எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, May 16, 2021

நண்பர்களுக்குள் தர்க்கம்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 எதிர் வீட்டில் காணப்பட்ட அந்த அழகி தன்னைக் கவனிக்கவில்லை என்பதில் வல்லபனுக்கு வருத்தம் தான். மனது வேதனைப் பட்டது. அவன் மச்சிலில் புகுந்து ஓய்வு எடுக்கும்போதெல்லாம் அந்த தேவதாசிப் பெண்மணி சுகிர்த ரத்னா வந்து பார்த்து வல்லபனை விசாரித்துச் சென்றாள். அந்தச் சேவகர்கள் ஊரில் எல்லா வீடுகளிலும் நுழைந்து புகுந்து சோதனைகள் போட்டுத் தேடுவதையும் அட்டகாசம் செய்வதையும் சொல்லி வருந்தினாள்.  இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் தங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்கின்றனர் என்றும் வருந்தினாள். நாடு உண்மையிலேயே சீரழிந்து விட்டதாகவும் நல்ல நடவடிக்கைகள், நல்லெண்ணெங்கள் மறைந்து வருவதாகவும் போகப் போக என்னாகுமோ என்னும் கவலை ஏற்படுவதாகும் சொன்னாள். அவள் சொன்னது சற்றும் மிகையில்லை என்பதைப் போல் அந்த ஊரிலே அனைவருக்கும் மனதில் கலக்கம் ஒன்று வந்துவிட்டது. சேவகர்கள் அனைவரும் அந்த அளவுக்கு ஊர் மக்களைப் படுத்தி எடுத்தார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்குமே இதன் காரணம் புலப்படவில்லை.

அந்தச் சேவகர்கள் சம்புவராயரின் சேவகர்கள் அல்ல என்றும் யாரோ கொள்ளைக்காரர்கள் என்றும் சிலர் சொல்ல இன்னும் சிலர் யாரோ உயர்ந்த குடியில் பிறந்தவர்களை இவர்கள் கடத்திக்கொண்டு செல்வதாகவும் இவர்கள் கை தேர்ந்த கடத்தல்காரர்கள் என்றும் உறுதியாகச் சொன்னார்கள். இதைப் பற்றியே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்த ஊர் மக்களுக்கு அன்றிரவே அவர்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து கொண்டு போய்விட்ட செய்தி மறுநாள் கிடைத்ததும் தான் நிம்மதி ஆயிற்று. மழைக்காலம் இன்னமும் விடாததால் இரண்டு நாட்கள் வெறித்திருந்த வானம் அன்று மோடம் போட்டு மழையும் பெய்தது. அந்த ஊரில் இருந்த பெரிய ஏரி நிரம்பி வழிந்தது. வடிகால்கள் வழியே நீர் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. ஏரிக்கரைக்குச் சற்றே தள்ளி ஓர் மேடான இடத்தில் ஓர் மண்டபம் காணப்பட்டது.  பதினாறு தூண்களுடன் பதினாறுகால் மண்டபம் என்றும் அழைக்கப்பட்ட அது அந்த வழியாகச் செல்லும் பயணிகள் தங்கி இளைப்பாறிச் செல்லவென்று ஏற்படுத்தப்பட்டது. சிற்பங்கள் பல செதுக்கப்பட்டிருந்தன.

தண்ணீர் அருகிலேயே ஏரியில் கிடைப்பதால் யாத்ரிகர்கள் அங்கே தங்கிக் குளித்துக் கடமைகளை முடித்துக் கொண்டு உணவும் சமைத்து உண்டு ஓய்வு எடுத்துப் பின் செல்வது வழக்கமாக இருந்தது. அன்றைக்கு இரவு வரை மழை பெய்ததால் ஓர் ஊதல் காற்றுடன் அந்த இடமே ஈரப்பிசுபிசுப்புடன் காணப்பட்டது. வெளியே இருந்து எழுந்த சத்தங்களைப் போல் மண்டபத்துக்கு உள்ளே இருந்தும் ஓர் முனகல் கேட்டது. வயோதிகர் ஒருவர் உடல்நிலை சரியில்லாதவரின் முனகல் குரல். மண்டபத்தின் தரையில் கோரைப்பாயைப் பரப்பி மேலே துணிகளைய்ப் போட்டுப் பெரியவரைப் படுக்க வைத்து விட்டு அருகே அமர்ந்திருந்தால் ஓர் இளம்பெண். அவருக்குப் பணிவிடைகளை அவள் தான் செய்து கொண்டிருந்தாள். அந்த மண்டபம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மண் சுவரைத் தற்காலிகமாய் எழுப்பி இரு தனி அறைகள் போலச் செய்திருந்தார்கள். அதில் தான் ஒன்றில் அந்தப் பெரியவரைப் படுக்க வைத்திருந்தாள் அந்த இளம்பெண். அவர் தலைமாட்டில் ஓர் விளக்கு மென்மையான ஒளியைத் தந்து கொண்டிருந்தது. 

அந்தப் பெண் உள்ளே பெரியவரைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மண்டபத்தின் இன்னொரு ஓரத்தில் இருந்த ஓர் யாளிச் சிற்பத்தின் மீது சாய்ந்து கொண்டு வல்லபனும், தத்தனும் பேசிக் கொண்டிருந்தனர். உண்மையில் காரசாரமான விவாதம். அந்தப் பெரியவரையும், இளம்பெண்ணையும் வல்லபன் தன் பொறுப்பில் அழைத்து வந்திருப்பான் போல் அவர்கள் பேச்சில் இருந்து தெரிந்தது. அதை முழுத்தவறு என ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் தத்தன்.  தத்தனைக் கேட்டுக் கொண்டே தான் முடிவெடுத்ததாய்ச் சொன்ன வல்லபனிடம் தத்தன் தான் ஒத்துக் கொண்டதற்கான காரணமே வேறே என்று சொன்னான்.

"அந்தப் பெண்ணின் மாமன் ஒருவர் அரங்கனுடன் புறப்பட்ட ஐந்து பேரில் ஒருத்தர். ஒருவேளை இப்போது அவர் காஞ்சியில் இருந்தால் அவரைச் சந்தித்தால் அரங்கனைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் புதிதாக இருந்தால் நமக்குத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். நம் காரியத்திற்கும் உதவியாக இருக்கும். அதனால் தான் நான் ஒத்துக் கொண்டேன்." என்று தத்தன் சொல்ல, வல்லபன் அது மட்டும் காரணம் அல்ல என்றும் அந்தப் பெண் தத்தனின் உயிரைக்காப்பாற்றியதோடு வல்லபனையும் சேவகர்கள் பிடித்துச் செல்லாவண்ணம் காப்பாற்றிப் பாதுகாத்தாள் என்பதால் அவளுக்குத் தாங்கள் செலுத்தவேண்டிய நன்றிக்கடனாகவும் கூடவே அழைத்து வந்ததாய்ச் சொன்னான்.

No comments: