எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, May 25, 2021

காஞ்சிபுரத்தில் இளைஞர்கள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

தயா சதகம் பாடி கோபண்ணாவை வழி அனுப்பி வைத்தார் தேசிகர். கோபண்ணாவும் தன் அந்தரங்க வேலைக்காரர்களுடன் கிழக்கு நோக்கித் திருமலையில் போய்த் தேடும் எண்ணத்துடன் கிளம்பினார். இரண்டாவது கோஷ்டியாக அவர்கள் சென்றனர்.
***************************************************** 
இங்கே வல்லபனும், தத்தனும் கடைசியாகத் தங்கிய இடத்திலிருந்து இடைவிடாது பயணித்துக் காஞ்சிபுரத்தை அடைந்திருந்தனர். காஞ்சிபுரம் எத்தனையோ பேரின் ஆட்சிகளைக் கண்டிருந்தது. அந்தக் கால கட்டத்தில் சம்புவராயரின் கட்டுப்பாட்டில் இருந்தது. சம்புவராயரின் ராஜ்யத்திற்கு "ராஜ கம்பீரம்" என்னும் பெயர் வழங்கி வந்தது.  காஞ்சிபுரம் செல்ல அவர்கள் மனம் தயங்கினாலும் வேறு வழியில்லாமல் மஞ்சரிக்காகச் செல்ல வேண்டி வந்தது. தங்களிடம் அவள் பொறுப்பை அவள் தாத்தா சுமத்திவிட்டதாக இருவருமே நினைத்தனர். காலை வேளையிலே காஞ்சிபுரத்துக்குள்ளே நுழைந்த அவர்கள் அந்த நகரின் வீதிகள் அப்போது இருந்த சுறுசுறுப்பைக் கண்டு வியந்தார்கள். இத்தனைக்கும் பழைய பெருமை எல்லாம் குறைந்து இருந்தது காஞ்சிபுரம். யானை ஒன்றின் மீது திருமஞ்சனக்குடம் வைக்கப்பட்டு அதன் அருகே இருபக்கமும் அம்பாரியில் பட்டாசாரியார்கள் வீற்றிருந்து கவரி வீசி வர, சங்குகளும் எக்காளங்களும் சப்தமிட பெரிய பெரிய குடைகளுடன் ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட இளைஞர்களுக்கு வியப்பு அதிகமாய் இருந்தது. இம்மாதிரி ஒரு காட்சியை அவர்கள் கண்டதே இல்லை.

நகரத்தின் வீதிகள் கலகலப்புடன் இருந்ததோடு அல்லாமல் போவோரும் வருவோருமாக, வண்டிகள் ஆங்காங்கே ஓசைப்படுத்தப் பல்லக்குகளிலும் பயணித்த மனிதர்களோடு தெருக்கள் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டன.  அங்கே வரை சுல்தான்களின் கொடுமைகள், கொடூரங்கள் வராத காரணத்தால் மக்கள் முகங்களும் மலர்ந்து நிச்சலனமாகக் காணப்பட்டன. இது வல்லபனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.  எங்கு பார்த்தாலும் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு, கமுகு, வாழைமரங்கள் போன்றவையும் கட்டப்பட்டிருக்கவே ஊரில் ஏதோ திருவிழா/அல்லது வேறு ஏதோ விசேஷம் என இருவரும் விசாரித்துத் தெரிந்து கொண்டனர்.  எங்கு பார்த்தாலும் அலங்காரப் பந்தல்களும், அலங்கரிக்கப்பட்ட விசித்திரமான சித்திரங்களுமாகக் காணப்பட்ட வீதிகள் அத்ஹ்டனையும் சுத்தமாகவும் நீளமும் அகலமுமாகக் காணப்பட்டதோடு விதம் விதமான மாக்கோலங்கள் வீதிகளை அலங்கரித்தன.  வல்லபனுக்கும் தத்தனுக்கும் தாங்கள் ஏதோ மாயாலோகத்தில் நுழைந்து விட்டாற்போல் உணர்ந்தார்கள். 

ஆங்காங்கே திண்ணைகள், மாளிகையின் பெரிய கூடங்களில் திவ்யப்ரபந்தங்களைச் சேவிக்கும் கோஷங்களும் அவ்வப்போது கேட்டன.  அதைத் தவிரவும் ஆங்காங்கே பல வீடுகளில் இருந்து வேத கோஷங்களும் ப்ரபந்தங்களின் கோஷங்களுக்கு இணையாகப் போட்டி போட்டுக் கொண்டு கேட்டன.  அதைக் கண்ட வல்லபனுக்கு நெஞ்சு குமுறியது! தத்தனிடம், "தத்தா! நம் நாடும் தமிழ் பேசும் நாடு தானே! அங்கேயும் இப்படித்தானே இருந்திருக்க வேண்டும். இத்தனை கோலாகலங்களோடு ஜனங்கள் வாழ்ந்திருபபர்கள் அல்லவா?  இந்த சுல்தான்களின் ஆட்சியில் அனைத்தும் மறைந்தும்/மறந்தும் போய் விட்டன அல்லவா?" என்று மனம் நொந்து கலங்கினான் வல்லபன். மஞ்சரியும் இதுநாள் வரை சுல்தான்கள் ஆட்சியிலேயே இருந்ததால் அவளுக்கும் இதெல்லாம் புதுமையாகவே இருந்தது.  காஞ்சியின் காட்சிகள் பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் உண்டு பண்ணின. 

மூவரும் ஓர் சத்திரத்தைத் தேடிப் பிடித்துத் தங்க எண்ணினார்கள். அதன் பின்னர் எப்படியேனும் மஞ்சரியின் மாமனைத் தேடி அவரிடம் அவளை ஒப்படைக்க வேண்டும்.  ஆகவே சத்திரம் ஒன்றைக் கண்டு பிடித்து அங்கே தங்க இடம் பார்த்துக் கொண்டு மஞ்சரியை அங்கே பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டுப் பின்னர் இருவரும் மஞ்சரியின் மாமனைத் தேடிச் சென்றார்கள்.  பகல் முழுவதும் தேடியும் மஞ்சரி சொன்ன "சிங்கழகர்" என்னும் பெயருள்ள அந்த மாமனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாலையும் ஆகி விட்டது. கலங்கி நின்ற அவர்களில் தத்தன், வல்லபனைப் பார்த்து, "வல்லபா! ஊரில் உள்ள வைணவ மடங்களில் கேட்டுப் பார்க்கலாமா? நான் அவற்றிற்குச் சென்று ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டு வருகிறேன். இப்போது இரவாகி விட்டதால் மஞ்சரிக்கு யாரேனும் காவல் இருக்க வேண்டும். ஆகவே நீ போய்ச் சத்திரத்தில் அவளுக்குத் துணை இரு!" என்று சொன்னான்.

அதன் பேரில் வல்லபன் சத்திரத்துக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டு சத்திரத்தின் முற்றத்தில் இருந்த துளசிமாடத்துக்கு அருகே உள்ள மேடையில் அமர்ந்து கொண்டு யோசனையில் இருக்க உள்ளே இருந்த மஞ்சரி வெளியே வந்து வல்லபனைப் பார்த்த வண்ணம் எதிரே அமர்ந்து கொண்டாள். தத்தன் தனியே தேடப் போயிருப்பது குறித்துத் தன் கவலையைத் தெரிவித்தாள். தத்தன் மீது அவள் வைத்திருக்கும் கரிசனமும் , பாசமும் வல்லபனைக் கவர்ந்தன. 

No comments: