பதே சந்தேகம் எனவும் சொன்னான். அதுவும் அந்த ஆழமான கிணற்றின் கடைசி உறையில் தான் நின்று கொண்டிருந்ததாகவும் மயக்கம், மயக்கமாய் வந்ததாகவும் சமாளித்துக் கொண்டு இருந்ததாயும் சொன்னான். 

அப்போது வல்லபன் தத்தன் ஜன்னி கண்டு நினைவின்றிப் படுத்திருந்த காலத்தில் அவனை அடையாளம் கண்டு கொண்ட சேவகன் ஒருவன் அவனருகே வருவதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண் மஞ்சரி தத்தன் இறந்துவிட்டான் எனப் பொய் சொல்லி அவனருகில் அந்தச் சேவகன் வராதவாறு தடுத்ததோடு அல்லாமல் குச்சிலில் தத்தனை மறைத்து வைத்துப் பணிவிடைகள் செய்து மருந்துகளை நேரம் தவறாமல் கொடுத்து அவனைக் காப்பாற்றியதையும் சொன்னான். தத்தன் அதற்கு இதெல்லாம் ஓர் உதவியா எனச் சிரிக்க, வல்லபனோ இந்த உதவிக்கு மட்டுமின்றி அந்தப் பெண் வந்து பணிவிடைகள் செய்ததற்கும் தத்தன் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கவேண்டும் எனவும் இல்லை எனில் இதெல்லாம் நடந்திருக்காது என்றும் சொன்னான்.  தத்தனோ மிகத் தீவிரமான மனோநிலையில் இவை எல்லாம் நடந்ததற்குத் தன் விதி தான் காரணம் எனவும், தான் பிழைக்கவேண்டும் என்பது விதி என்றும் அதனால் தான் தான் பிழைத்ததாகவும் சொன்னான்.

வல்லபனுக்கு தத்தன் பேச்சுப் பிடிக்காததால் மௌனமானான். அதைக் கண்ட தத்தன் அவனைப் பேச்சுக்கு இழுக்க நினைத்துத் தான் அரங்கனைப் பற்றிய தகவல்களைத் தேடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதாய்ச் சொன்னான். வல்லபன் தனக்கும் அதே குறிக்கோள் தான் என்றான்.  மேலும் அதனால் தான் அந்தப் பெண் நம்மோடு வந்தால் அவள் மாமாவைப் பார்த்துத் தகவல் அறிய வசதியாக இருக்கும் என நினைத்து அவளையும் கூட அழைத்து வந்ததாகவும் வல்லபன் கூறினான். மேலும் வல்லபன் அவள் கூட வரும் அவள் பாட்டனார் அந்தப் பெண்ணை அவள் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என எண்ணுவதாகவும் அதற்குத் தான் உதவியாக இருக்கப் போவதாகவும் கூறினான்.  அப்போது பக்கத்து அறையில் இருந்து மஞ்சரி ஓடி வந்து இவர்கள் இருவரையும் அழைத்தாள். பெரியவர் எப்படியோ பார்ப்பதாகவும் தனக்குப் பயமாக இருப்பதால் அவர்கள் இருவரும் துணைக்கு வரவேண்டும் எனவும் அழைத்தாள்.

இருவரும் ஓடோடிச் சென்று பார்த்தால் கிழவர் உடல் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. கண்கள் ஒரு மாதிரியாகச் சொருகிக் கொண்டிருந்தன. பார்க்கவே பயமாக இருந்தது. தத்தன் அவர் அருகே போய் உட்கார்ந்து கொண்டான். சற்று நேரத்தில் அவர் மயக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தார். தத்தனை அடையாளம் கண்டு கொண்டார். மஞ்சரியிடம் குடிக்க வெந்நீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு அவர் தத்தனிடம் பேசலானார்.  தான் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வடக்கே காஞ்சியை நோக்கிச் செல்வதாகவும் இவள் தன்னுடைய பேத்தி என்று, சொன்னவர் வழியில் தனக்கு ஜுரம் கண்டதால் பூங்குளத்தில் வைத்தியரிடம் தங்கிச் சிகிச்சை பெற்றதையும் சொன்னார். ஆனாலும் தனக்கு வயது ஆகிவிட்டதால் இனித் தான் பிழைக்கப் போவதில்லை என்று நம்புவதாகவும் சொன்னார். அதற்கு முன்னர் அந்தப் பெண்ணிற்குத் தான் செய்ய வேண்டிய கடமை ஒன்றிருப்பதாகவும் அதைத் தான் இப்போது தத்தனிடம் கூறப்போவதாகவும் சொல்லிவிட்டு அவனை அருகே அழைத்துக் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

அந்தப் பெண் மஞ்சரி அவள் பெற்றோர்களுக்கு ஒரே பெண் என்றும் குழந்தைக்குப் பிரார்த்தனையை நிறைவேற்றத் திருப்பதிக்குக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு திருப்பதி செல்ல நினைத்தவர்கள் குழந்தை உடல் நலம் இல்லாமல் இருந்ததால் ஊரிலேயே விட்டு விட்டுக் கணவன், மனைவி இருவரும் மட்டும் சென்றதாகவும் அவர்கள் சென்ற வழியில் தான் அப்போது கண்ணனூர்ப் போர் நடந்ததாகவும் தெரிவித்தார். கண்ணனூர்ப் போரில் வெற்றி பெற்ற துருக்கியர்கள் அந்தக் கொண்டாட்டத்தில் அக்கம்பக்கம் ஊர்களை எல்லாம் சூறையாடிப் பெண்களை பலவந்தம் செய்து என்று பல அக்கிரமங்கள் செய்ததாகவும், அவர்கள் கைகளில் மாட்டிக் கொண்ட இந்தத் தம்பதியர் அவர்களால் கொல்லப்பட்டதையும் கூறினார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அதைத் தெரிவிக்கவில்லை என்றும் பெற்றோர் வந்துவிடுவார்கள் என்றே சொன்னதாகவும் சொன்னார்.  பெற்றோர்களைப் பார்க்க வேண்டும் என்ற பெண்ணிடம் காஞ்சியில் மாமன் வீட்டில் இருப்பதாகப் பொய் சொன்னதாகவும் நாட்டில் நடக்கும் கலவரங்களால் இப்போது போக முடியாது என்றும் நாட்களைக் கடத்தியதாகவும் மேலும், மேலும் அவள் வற்புறுத்தல் தாங்காமல் தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகச் சொன்னார்.  இதைச் சொல்லும்போதே அவருக்குப் பலத்த இருமல் வரப் பேசமுடியாமல் தவித்தார். விடாமல் நீடித்த இருமல் அவர் உயிரை வாங்கிக் கொண்ட பின்னரே நின்றது.

**************************************************

திருநாராயணபுரம், மஹான் வேதாந்த தேசிகரின் வீடு. காலை வேளை. பட்சிகளின் விதம் விதமான கூவல்கள் அந்த இடத்தையே ஒளிரச் செய்து கொண்டிருந்தது. வேதாந்த தேசிகரைப் பார்க்க கோபண்ணா வந்திருந்தார். அவரை நமஸ்கரித்துத் தான் திருப்பதி யாத்திரை மேற்கொண்டிருப்பதாகவும் ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அவரது ஆசிகளைப் பெற்றுக் கொண்டவர் தனக்கு இன்னொரு ஆசையும் உண்டென்றும் அது தான் அரங்கனைத் தேடுவது என்றும் அதற்கும் தேசிகரின் ஆசிகள் தேவை என்றும் சொன்னார். அரங்கன் அருள் இருந்தால் எல்லாம் நல்லபடி நடந்து நன்மையாகவே முடியும் என ஆசிகளைத் தந்த தேசிகர் "தயா சதகம்" என்னும் நூலை இயற்றிப் பாட ஆரம்பித்தார்.

No comments: